செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.
(தொடர்ச்சி)
8.இயேசுவின் தலையில் முள்முடி.
அன்னை மரியாளின் முகத்தையும் இயேசுவின் முகத்தையும் பார்த்துக் கொண்டே செபிக்கிறோம்.
இயேசு அரசரை வேதனை கலந்து கேலி செய்வதற்காக
வீரர்கள் ஒரு முள்முடி பின்னி அவர் தலையின்மேல் வைத்து,
செந்நிற மேலுடையை அவருக்கு அணிவிக்கிறார்கள்.
அவரிடம் வந்து, "யூதரின் அரசே வாழ்க!" என்று சொல்லி அவருடைய கன்னத்தில் அறைந்தார்கள்.
பின் முள்முடி மேலும் அடித்தார்கள்.
ஒவ்வொரு முள்ளும் தலையைப் பொத்துக் கொண்டு கீழ் நோக்கி இறங்கியது.
கண்கள், காதுகள், மூக்கு, வாய் வரைக்கும் இறங்கி அவற்றுக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கிளது.
அந்த உறுப்புகளால் நாம் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசு அதை ஒப்புக் கொடுக்கிறார்.
இந்த நிலையில் இயேசுவைப் பார்த்தால் அவர்கள் இரங்கு வார்கள் என்று நினைத்து
பிலாத்து அவர்களிடம், "அவனை நான் உங்கள்முன் வெளியே கூட்டிவருகிறேன்,
பாருங்கள்.
அவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை என்பதை அறிந்;துகொள்ளுங்கள்" என்கிறான்.
இயேசு முள் முடியும் செந்நிற மேலுடையும் அணிந்தவராய் வெளியே வந்தார். பிலாத்து அவர்களிடம், "இதோ! மனிதன்" என்றான்.
தலைமைக் குருக்களும் காவலர்களும்,
"சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்"
என்று கத்துகிறார்கள்.
பிலாத்து அவர்களிடம், "நீங்களே இவனைக் கொண்டு போய்ச் சிலுவையில் அறையுங்கள். இவனிடம் குற்றம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என்கிறான்.
யூதர்கள் அவரைப் பார்த்து, "எங்களுக்கு ஒரு சட்டம் உண்டு. அச்சட்டத்தின்படி இவன் சாகவேண்டும்.
ஏனெனில் இவன் தன்னையே இறைமகன் என உரிமைகொண்டாடுகிறான்" என்கின்றனர்.
அவன் மீண்டும் ஆளுநர் மாளிகைக்குச் சென்று இயேசுவிடம், "நீ எங்கிருந்து வந்தவன்?" என்று கேட்கிறான்.
ஆனால் இயேசு அவனுக்குப் பதில் கூறவில்லை.
அப்போது பிலாத்து, "என்னோடு பேசமாட்டாயா? உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு, உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்குஅதிகாரம் உண்டு என்பது உனக்குத் தெரியாதா?" என்கிறான்.
இயேசு மறுமொழியாக, "மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என் மேல் எந்த அதிகாரமும் இராது. ஆகவே என்னை உம்மிடம் ஒப்புவித்தவன்தான் பெரும் பாவம் செய்தவன்" என்கிறார்.
பிலாத்து அவரை விடுவிக்க வழிதேடியும் கிடைக்கவில்லை.
இறுதியில் அவரைச் சிலுவையில் அறைய அவர்களிடம் ஒப்படைத்து விடுகிறான்.
அன்னை மரியாளைப் பொறுத்த வரை இது எதிர் பார்த்த ஒன்றுதான்.
ஏனெனில் அவள் மனம் கலங்காதிருக்கும்படி என்னென்ன நடக்கும் என்று ஏற்கனவே இயேசு கூறியிருக்கிறார்.
அவள் ஒவ்வொரு நிகழ்வையும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாகத் தந்தைக்கு ஒப்புக்கொடுக்கிறாள்.
மற்ற பெண்கள் கண்களில் நீர் மல்க அன்னைக்கு ஆறுதல் கூறுகிறார்கள்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment