Monday, April 28, 2025

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.(தொடர்ச்சி) 9.கல்வாரி நோக்கிப் பயணம்.

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.
(தொடர்ச்சி)

9.கல்வாரி நோக்கிப் பயணம்.

பிலாத்துவின் அரண்மனையில் இருந்து கல்வாரி மலைக்கு ஏறத் தாழ ஒரு மைல் இருக்கும்.

கல் தூணில் கட்டிவைத்து சாட்டையால் அடிக்கப் பட்டதிலேயே உடலில் பாதி இரத்தம் வெளியேறியிருக்கும் 

மீதி இரத்தத்தையும் சிந்துவதற்காக சிலுவையுடன் கல்வாரிப் பயணம்.

வழி நெடுக பாஸ்கா விழாவுக்காக வந்த மக்கள் நடமாட்டம் இருக்கும்.

அவர்களில் அவரால் குணம் பெற்றவர்கள் அநேகர் இருப்பர்.

நற்செய்தியைக் கேட்டவர்களும் இருப்பர்.

அவர் மேல் பொறாமை கொண்டவர்களும் இருப்பர்.

அவர்கள் மத்தியில் அவர்கள் இதுவரைப் பார்த்திராத அலங்கோலத்தில் சுமக்க முடியாத சிலுவையைச் சுமந்து கொண்டு நடக்க முடியாமல் நடக்கிறார்.

ஆரம்பத்தில் சீமோன் என்பவர் படை வீரர்களின் கட்டாயத்தின் பேரில் கொஞ்ச நேரம் சிலுவையைச் சுமக்கிறார் 

சிலுவையில் அறையும் பொறுப்பு நூற்றுவர் தலைவரிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

அவருடைய படை வீரர்களுக்கு வேலையே இயேசுவைச் சாட்டையால் அடித்துக் கொண்டு போவதுதான்.

அவரால் சிலுவையைச் சுமக்க முடியாமல் கீழே விழும் போதெல்லாம் 

வண்டியை இழுக்கும் போது விழுந்த மாட்டைத் தார்க் கம்பால் அடித்து எழுப்புவது போல

சாட்டையால் அடித்து எழுப்புகிறார்கள்.

இது வரைக் கிழியாத தோலும் கிழிந்து உடலில் மீதியிருக்கும் இரத்தமும் வழி நெடுக சிந்தி ஓடுகிறது.

அன்னை மரியாளும் மற்ற பக்தியுள்ள பெண்களும் அழுது கொண்டே பின் செல்கிறார்கள்.

அன்னை மரியாள் மகனுக்கு ஆறுதல் கூறிக்கொண்டே பின் தொடர்கிறாள்.

அவளுக்கும், மற்ற பெண்களுக்கும் இயேசு ஆறுதல் கூறுகிறார்.

வெரோனிக்கா என்ற பெண் இரத்தம் வடிந்து கொண்டிருந்த இயேசுவின் முகத்தை ஒரு துணியால் துடைக்கிறாள்.

இயேசுவின் முகச் சாயல் அப்படியே அத்துணியில் பதிகிறது.

அத்துணி இன்றும் ரோமில் புனிதர் இராயப்பர் ஆலயத்தில் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நிமிடக் கணக்கில் கடக்க முடியும் தூரத்தை இயேசு சிலுவையுடன் ஒரு மணி நேரமாவது நடந்திருப்பார்.

 விண்ணகப் பாதையில் நடக்கும் போது நாம் செய்யும் எல்லாப் பாவங்களுக்கும் பரிகாரமாகத் தன் சிலுவைப் பாதைப் பயணத்தை இயேசு தந்தைக்கு ஒப்புக் கொடுக்கிறார்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment