Monday, July 7, 2025

சண்டைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் காதல்!!

‌ 

சண்டைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் காதல்!!


ஒரு பெரிய அரங்கம் 

25 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளில் சிறந்த தம்பதிகளைத்  தேர்ந்தெடுத்து
ஒரு கார் பரிசு வழங்குவது என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்தது.


நூற்றுக்கணக்கான தம்பதிகள் கலந்துகொண்டார்கள்.

அதில் ஒரு மனைவி 

''அப்படி என்னத்த பெருசா வாழ்ந்து கிழிச்சிட்டோம்னு சொல்லச் சொல்லக் கேக்காம இந்த போட்டிக்கு கூட்டிட்டு வர்றீங்க '' என்றபடி சண்டையிட்டு கொண்டே உள்ளே வந்தாள்! 


கொஞ்ச நேரத்தில் 
போட்டி தொடங்கியது, 

கணவன் மனைவியை தனித்தனியாக அழைத்து நிறைய கேள்விகள் கேட்டார்கள் 

கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் ஓரளவுக்கு சரியான பதிலை சொன்னார்கள் 


அதில் ஒரு சோடி 
சொன்ன பதில்கள் அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தின.


யாரிடமும் இல்லாத அளவிற்கு அவர்களிடத்தில் அவ்வளவு ஒற்றுமையும் பரஸ்பர புரிதலும் விட்டுகொடுத்தலும் எல்லாமே நிறைந்திருந்தது.


அவர்களுக்கு கிடைத்த மதிப்பெண் 100/100! 

 எல்லோருக்குமே தெரிந்துவிட்டது அவர்கள் தான் ஜெயிக்கப்போகிறார்கள் என்று, 


எல்லோரிடமும் கேள்வி கேட்டு முடித்தபின் நூறு மதிப்பெண்கள் வாங்கிய  சிறந்த தம்பதிகளையும்


மிகக்குறைவாக பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கிய 
தம்பதிகளையும் மேடைக்கு அழைத்தார்கள்! 


பூஜ்ஜியம் வாங்கியது வேறுயாரும் இல்லை, வரும்போதே சண்டைபோட்டுக்கொண்டு வந்தார்களே அவர்கள் தான்.

 இருவரும் மேடைக்கு வந்தார்கள், 

ஜீரோ மதிப்பெண் பெற்றவர்களைப் பார்த்து  "காதல் திருமணமா?" என்று கேட்க,

 "இல்லை, arranged marriage' என்றார்கள் .


"எத்தனை குழந்தைகள்?" என்றதற்கு

 நான்கு என்றார்கள், 

"திருமணம் ஆகி எத்தனை வருடங்கள் ஆகிறது"

 என்றதற்கு 

"35 வருடங்கள்" என்று சொல்ல,

 எல்லோரும் சிரித்துவிட்டார்கள்!


35 வருடங்களாகியும் 
ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவில்லையே
என்று ஏளனமாய் கேலி பேசினார்கள், 

அவமானம் தாங்கமுடியாமல் அவர்களுக்கு அழுகை வர கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டார்கள்.

ஆனால் போட்டியின் நடுவர் 
இந்த போட்டியில் கலந்துகொண்ட 500 தம்பதிகளில்

ஜீரோ மார்க் வாங்கிய தம்பதிகளுக்குதான் 
காரைப் பரிசாக அளித்தார்! 


காரணம்...

எல்லாவித மனப் பொருத்தங்களோடும் புரிதல்களோடும் 25 வருடங்கள் வாழ்வது பெரியவிஷயம் கிடையாது, 

எந்த ஒரு மனஒற்றுமையும் புரிதலும் இல்லாவிட்டாலும் 
35 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்களே 

இதுதான் உண்மையிலேயே மிகப்பெரிய சாதனை என்று பாராட்டினார்! 

இருவரும் 
ஆனந்தக்கண்ணீரோடு 
கார்ச் சாவியை வாங்கிக்கொண்டு செல்ல, 

எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்! 

எல்லோரும் வெளியேறினார்கள்.


சிறிது நேரத்தில் எல்லோரும் கலைந்து செல்ல, தூரத்தில் யாரோ சண்டை போடுவது போல் சத்தம் கேட்டது.

எல்லோரும் திரும்பி பார்க்க,

காரைப் பெற்றவர்கள் சண்டை போட்டுக் கொண்டே காரை சுற்றிச் சுற்றி வந்து வந்து கொண்டிருந்தார்கள்.

 மனைவி:

 "நானும் எத்தனையோ நாள் தலைப்பாடா அடிச்சிகிட்டேன்,

 சும்மா இருக்கிற நேரத்துல எதாவது உருப்படியா பண்ணுங்கன்னு, 


டிரைவிங் கத்திருந்தாலாவது இந்நேரம் உபயோகமா இருந்திருக்கும்...


உங்கள கட்டிகிட்டு என்ன சுகத்தைக் கண்டேன்?"

"காருக்குள் உட்கார். சுகமாக இருக்கும்."

"உட்கார்ந்து?"

"நடந்து கொண்டு போடும் சண்டையை உட்கார்ந்து கொண்டு போடுவோம்."

"கொஞ்சமாவது மூளை இருக்கா?
எதாவது டிரைவரைப் பார்த்து வாருங்கள். வீட்டுக்குப் போவோம்.

எதுக்கு இப்படி குட்டிபோட்ட பூனை மாதிரி என் பின்னாடியே சுத்தறீங்க?!

உங்களுக்கு  மூட்டுவலி வேற.

பேசாம ஒரு இடத்துல உட்காருங்க.. 

அப்புறம் ராத்திரிபூரா லட்சுமி லட்சுமின்னு பொலம்புவீங்க

 நான்தான் என்னவோ ஏதோன்னு எண்ணை தேச்சி விடனும்...

எனக்குன்னு பாத்து கட்டிவச்சான் பாரு எங்கப்பன்..

.சீமையில இல்லாத மாப்பிள்ளைய,

அவனச் சொல்லனும்."

"உட்கார்ந்தா எப்படி டீ  ட்ரைவரைப் பார்ப்பது?"


வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒரு ட்ரைவர் இருந்தார்.

"சரி, காருக்குள் ஏறுங்கள். நான் வீட்டில் கொண்டு விடுகிறேன்.

(தன் மனைவியைப் பார்த்து)

நீயும் காரில் முன் சீட்டில் உட்கார்ந்து கொள். உன்னை நமது வீட்டில் இறக்கி விடுகிறேன்."

கார் புறப்பட்டது.
..........................................
அன்பையும் காதலையும் வெளிப்படுத்த அழகான வார்த்தைகள் தான் வேண்டும் என்று யார் சொன்னது? 

மானங்கெட்ட சண்டைகளிலும்  காதல் மறைந்திருக்கும்!!

உண்மையான காதல்.

சண்டைகளுக்கு மத்தியில் சாகாத காதல்தான் உண்மையான காதல்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment