Monday, June 16, 2025

"நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்." (2 கொரிந்தியர் 8:9)

"நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்."
(2 கொரிந்தியர் 8:9)

புனித சின்னப்பர் தான் நற்செய்தியை அறிவித்து மனம் திருப்பிய கொரிந்து நகர மக்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகள்.

இயேசுவின் எந்த பண்புகளை அவர்களும் கொண்டிருக்க வேண்டும் என்பதை இவ்வார்த்தைகள் வலியுறுத்துகின்றன.

அவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் கூறப்பட்ட வார்த்தைகள்.

இறைமகன் இயேசு இயல்பிலேயே செல்வந்தர்.

கோடிக்கணக்கான விண்மின்களையும், கோள்களையும் கொண்ட மாபெரும் பிரபஞ்சம் அவரால் படைக்கப்பட்டது, அவருக்கு மட்டுமே உரியது.

ஆனால் பிரபஞ்சத்தை அவர் அனுபவிப்பதற்காகப் படைக்கவில்லை.

நமக்காகப் படைத்தார்.

இந்த உலகம் முழுவதும் அவருக்கு உரியதாக இருந்தும் அவர் மனிதனாகப் பிறக்க ஒருமாட்டுத் தொழுவையே தேர்ந்தெடுத்தார்.

செல்வந்தர் ஏன் ஏழையாகப் பிறந்தார்?

நம்மைச் செல்வந்தர்களாக மாற்ற.

இறைவன் வாழ்வது ஆன்மீக வாழ்க்கை.

நாமும் ஆன்மீக வாழ்க்கை வாழவே இறைவன் நம்மைப் படைத்திருக்கிறார்.

ஆன்மீக வாழ்க்கை என்றால்?

இறைவனது மகிமைக்காக வாழும் வாழ்க்கை.

இறைவன் படைத்த பிரபஞ்சம் ஒரு லௌகீகப் பொருள்.

லௌகீகப் பொருளாகிய உலகில் நாம் வாழ்ந்தாலும் இறைவனுக்காக வாழ்வது ஆன்மீக வாழ்க்கை.

இறைவனுக்காக வாழாமல் உலகம் சார்ந்த இன்பத்துக்காக மட்டும் வாழ்வது லௌகீக வாழ்க்கை.

நாம் உலகில் உலகுக்காக வாழாமல் இறைவனுக்காக வாழ வேண்டும்.

இறைவனுக்காக வாழ உலகப் பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நண்பர் ஒருவருக்கு ஏதாவது காரணத்தை முன்னிட்டு வாழ்த்துக் கூற வேண்டுமென்றால் நமது வாழ்த்துக்கு அடையாளமாக ஏதாவது ஒரு பரிசுப் பொருள் வாங்கிக் கொடுக்கிறோம்.

இங்கே முக்கியத்துவம் பெறுவது பரிசுப் பொருள் அல்ல.
நமது வாழ்த்துதான்.

அவ்வாறே கடவுள் நம்மை ஒவ்வொரு வினாடியும் பராமரித்து வருவதற்கு நன்றியாக இவ்வுலகப் பொருள் ஒன்றைக் காணிக்கையாகச் செலுத்துகிறோம்.

காணிக்கையாகச் செலுத்தப்படுவது ஒரு லௌகீகப் பொருளாக இருந்தாலும் அது இறைவனுக்கு காணிக்கையாகச் செலுத்தப்படுவதால் ஆன்மீகப் பொருளாக மாறிவிடுகிறது.

நாம் உண்ணும் உணவு எந்தப் பொருளாக இருந்தாலும் அது உணவாக நமது உடலிலுக்குள் சென்றபின் நமது தசையும் இரத்தமுமாக மாறிவிடுகிறதோ

அவ்வாறே உலகைச் சார்ந்த லௌகீகப் பொருள் ஆண்டவருக்குக் காணிக்கையாக செலுத்தப்படும்போது ஆன்மீகப் பொருளாக மாறிவிடுகிறது.

இங்கே முக்கியத்துவம் பெறுவது காணிக்கை, பொருள் அல்ல.

ஆக இறைவன் லௌகீகப் பொருளாகிய உலகைப் படைத்தது ஆன்மீக நோக்கத்துக்காக.

அதன் ஆன்மீக நோக்கம் இரண்டு விதமாக நிறைவேறும்.

அதைக் கோவிலில் காணிக்கையாகச் செலுத்தும்போதும்,

இறைவனால் படைக்கப்பட்ட நமது அயலானுக்கு உதவியாகக் கொடுக்கும்போதும்.

நாம் நம்மைப் படைத்துப் பராமரித்து வரும் கடவுளை முழு மனதோடு நேசிக்க வேண்டும்.

நம்மை நாம் நேசிப்பதுபோல நமது அயலானையும் நேசிக்க வேண்டும்.

நம்மிடம் இறைவனின் சாயல் இருக்கிறது,  ஆகவே நம்மை நாம் நேசிக்க வேண்டும்.

நமது அயலானிலும் இறைவனின் சாயல் இருக்கிறது. ஆகவே நமது அயலானை நாம் நேசிக்க வேண்டும்.

நம்மிலும், நமது அயலானிலும் இறைவனின் சாயல் இருக்கிறது.

ஆகவே நமது அன்பிலும் இறைவனின் சாயல் இருக்கிறது.

அதாவது இறைவனின் மகிமைக்காக நம்மையும், அயலானையும் நேசிக்கும் போது அது ஆன்மீகம்.

இறைவனுக்காக அல்லாமல் நமது சுய திருப்திக்காக நேசித்தால் அது லௌகீகம்.

நாம் இறைவனை  இறைவன் என்பதற்காக அல்லாமல் நமக்கு வேண்டிய உதவிகளுக்காக மட்டும் நேசித்தால் அதற்குள் லௌகீகம் புகுந்து விடுகிறது.

நல்ல சுகம் வேண்டும், 
நல்ல வேலை கிடைக்க வேண்டும், 
நல்ல வருமானம் கிடைக்க வேண்டும்
போன்ற உலகைச் சார்ந்த வசதிகளுக்காக மட்டும் இறைவனிடம் வேண்டுபவர்கள் லௌகீகவாதிள்.

ஏனெனில் அவர்கள் இறைவனைத் தங்கள் உலக வாழ்க்கைக்காகப் பயன்படுத்துகிறார்கள்.

அதாவது தங்களை இறைப்பணிக்காகப் பயன்படுத்தாமல் இறைவனை தங்கள் சொந்த நலனுக்காகப் பயன்படுத்த முயல்கிறார்கள்.

நமது வாழ்க்கை இறைவனை மையமாகக் கொண்டிருக்க வேண்டும், நம்மையே மையமாகக் கொண்டிருக்கக் கூடாது.

இறைவனது விருப்பம் நம்மில் நிறைவேற வேண்டும்.

இறை விருப்பம் நிறைவேற நமது விருப்பத்தைத் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

புனித அல்போன்சா வாழ்நாளில் பெரும் பகுதி சுகமில்லாதிருந்தாள்.

அதுவே இறைவன் சித்தம் என்பதை உணர்ந்து தனது சுகமின்மையை இறைவனுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தாள், புனிதையானாள்.

உலகியலில் ஏழையாகவும், ஆன்மீகத்தில் செல்வியாகவும் வாழ்ந்தாள்.

இயேசு ஏழையாகப் பிறந்ததன் நோக்கம் நம்மை ஆன்மீகத்தில் செல்வந்தர்களாக மாற்ற.

அன்னை மரியாள் அருட் செல்வத்தால் நிறைந்தவள்.

நாமும் நமது அன்னையைப் போல் அருட் செல்வர்களாக வாழ்வோம்.

நம்மிடம் உள்ள பொருளைப் பயன்படுத்தி அருளை ஈட்டுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment