"பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார்."
(அரு. 20:8)
இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது வெள்ளிக்கிழமை மாலையில்.
ஞாயிற்றுக்கிழமை காலையில்
மகதலா மரியாள், அன்னை மரியாளின் தங்கை மரியாள்,
அருளப்பரின் தாய் சலோமி மரியாள் ஆகியோர் கல்லறைக்கு வந்தார்கள்.
அதற்கு முன்பே உயிர்த்தெழுந்து விட்ட இயேசு அவர்களுக்கு காட்சியளித்தார்.
அவர்கள் புறப்பட்டுச் சென்று சீடர்களிடம் இதை அறிவித்தார்கள்.
இதைக் கேட்ட இராயப்பரும் அருளப்பரும் கல்லறைக்குப் புறப்பட்டனர்.
அருளப்பர் இராயப்பரை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.
அவர் குனிந்து கல்லறைக்குள் பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்;
ஆனால் உள்ளே நுழையவில்லை.
அவருக்குப் பின்னால் வந்த இராயப்பர் நேரே கல்லறைக்குள் நுழைந்தார்.
அங்குத் துணிகளையும்,
இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார்.
அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த அருளப்பர் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார்.
இயேசு உயிர்த்தெழுந்தபின்பு கல்லறைக்கு வந்ததாக மூன்று பெண்கள் குறிப்பிடப் பட்டிருக்கிறார்கள்.
ஆனால் இயேசுவின் தாய் கல்லறைக்கு வரவில்லை.
ஏன்?
இயேசு பாடுகள் படுவதற்கு முன்பே பலமுறை தனது பாடுகளைப் பற்றியும், சிலுவை மரணத்தைப் பற்றியும், உயிர்ப்பைப் பற்றியும் முன்னறிவித்திருந்தார்.
ஆனால் அன்னை மரியாளைத் தவிர வேறு யாரும் அதை நம்பவில்லை.
நம்பாதவர்கள் தான் கல்லறைக்கு வந்தார்கள்.
அவரது உடலில் நறுமணப் பொருட்களைப் பூசுவதற்காக வந்தார்கள்.
இயேசு உயிர்ப்பார் என்று உறுதியாக விசுவசித்த அன்னை மரியாள் இயேசுவின் வரவை எதிர்பார்த்துக் கொண்டு வீட்டிலேயே இருந்தாள்.
இயேசுவும் அதி காலையிலேயே உயிர்த்தெழுந்து தனது தாய்க்குக் காட்சி கொடுத்து விட்டு தான் மற்றவர்களுக்குக் காட்சி கொடுத்தார்.
அதைப் பற்றி நற்செய்தி நூல்களில் குறிப்பிடப்
படவில்லை.
இயேசு சீடர்களுக்குக் காட்சி கொடுக்குமுன் மூன்று பெண்களுக்குக் காட்சி கொடுத்தார்.
ஏன்?
சீடர்கள் இயேசுவால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்.
மூன்று ஆண்டுகள் இயேசுவோடே இருந்து பயிற்சி பெற்றவர்கள்.
தன்னைப் பற்றி அவர்களிடம் தான் அதிகம் வெளிப்படுத்தி யிருந்தார்.
ஆனால் அவர்கள் பயந்து போய் வெளியே வராமல் அறைக்குள்ளே இருந்தார்கள்.
மகதலா மரியாள் மகதலா என்னும் கடற்கரை ஊரில் ஒரு மீன் பிடிக்கும் குடும்பத்தில் பிறந்தவர்.
அவரது தந்தை மீனவர். வசதி படைத்தவர்.
இயேசு அந்த ஊருக்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றிருந்த போது ஏழு பேய்கள் பிடித்திருந்த அவளைக் குணப்படுத்தினார்.
அவள் இயேசுவை இறைமகனாக ஏற்றுக் கொண்டாள்.
ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல இறைவன் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டாள்.
அவர் அவளைக் குணமாக்கியதற்கு நன்றிக் கடனாகத் தன் தந்தையின் பணத்தைக் கொண்டு
இயேசுவின் நற்செய்திப் பணியின் போது, வேறு சில பெண்களுடன் அவருக்குப் பணிவிடை செய்தாள்.(லூக்கா 8:2,3)
அவளது தன்னலமற்ற பக்தியின் காரணமாகத்தான் இயேசு அவளுக்குக் காட்சி கொடுத்தார்.
அவள்தான் முதலில் சீடர்களுக்கு இயேசு உயிர்த்ததை அறிவித்தாள்.
"மகதலா மரியா சீடரிடம் சென்று, "நான் ஆண்டவரைக் கண்டேன்" என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்."
(அரு.20:18)
ஆகவே மறையியலாளர்கள் அவளை அப்போஸ்தலர்ளின் அப்போஸ்தலி என்று அழைக்கிறார்கள்.
(Apostle of the Apostles)
மற்ற இரு பெண்களில் ஒருவர் அன்னை மரியாளின் தங்கை.
இயேசுவுக்கு உறவினர்.
அடுத்தவர் நற்செய்தி அருளப்பரின் தாய்.
அவர்கள் கல்லறைக்கு வந்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
ஆனால் ஆன்மீக உறவு தவிர வேறு எந்த உறவும் இல்லாத மகதலா மரியாள் வந்ததுதான் அவளது அர்ப்பண உணர்வைக் காட்டுகிறது.
மகதலா மரியாளின் வாழ்விலிருந்து நாம் ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
இறைவனுக்கு சேவை செய்ய நம்மை அவர் தனிப்பட்ட முறையில் அழைக்க வேண்டிய அவசியம் இல்லை.
அவர் ஒவ்வொரு வினாடியும் நம்முடன் இருந்து நம்மைப் பராமரித்து வருகிறார்.
அது ஒன்றே போதும் நம்மை அவருக்கு அர்ப்பணிக்க.
நாம் ஒவ்வொருவரும் நம்மை கடவுளுக்கு அர்ப்பணித்து வாழ்வோம்.
இராயப்பரும் அருளப்பரும் ஓடிச் சென்று கல்லறையைப் பார்த்ததிலிருந்தும் நாம் ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
இருவரும் ஒருமித்து ஓட ஆரம்பித்ததார்கள்.
ஆனாலும் அருளப்பர் இராயப்பரை விட இளையவராகையால்.
விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.
கல்லறைக்குள் எட்டிப் பார்த்தார், ஆனால் உள்ளே இறங்கவில்லை.
இராயப்பர் வந்து உள்ளே இறங்கிய பின்புதான் அவர் இறங்கினார்.
இது எதைக் காட்டுகிறது?
இயேசுவின் மேல் அவருக்கு இருந்த உண்மையான கீழ்ப்படிதலைக் காட்டுகிறது.
இயேசு இராயப்பர் மீது தன் திருச்சபையைக் கட்டுவேன் என்று கூறியபோதே இராயப்பர்தான் திருச்சபையின் தலைவர் என்பதைத் தீர்மானித்து விட்டார்.
தலைவர் இறங்குமுன் தான் உள்ளே இறங்கக் கூடாது என்று தீர்மானித்து, அவர் வருமட்டும் காத்திருந்து,
வந்து அவர் இறங்கிய பின் இவர் உள்ளே உள்ளே இறங்கினார்.
நாம் தலைமைக்கு மதிப்புக் கொடுக்க அருளப்பரிடமிருந்து கற்றுக் கொள்வோம்.
நமது பங்குத் தளத்தில் ஆன்மீகத்தில் நம்மை வழிநடத்தும் நமது பங்குக் குரு காட்டுகிற வழி நடப்போம்.
பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்வோம்.
அனைத்துக்கும் மேலாக ஆண்டவரின் சித்தத்துக்கு அடி பணிந்து நடப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment