செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.
(தொடர்ச்சி)
7.நமது பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசு அடிபட்டார்.
இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச் செல்கிறார்கள். அங்கே மறைநூல் அறிஞரும், மூப்பர்களும் கூடி வருகிறார்கள்.
இராயப்பர் தொலைவில் அவரைப் பின்தொடர்ந்து தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து உள்ளே நுழைந்து காவலரோடு உட்கார்கிறார்.
அன்னை மரியாள் தூய ஆவியால் இயக்கப்பட்டு மற்ற பெண்களுடன் தலைமை குருவின் இல்லத்துக்கு வந்தது மட்டுமல்ல இறுதி வரை இயேசுவைப் பின் தொடர்கிறாள்.
இயேசு நமது பாவங்களுக்காக பலியிடப்படுவதற்கென்றே அவளால் வளர்க்கப்பட்ட ஆட்டுக்குட்டி.
எல்லா நிகழ்வுகளையும் பார்ப்பது மட்டுமல்ல ஒவ்வொன்றையும் தந்தைக்கு ஒப்புக் கொடுத்துக் கொண்டு தான் இயேசுவைப் பின் தொடர்கிறாள்.
நாமும் அன்னையுடன் பயணிப்போம்.
தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி சொல்கிறார்கள்.
"இவன் கடவுளுடைய ஆலயத்தை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான்"
இயேசு அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை.
தலைமைக் குரு அவரிடம்,
"நீ கடவுளின் மகனாகிய மெசியாவா?"
அதற்கு இயேசு, "நீரே சொல்லுகிறீர்;
மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்" என்கிறார்.
இதைக் கடவுள் நிந்தனை என்று தீர்மானித்து அவர் சாக வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள்.
பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்து
அவரைக் கட்டி ஆளுநர் பிலாத்துவிடம் இழுத்துச்
செல்கிறார்கள்.
விசாரணைக்காக அவரிடம் ஒப்படைக்கிறார்கள்.
பிலாத்து அவரை நோக்கி
"நீ யூதரின் அரசனா?" என்று கேட்கிறார்.
அதற்கு இயேசு, "அவ்வாறு நீர் சொல்கிறீர்" என்று கூறுகிறார்.
தலைமைக் குருக்களும் மூப்பர்களும் அவர்மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை.
பிலாத்து அவரிடம், "உனக்கு எதிராக எத்தனையோ சான்றுகள் கூறுகிறார்களே, உனக்குக் கேட்கவில்லையா?" என்கிறார்..
அவரோ ஒரு சொல்கூட மறுமொழியாகக் கூறவில்லை. ஆகவே ஆளுநர் மிகவும் வியப்புற்றார்.
பிலாத்து குற்றம் சாட்டினவர்களைப் பார்த்து, "நான்
உங்களுக்காக ஒரு கைதியை விடுதலை செய்வது வழக்கம்.
இயேசுவை விடுதலை செய்யவா?"
''பரபாவை விடுதலை செய்யுங்கள்.
இயேசுவை சிலுவையில் அறையுங்கள்."
பிலாத்து நடுவர் இருக்கைமீது அமர்த்திருந்தபொழுது அவனுடைய மனைவி அவனிடம் ஆளனுப்பி,
"அந்த நேர்மையாளரின் வழக்கில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில் அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்" என்று கூறுகிறார்.
ஆனால் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் இயேசுவைச் சிலுவையில் அறைவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
பிலாத்து எவ்வளவு முயன்றும் பயனில்லை.
"இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறித் தன் கைகளைக் கழுவுகிறான்.
அதற்கு மக்கள் அனைவரும், "இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும்" என்று பதில் கூறுகிறார்கள்.
இயேசுவைக் கசையால் அடிக்க உத்தரவிடுகிறார்.
படைவீரர்கள் இயேசுவை ஒரு கல் தூணில் கட்டிவைத்து சாட்டையால் உடல் முழுவதையும் அடிக்கிறார்கள்.
உச்சந்தலை தொடங்கி உள்ளங்கால் வரை அனைத்து உறுப்புக்களையும் அடிக்கிறார்கள்.
ஒவ்வொரு உறுப்பாலும் நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக ஒவ்வொரு உறுப்பையும் சாட்டையடிகள் குத்திக் கிழிக்கின்றன.
இரத்தம் பீறிட்டு வெளியில் கொட்டியது.
கண்ணீர் ஆறாய் ஓட தன் மகனைப் பார்த்துக கொண்டிருந்த அன்னை மரியாள்,
''தந்தையே, உமது பிள்ளைகள் தங்கள் உடலால் செய்த சகல பாவங்களுக்குப் பரிகாரமாக உமது திருமகன் அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்.
மக்களின் பாவங்களுக்குப் பரிகாரமாகத் அவர் படும் வேதனையை உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.
ஏற்றுக் கொண்டு அனைத்துப் பிள்ளைகளையும் மனம் திருப்பி மன்னித்தருளும்.''
என்று வேண்டுகிறாள்.
நமது உடல் படைக்கப்பட்டிருப்பது இறைப் பணிக்கு,
இரைப் பணிக்கு அல்ல என்பதை நினைவில் கொள்வோம்.
பாவம் செய்யப் பயன்படுத்திய உடலைப் பாவப் பரிகாரம் செய்யப் பயன்படுத்துவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment