Tuesday, April 22, 2025

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.(தொடர்ச்சி)3. இயேசுவின் பிறப்பு.

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.
(தொடர்ச்சி)
3. இயேசுவின் பிறப்பு.

யோசேப்பு கலிலேயாவில் உள்ள நாசரேத்தில் வாழ்ந்து வந்தாலும் அவருடைய பூர்வீகம் யூதேயாவிலுள்ள பெத்லகேம்.

ரோமைப் பேரரசர் அகஸ்தஸ் சீசரின் கட்டளைக்கு இணங்க தனது பெயரைப் பதிவு செய்ய அவருடைய மூதாதையர் வாழ்ந்த பெத்லகேமுக்கு நிறைமாத கர்ப்பிணியான மரியாளையும் அழைத்துக் கொண்டு யோசேப்பு செல்கிறார்.

அங்கு தங்க வீடும் கிடைக்கவில்லை, சத்திரத்தில் இடமும் கிடைக்கவில்லை.

ஒரு மாட்டுத் தொழுவம்தான் கிடைக்கிறது.

யோசேப்பு அதைச் சுத்தம் செய்கிறார்.

அந்தத் தொழுவத்தில்தான் இயேசு பிறக்கிறார்.

மரியாள் குழந்தையைத் தீவனத் தொட்டியில் படுக்க வைக்கிறார்.

அவர் பிறந்த செய்தி வானதூதர் மூலம் வயல் வெளியில் சாமக் காவல் காத்துக் கொண்டிருந்த ஆட்டு இடையர்களுக்குத் தெரிவிக்கப் படுகின்றது.

வானதூதர் அவர்களிடம், "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். 

இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். 

குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்" என்கிறார். 

உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, "உன்னதத்தில் கடவுளுக்கு மகிமை உரித்தாகுக! 
உலகில் நல்மனதோர்க்கு சமாதானம் உண்டாகுக!" என்று கடவுளைப் புகழ்ந்தது. 

உடனே இடையர்கள் சென்று  இயேசு பாலனை ஆராதித்தார்கள்.

இடையர்களைப் போலவே அவர்கள் வீட்டுப் பெண்மணிகளும், சிறுவர் சிறுமியரும் வந்து ஆராதித்தார்கள்.

தேய்வக் குழந்தையை மாட்டுத் தொழுவத்தில் விட்டு விட்டுப் போக மனது வருமா?

திருக்குடும்பத்தை இடையர் குடிக்கு அழைத்துச் சென்று ஒரு வீட்டில் தங்க வைத்தார்கள்.

அங்கிருந்து தான் திருக்குடும்பம் இயேசுவைக் காணிக்கையாக ஒப்புக் கொடுக்க நாற்பதாவது நாள் செருசலேம் ஆலயத்துக்குச் சென்றார்கள்.

கீழ்த்திசை ஞானிகளும் இயேசுவை ஆராதிக்க அங்குதான் வந்தார்கள்.

அங்கிருந்து தான் திருக்குடும்பம் எகிப்துக்குப் பயணித்தது.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment