செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.
(தொடர்ச்சி)
4இயேசு காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப் பட்டது.
திருக்குடும்பம் ஆயர் குடியில் தங்கியிருந்த காலக் கட்டத்தில் நான்கு நிகழ்வுகள் நடந்தன.
1.எட்டாம் நாள் இயேசு என்னும் பெயர் சூட்டினார்கள்.
2. நாற்பதாம் நாள் குழந்தை இயேசுவை ஆலயத்துக்கு அழைத்துச் சென்று தந்தை இறைவனுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தார்கள்.
3. கீழ்த்திசை ஞானிகள் குழந்தை இயேசுவைப் பார்க்க வந்தார்கள்.
4. அவர்கள் சென்றபின் திருக்குடும்பம் எகிப்துக்குப் பயணித்து.
இவற்றில் செபமாலைத் தியானத்திற்காக எடுத்துக் கொள்வது
நாற்பதாம் நாள் குழந்தை இயேசுவை ஆலயத்துக்கு அழைத்துச் சென்று தந்தை இறைவனுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தது பற்றி.
மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.
பெத்லகேமிலிருந்து செருசலேம் ஆலயத்துக்கு சுமார் 8.கி.மீ. தூரம்.
போய் வர 16 கி.மீ.
இயேசு கடவுள். தந்தை அவருள் இருக்கிறார், அவர் தந்தையுள் இருக்கிறார்.
அவர் இருக்கும் இடம்தான் ஆலயம்.
அவரை அவருக்கே (கடவுளுக்கே) ஒப்புக் கொடுக்க எருசலேம் போக வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் அவர் ஒரு யூதர். யூத மதச் சட்டத்தை மதிக்கிறார்.
ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்" என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.
ஆகவே கீழ்ப்படிதலுடன் யோசேப்பும் மரியாளும் குழந்தையுடன் ஆலயத்துக்குச் செல்கிறார்கள்.
அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு ஒருசோடி மாடப்புறாக்களை அவர்கள் பலியாகக் கொடுத்தார்கள்.
மெசியாவின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்த
சிமியோன் ஆலயத்துக்கு வந்தார்.
குழந்தை இயேசுதான் மெசியா என்பதை அவரைப் பார்த்தவுடன் உணர்ந்து கொண்டார்.
அவர் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,
"ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.
ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு,
நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.
இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவெ உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை" என்று செபிக்கிறார்.
குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர்.
சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி,
"இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்.
இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும்.
உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" என்கிறார்.
அன்னை மரியாள் அனுபவிக்கப் போகும் வியாகுலங்களை முன்னறிவிக்கிறார்.
கோவிலில் பணிபுரிந்து கொண்டிருந்த அன்னா என்னும் இறைவாக்கினர் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசுகறார்.
குழந்தை இயேசுவைத் தந்தை இறைவனுக்கு ஒப்புக் கொடுத்தது பற்றி தியானிக்கும் போது நாம் நம்மையே இறைப் பணிக்கு ஒப்புக் கொடுப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment