Wednesday, April 30, 2025

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.(தொடர்ச்சி)11.இயேசு மரித்த மூன்றாம் நாள் உயிர்க்கிறார்.

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.
(தொடர்ச்சி)

11.இயேசு மரித்த மூன்றாம் நாள் உயிர்க்கிறார்.

வெள்ளிக்கிழமை மாலை மூன்று மணிக்கு மரித்து, அடக்கம் செய்யப் பட்ட இயேசு 

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் உயிர்த்து, முதலில் தனது தாய்க்குக் காட்சி அளிக்கிறார்.

இது பைபிளில் எழுதப்படவில்லை.

ஆனால் இயேசுவின் மீது முழுமையான விசுவாசம் கொண்டிருந்த அன்னை மரியாள் காலையில் மற்ற பெண்களுடன் கல்லறைக்கு வராததிலிருந்தே இதைத் தெரிந்து கொள்ளலாம்.

அவருடைய சீடர்கள் கூட அவர் உயிர்ப்பார் என்பதை விசுவசிக்கவில்லை.

மகதலா மரியாளும், அன்னை மரியாளின் தங்கை மரியாளும், சலோமி மரியாளும் இயேசு உயிர்ப்பார் என்பதைப் பற்றி நினைக்காமல் 

இயேசுவின் உடலில் பூசுவதற்காக நருமணப் பொருட்கள் வாங்கிக் கொண்டு கல்லறைக்கு வருகின்றனர்.

அவர்களுக்கு இயேசு காட்சி தருகிறார்.

மகதலா மரியா சீடரிடம் சென்று, "நான் ஆண்டவரைக் கண்டேன்" என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார். 
(அரு. 20:18)

இயேசு உயிர்த்த நற் செய்தியை அவள் அப்போஸ்தலர்களுக்கு அறிவித்ததால் 

அவள் அப்போஸ்தலர்களின் அப்போஸ்தலி  என்று அழைக்கப் படுகிறாள்.

எம்மாவூஸ் நகருக்குச் சென்ற சீடர்களுக்குக் காட்சி கொடுத்ததோடு அவர்களுக்குத் திவ்ய நற்கருணையும் கொடுக்கிறார்.

அதன்பின் சீடர்களுக்கும் பல முறை காட்சி தருகிறார்.

ஒவ்வொரு முறை காட்சி தரும் போதும் "உங்களுக்குச் சமாதானம் உண்டாகுக" என்று வாழ்த்துகிறார்.

திபேரியாக் கடல் அருகே சீடர்களுக்குத் தோன்றியபோது 
இராயப்பரை நோக்கி,

"எனது ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்."

"என் ஆடுகளை மேய்."

''என் ஆடுகளைப் பேணி வளர்"

என்று கூறியதன் மூலம் இராயப்பர்தான் திருச்சபையின் தலைவர் என்பதை உறுதி செய்கிறார்.

இயேசு உயிர்த்தது போல நம்மையும் உலக இறுதியில் உயிர்த்தெழச் செய்வார் என்பதை உறுதியாக நம்புவோம்.

லூர்து செல்வம்

Tuesday, April 29, 2025

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.(தொடர்ச்சி)10.சிலுவையில் அறையப்பட்டு மரித்தல்.

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.
(தொடர்ச்சி)

10.சிலுவையில் அறையப்பட்டு மரித்தல்.

இயேசு கல்வாரி மலை மேல் ஏறியதும் தான் ஏற வேண்டிய சிலுவையை இறக்கி வைக்கிறார்.

அவரைச் சிலுவையில் அறைய வேண்டிய ஏற்பாடுகளை வீரர்கள் செய்கிறார்கள்.

முதலில் அவரது ஆடைகளைக் களைகிறார்கள்.

அன்னை மரியாள் தன் மகனுக்கென்று தையல் இல்லாமல் பின்னிய ஆடை.

அவர் வளர வளர அதுவும் வளர்ந்தது என்று கூறுவார்கள்.

எப்படி எதுவும் இல்லாத ஏழையாகப் பிறந்தாரோ அப்படியே எதுவும் இல்லாத ஏழையாக இறக்க வேண்டும் என்பது தந்தையின் நித்திய காலத் திட்டம்.

நமது முதல் பெற்றோர் பாவம் செய்யும்போது உலகிற்குள் நுழைந்த ஆடை இயேசு நம்மைப் பாவத்திலிருந்து மீட்கப் போகிறார் என்பதற்கு அடையாளமாக  அவரிடமிருந்து  விடை பெறுகிறது.

விதவிதமான ஆடையணிந்து நாம் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாக முதலில் இயேசு தனது ஆடையைத் தியாகம் செய்கிறார்.

இயேசுவை சிலுவையில் கிடத்துகிறார்கள்.

ஆணிகளை அறையும் போது உடல் சிலுவையை விட்டு கீழே விழாமலிருக்க அதைக் கயிற்றால் சிலுவையோடு கட்டுகிறார்கள்.

முதலில் கைகளில் ஆணிகளை அறைகிறார்கள்.

அடுத்து இரண்டு பாதங்களையும் ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து ஒரு ஆணியை அறைகிறார்கள்.

அணிகளின் எதிர்ப் பக்கத்தை மடக்குவதற்காக இயேசுவோடு சிலுவையை மாற்றிப் போடுகிறார்கள்.

இயேசு குப்புறப் படுத்திருக்க அவர்மேல் பாரமான சிலுவை.

சிலுவையின் பாரம் அவரது முகம் முதல் பாதங்கள் வரை அனைத்து உறுப்புகளையும் தரையோடு தரையாய் நசுக்குகிறது.


அதோடு ஆணிகளை மடக்க ஓங்கி அறையும் போது உடல் என்ன பாடு பட்டிருக்கும்!

நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

எல்லாம் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக!

இயேசுவை நினைக்கும் போது நமது பாவங்களையும் மனத்தாபத்தோடு நினைத்துப் பார்ப்போம்.

இயேசுவைச் சிலுவையில் அறைந்த பின், சிலுவையை நேராக நடுகிறார்கள்.

அவரது இரண்டு பக்கங்களிலும் சிலுவையில் அறையப்பட்ட இரண்டு திருடர்கள்.

இவ்வளவு பாடுகளின் மத்தியிலும் தனது பாடுகளுக்குக் காரணமானவர்களை மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டுகிறார்.

 "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை"
(லூக்கா நற்செய்தி 23:34)

உண்மையிலேயே அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.

அவர்கள் இயேசுவை ஒழித்துக் கட்டுவதாக நினைத்துக் கொண்டு அவரைச் சிலுவையில் அறைகிறார்கள்.

ஆனால் தங்களை அறியாமலேயே இயேசு எதற்காக உலகுக்கு வந்தாரோ அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு திருடர்களில் ஒருவர் தனது பாவங்களுக்காக மனம் வருந்தி,

இயேசுவை நோக்கி,

 "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்" என்கிறான். 

அதற்கு இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்கிறார். 
(லூக்கா நற்செய்தி 23:42,43)

இயேசுவின் பாடுகளின் முதற்கனி அவர் சிலுவையில் தொங்கும் போதே கனிந்து விட்டது.

சிலுவையின் அடியில் நின்று கொண்டிருக்கும் தனது தாயைக் கவனிக்கும் பொறுப்பை அருளப்பரிடம் ஒப்படைக்கிறார்.

நமது பிரிவினைச் சகோதரர்கள் கூறுவது போல மரியாளுக்கு வேறு பிள்ளைகள் இல்லை என்பதற்கு இதுவே சான்று.

தனது தாயை நமக்கும் தாயாகத் தந்திருக்கிறார்.

தாயைப் போல் பிள்ளையாக ஆண்டவரின் அடிமையாக வாழ்வோம்.

அன்னை மரியாளோடு மகதலா மரியாள், 
அருளப்பரின் தாய் சலோமி மரியாள், 
சின்ன யாக்கோபின் தாய் குலோப்பா மரியாள் ஆகியோரும் சிலுவை அடியில் கண்ணீர் வடிய நின்று கொண்டிருக்கிறார்கள்.

நாமும் அவர்கள் அருகில் நின்று கொண்டிருக்கிறோம்.

சிலுவையில் இயேசுவின் உருவம் நமது இதயத்தில் ஆழப் பதிந்திருக்க வேண்டும்.

அளவு கடந்த வேதனையின் காரணமாக 

 "என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்ற
 திருப்பாடல் வரிகளை (22:1)க் கூறி செபிக்கிறார்.

இறுதியில் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக தனது ஆவியைத் தந்தையிடம் ஒப்புக் கொடுக்கிறார்.

அந்த வினாடியில் மனுக் குலம் மீட்புப் பெறுகிறது.

பாதாள நிலையில் இருந்த பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் மோட்ச நிலையை அடைகிறார்கள்.

நமது வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இயேசு நமக்காகவும் பலியானார்.  நமக்காக மோட்ச வாசல் திறந்திருக்கிறது.

இயேசு மரித்து விட்டார் என்பதை உறுதி செய்ய நூற்றுவர் தலைவர் அவருடைய விலாவை ஒரு ஈட்டியால் குத்துகிறார்.

இயேசுவின் இதயத்தில் மீதமிருந்த ஓரிரு சொட்டு இரத்தமும் வெளியேறி, நூற்றுவர் தலைவருடைய ஒரு கண்ணில் விழுகிறது.

அதுவரை பார்வை இல்லாமலிருந்த அந்தக் கண் பார்வை பெறுகிறது.

இறந்த பின்பும் ஒரு புதுமை, அதுவும் சிலுவை மரணத்தை வழி நடத்திய ரோமை வீரனுக்கு!

"உங்களுக்குத் தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யுங்கள்" என்ற இயேசுவின் போதனையை செயல்படுத்துவோம்.

லூர்து செல்வம்.

Monday, April 28, 2025

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.(தொடர்ச்சி) 9.கல்வாரி நோக்கிப் பயணம்.

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.
(தொடர்ச்சி)

9.கல்வாரி நோக்கிப் பயணம்.

பிலாத்துவின் அரண்மனையில் இருந்து கல்வாரி மலைக்கு ஏறத் தாழ ஒரு மைல் இருக்கும்.

கல் தூணில் கட்டிவைத்து சாட்டையால் அடிக்கப் பட்டதிலேயே உடலில் பாதி இரத்தம் வெளியேறியிருக்கும் 

மீதி இரத்தத்தையும் சிந்துவதற்காக சிலுவையுடன் கல்வாரிப் பயணம்.

வழி நெடுக பாஸ்கா விழாவுக்காக வந்த மக்கள் நடமாட்டம் இருக்கும்.

அவர்களில் அவரால் குணம் பெற்றவர்கள் அநேகர் இருப்பர்.

நற்செய்தியைக் கேட்டவர்களும் இருப்பர்.

அவர் மேல் பொறாமை கொண்டவர்களும் இருப்பர்.

அவர்கள் மத்தியில் அவர்கள் இதுவரைப் பார்த்திராத அலங்கோலத்தில் சுமக்க முடியாத சிலுவையைச் சுமந்து கொண்டு நடக்க முடியாமல் நடக்கிறார்.

ஆரம்பத்தில் சீமோன் என்பவர் படை வீரர்களின் கட்டாயத்தின் பேரில் கொஞ்ச நேரம் சிலுவையைச் சுமக்கிறார் 

சிலுவையில் அறையும் பொறுப்பு நூற்றுவர் தலைவரிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

அவருடைய படை வீரர்களுக்கு வேலையே இயேசுவைச் சாட்டையால் அடித்துக் கொண்டு போவதுதான்.

அவரால் சிலுவையைச் சுமக்க முடியாமல் கீழே விழும் போதெல்லாம் 

வண்டியை இழுக்கும் போது விழுந்த மாட்டைத் தார்க் கம்பால் அடித்து எழுப்புவது போல

சாட்டையால் அடித்து எழுப்புகிறார்கள்.

இது வரைக் கிழியாத தோலும் கிழிந்து உடலில் மீதியிருக்கும் இரத்தமும் வழி நெடுக சிந்தி ஓடுகிறது.

அன்னை மரியாளும் மற்ற பக்தியுள்ள பெண்களும் அழுது கொண்டே பின் செல்கிறார்கள்.

அன்னை மரியாள் மகனுக்கு ஆறுதல் கூறிக்கொண்டே பின் தொடர்கிறாள்.

அவளுக்கும், மற்ற பெண்களுக்கும் இயேசு ஆறுதல் கூறுகிறார்.

வெரோனிக்கா என்ற பெண் இரத்தம் வடிந்து கொண்டிருந்த இயேசுவின் முகத்தை ஒரு துணியால் துடைக்கிறாள்.

இயேசுவின் முகச் சாயல் அப்படியே அத்துணியில் பதிகிறது.

அத்துணி இன்றும் ரோமில் புனிதர் இராயப்பர் ஆலயத்தில் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நிமிடக் கணக்கில் கடக்க முடியும் தூரத்தை இயேசு சிலுவையுடன் ஒரு மணி நேரமாவது நடந்திருப்பார்.

 விண்ணகப் பாதையில் நடக்கும் போது நாம் செய்யும் எல்லாப் பாவங்களுக்கும் பரிகாரமாகத் தன் சிலுவைப் பாதைப் பயணத்தை இயேசு தந்தைக்கு ஒப்புக் கொடுக்கிறார்.

லூர்து செல்வம்

Sunday, April 27, 2025

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.(தொடர்ச்சி)8.இயேசுவின் தலையில் முள்முடி.

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.
(தொடர்ச்சி)
8.இயேசுவின் தலையில் முள்முடி.

அன்னை மரியாளின் முகத்தையும் இயேசுவின் முகத்தையும் பார்த்துக் கொண்டே செபிக்கிறோம்.

இயேசு அரசரை வேதனை கலந்து கேலி செய்வதற்காக

வீரர்கள் ஒரு முள்முடி பின்னி அவர் தலையின்மேல் வைத்து,

 செந்நிற மேலுடையை அவருக்கு அணிவிக்கிறார்கள். 


அவரிடம் வந்து, "யூதரின் அரசே வாழ்க!" என்று சொல்லி அவருடைய கன்னத்தில் அறைந்தார்கள். 

பின் முள்முடி மேலும் அடித்தார்கள்.

ஒவ்வொரு முள்ளும் தலையைப் பொத்துக் கொண்டு  கீழ் நோக்கி இறங்கியது.

 கண்கள், காதுகள், மூக்கு, வாய் வரைக்கும் இறங்கி அவற்றுக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கிளது.

அந்த உறுப்புகளால் நாம் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசு அதை ஒப்புக் கொடுக்கிறார்.

இந்த நிலையில் இயேசுவைப் பார்த்தால் அவர்கள் இரங்கு வார்கள் என்று நினைத்து 

பிலாத்து   அவர்களிடம், "அவனை நான் உங்கள்முன் வெளியே கூட்டிவருகிறேன், 

பாருங்கள். 

அவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை என்பதை அறிந்;துகொள்ளுங்கள்" என்கிறான். 

இயேசு முள் முடியும் செந்நிற மேலுடையும் அணிந்தவராய் வெளியே வந்தார். பிலாத்து அவர்களிடம், "இதோ! மனிதன்" என்றான். 

 தலைமைக் குருக்களும் காவலர்களும், 

"சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்" 

என்று கத்துகிறார்கள். 

பிலாத்து அவர்களிடம், "நீங்களே இவனைக் கொண்டு போய்ச் சிலுவையில் அறையுங்கள். இவனிடம் குற்றம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என்கிறான். 

யூதர்கள் அவரைப் பார்த்து, "எங்களுக்கு ஒரு சட்டம் உண்டு. அச்சட்டத்தின்படி இவன் சாகவேண்டும். 

ஏனெனில் இவன் தன்னையே இறைமகன் என உரிமைகொண்டாடுகிறான்" என்கின்றனர். 

அவன் மீண்டும் ஆளுநர் மாளிகைக்குச் சென்று இயேசுவிடம், "நீ எங்கிருந்து வந்தவன்?" என்று கேட்கிறான்.

 ஆனால் இயேசு அவனுக்குப் பதில் கூறவில்லை. 

அப்போது பிலாத்து, "என்னோடு பேசமாட்டாயா? உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு, உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்குஅதிகாரம் உண்டு என்பது உனக்குத் தெரியாதா?" என்கிறான். 

இயேசு மறுமொழியாக, "மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என் மேல் எந்த அதிகாரமும் இராது. ஆகவே என்னை உம்மிடம் ஒப்புவித்தவன்தான் பெரும் பாவம் செய்தவன்" என்கிறார். 

 பிலாத்து அவரை விடுவிக்க வழிதேடியும் கிடைக்கவில்லை.

இறுதியில் அவரைச் சிலுவையில் அறைய அவர்களிடம் ஒப்படைத்து விடுகிறான்.

அன்னை மரியாளைப் பொறுத்த வரை இது எதிர் பார்த்த ஒன்றுதான்.

ஏனெனில் அவள் மனம் கலங்காதிருக்கும்படி என்னென்ன நடக்கும் என்று ஏற்கனவே இயேசு கூறியிருக்கிறார்.

அவள் ஒவ்வொரு நிகழ்வையும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாகத் தந்தைக்கு ஒப்புக்கொடுக்கிறாள்.

மற்ற பெண்கள் கண்களில் நீர் மல்க அன்னைக்கு ஆறுதல் கூறுகிறார்கள்.

லூர்து செல்வம்

Saturday, April 26, 2025

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.(தொடர்ச்சி)7.நமது பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசு அடிபட்டார்.

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.
(தொடர்ச்சி)
7.நமது பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசு அடிபட்டார்.


இயேசுவைக்‌ கைது செய்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச் செல்கிறார்கள். அங்கே மறைநூல் அறிஞரும், மூப்பர்களும் கூடி வருகிறார்கள். 


இராயப்பர் தொலைவில் அவரைப் பின்தொடர்ந்து தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து உள்ளே நுழைந்து காவலரோடு உட்கார்கிறார். 

அன்னை மரியாள் தூய ஆவியால் இயக்கப்பட்டு மற்ற பெண்களுடன் தலைமை குருவின் இல்லத்துக்கு வந்தது மட்டுமல்ல இறுதி வரை இயேசுவைப் பின் தொடர்கிறாள்.

இயேசு நமது பாவங்களுக்காக பலியிடப்படுவதற்கென்றே அவளால் வளர்க்கப்பட்ட ஆட்டுக்குட்டி.

எல்லா நிகழ்வுகளையும் பார்ப்பது மட்டுமல்ல ஒவ்வொன்றையும் தந்தைக்கு ஒப்புக் கொடுத்துக் கொண்டு தான் இயேசுவைப் பின் தொடர்கிறாள்.

நாமும் அன்னையுடன் பயணிப்போம்.

தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி சொல்கிறார்கள். 

"இவன் கடவுளுடைய ஆலயத்தை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான்" 

இயேசு அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை.

 தலைமைக் குரு அவரிடம்,

 "நீ கடவுளின் மகனாகிய மெசியாவா?"

அதற்கு இயேசு, "நீரே சொல்லுகிறீர்; 

மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்" என்கிறார். 

இதைக் கடவுள் நிந்தனை என்று தீர்மானித்து அவர் சாக வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள்.


பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்து  
அவரைக் கட்டி ஆளுநர் பிலாத்துவிடம் இழுத்துச்
செல்கிறார்கள்.

விசாரணைக்காக அவரிடம் ஒப்படைக்கிறார்கள்.

பிலாத்து அவரை நோக்கி 

 "நீ யூதரின் அரசனா?" என்று கேட்கிறார். 

அதற்கு இயேசு, "அவ்வாறு நீர் சொல்கிறீர்" என்று கூறுகிறார். 

 தலைமைக் குருக்களும் மூப்பர்களும் அவர்மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு  அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை. 

பிலாத்து அவரிடம், "உனக்கு எதிராக எத்தனையோ சான்றுகள் கூறுகிறார்களே, உனக்குக் கேட்கவில்லையா?" என்கிறார்.. 

அவரோ ஒரு சொல்கூட  மறுமொழியாகக் கூறவில்லை. ஆகவே ஆளுநர் மிகவும் வியப்புற்றார். 

 பிலாத்து குற்றம் சாட்டினவர்களைப் பார்த்து, "நான் 
உங்களுக்காக ஒரு கைதியை விடுதலை செய்வது வழக்கம்.   

இயேசுவை விடுதலை செய்யவா?"

''பரபாவை விடுதலை செய்யுங்கள்.

இயேசுவை சிலுவையில் அறையுங்கள்."

பிலாத்து நடுவர் இருக்கைமீது அமர்த்திருந்தபொழுது அவனுடைய மனைவி அவனிடம் ஆளனுப்பி, 

"அந்த நேர்மையாளரின் வழக்கில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில் அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்" என்று கூறுகிறார். 

ஆனால் தலைமைக் குருக்களும் மூப்பர்களும்  இயேசுவைச் சிலுவையில் அறைவதிலேயே குறியாக இருக்கிறார்கள். 

பிலாத்து எவ்வளவு முயன்றும் பயனில்லை.

 "இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறித் தன் கைகளைக் கழுவுகிறான். 

அதற்கு மக்கள் அனைவரும், "இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும்" என்று பதில் கூறுகிறார்கள்.

 இயேசுவைக் கசையால் அடிக்க உத்தரவிடுகிறார்.

படைவீரர்கள் இயேசுவை ஒரு கல் தூணில் கட்டிவைத்து   சாட்டையால் உடல் முழுவதையும் அடிக்கிறார்கள்.

உச்சந்தலை தொடங்கி உள்ளங்கால் வரை அனைத்து உறுப்புக்களையும் அடிக்கிறார்கள்.

ஒவ்வொரு உறுப்பாலும் நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக ஒவ்வொரு உறுப்பையும் சாட்டையடிகள்   குத்திக் கிழிக்கின்றன.

இரத்தம் பீறிட்டு வெளியில் கொட்டியது.

கண்ணீர் ஆறாய் ஓட தன் மகனைப் பார்த்துக கொண்டிருந்த அன்னை மரியாள்,

''தந்தையே, உமது பிள்ளைகள் தங்கள் உடலால் செய்த சகல பாவங்களுக்குப் பரிகாரமாக உமது திருமகன் அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்.

மக்களின் பாவங்களுக்குப் பரிகாரமாகத் அவர் படும் வேதனையை உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.

ஏற்றுக் கொண்டு அனைத்துப் பிள்ளைகளையும் மனம் திருப்பி மன்னித்தருளும்.''

என்று வேண்டுகிறாள்.

நமது உடல் படைக்கப்பட்டிருப்பது இறைப் பணிக்கு,

இரைப் பணிக்கு அல்ல என்பதை நினைவில் கொள்வோம்.

பாவம் செய்யப் பயன்படுத்திய உடலைப் பாவப் பரிகாரம் செய்யப் பயன்படுத்துவோம்.

லூர்து செல்வம்.

Friday, April 25, 2025

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.(தொடர்ச்சி)6.முப்பத்து மூன்று வயதில் இயேசு. (கெத்சமனித் தோட்டத்தில்)

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.
(தொடர்ச்சி)
6.முப்பத்து மூன்று வயதில் இயேசு. (கெத்சமனித் தோட்டத்தில்)

இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது செருசலேமுக்குப் போனது போல 
முப்பத்து மூன்று வயதிலும்,   அதாவது, உலகில் அவரது வாழ்வின் இறுதி ஆண்டிலும் போகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் நிகழ்கிற நிகழ்வு தான், ஆனால் இந்த ஆண்டு பன்னிரண்டு வயதில் போனது போல மறைநூல் அறிஞர்களிடம் அவர் கேள்விகள் கேட்கப் போகவில்லை,

கேள்விகள் கேட்கப் பட அவர்களிடம் அழைத்துச் செல்லப் படப் போகிறார்.

இயேசு பாடுகள் பட்டு சிலுவையில் மரிப்பதற்காகப் போகிறார் என்று மரியாளுக்குத் தெரியும்.

மற்ற ஆண்டுகளில் பாஸ்கா விழாவுக்காக மட்டும் செல்வாள்,  ஆனால் இந்த ஆண்டு  தன் மகனைப் பரம தந்தைக்கு நமது பாவங்களுக்கு பரிகாரமாக ஒப்புக் கொடுக்கப் போகிறாள்.

இயேசு தனது சீடர்களோடு போகிறார்.  மரியாளும்  பாடுகளின் போது அவருடன் இருக்கப் போகிறாள்.

இயேசு தன்னைப் பலியாக ஒப்புக் கொடுக்கப் போகிறார்.

மரியாள் தன் மகனைப் பலியாக ஒப்புக் கொடுக்கப் போகிறாள்.

பலியாகப் போகிற செம்மறியை 30 ஆண்டுகள் வளர்த்தவள் அவள்.

புனித வியாழன் இரவு தன் சீடர்களுடன் உண்ட பாஸ்கா உணவுக்குப் பின் பாடுகள் ஆரம்பம் ஆகின்றன.

அப்போது அன்னை மரியாள் எங்கே தங்கியிருந்தாள்?

இயேசு நற்செய்தி அறிவித்த போது அவருக்குப் பணிவிடை செய்த யோவான்னா, சூசான்னா ஆகிய பெண்களில் யார் வீட்டிலாவது தங்கியிருந்திருக்கலாம்.

ஜான் மாற்கின் வீட்டில் கூட சீடர்களோடு இரவு உணவில் கலந்து கொள்ளாமல் தனி அறையில் தங்கியிருந்திருக்கலாம்.

எங்கே இருந்தாலும் மகதலா மரியாளும், அன்னை மரியாளின் தங்கை மரியாளும், சலோமி மரியாளும் கூட இருந்திருக்க வேண்டும்.

இவர்களெல்லாம் இயேசுவின் பாடுகளின் போது கூடவே சென்றவர்கள்.

இயேசு மனுக் குலத்தின் மீட்புக்காகப் பாடுகள்படப் போகிறார் என்பது அவர்களுக்குத் தெரியும்.

இரவு உணவிற்குப் பின் இயேசு   சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார். 

நாமும் அவருடன்   போவோம்.

அவர் செபிக்க அடிக்கடி போகும் இடம்தான் என்றாலும் இன்று நமது பாவங்களுக்குப் பரிகாரமாக செபிக்கப் போகிறார்.

மற்ற சீடர்களைத் தனியே விட்டு விட்டு,  இராயப்பர், அருளப்பர், வியாகப்பர் ஆகிய மூவரை மட்டும் அழைத்துக் கொண்டு,

அவர்களை ஒரு இடத்தில் செபிக்கச் சொல்லி விட்டு,

தனியாக செபிக்கப் போகிறார்.

அவர் பாடுகள் பட்டு,
 சிலுவையில் அறையப்பட்டு, நமக்காக மரிக்க வேண்டும் என்பது விண்ணகத் தந்தையின் நித்திய காலத் திட்டம்.

அதற்காகத் தான் மனிதனாகப் பிறந்தார்.

மனிதனாகப் பிறக்கும் போது பாவம் தவிர மற்ற எல்லா மனித பலகீனங்களையும் ஏற்றுக் கொண்டார்.

அவரே ஏற்றுக் கொண்ட பயம் என்ற மனித பலகீனம் அவரை ஆட்கொண்டது.

 அவரும் பாடுகளை நினைத்து பயப்பட ஆரம்பித்தார்.

அளவுக்கு மீறிய பயத்தின் காரணமாக உடலில் உள்ள இரத்தம் வேர்வையாகக் கொட்டியது.

பயத்தின் விளைவாக,

"தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும்."

என்று செபித்தார்.

எவ்வளவு மன வேதனை இருந்திருந்தால் இப்படி செபித்திருப்பார்.

அந்த மனவேதனையை நமது பாவங்களுக்குப் பரிகாரமாகத் தந்தைக்கு ஒப்புக் கொடுத்தார்.

தொடர்ந்து 

"ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்."  

என்றும் செபித்தார்.

இவ்வளவு மனவேதனை கலந்த செபத்தை மூன்று முறை  செபித்தார்.

இப்போது மரியாள் அவர் அருகில் இருந்திருந்தால் தன் மகன் பட்ட வேதனையைப் பார்த்து எவ்வளவு வேதனைப் பட்டிருப்பாள்.

நாம் உண்மையான பக்தியுடன் தியானித்து செபித்தால் நமக்கும் அவ்வளவு மனவேதனை ஏற்பட வேண்டும்.

நமது மன வேதனையை இயேசுவின் மன வேதனையோடு சேர்த்து நமது பாவங்களுக்குப் பரிகாரமாக கடவுளுக்கு ஒப்புக் கொடுப்போம்.

இயேசு செபத்தை‌ முடித்து விட்டு மற்ற சீடர்களிடம் வந்த போது அவரைக் கைது செய்வதற்காக பெரிய குருவின் ஆட்கள் யூதாசுடன் வந்து கொண்டிருந்தார்கள்.

இயேசுவும் தன்னைக் கைது செய்யத் தன்னையே கையளித்தார்.

சீடர்கள் அவரை விட்டு ஓடி விட்டார்கள்.

ஜான் மாற்கு அவிழ்ந்து விழுந்த தன் துணியைக் கூட எடுக்காமல் ஓடினார்.

அவரைக் கைது செய்தவர்கள் அவரை இழுத்துச் சென்று தலைமைக் குருவின் வீட்டுக்குக் கொண்டு போனார்கள்.

இராயப்பர் தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார். 

(விசாரணை மன்றத்தில் சந்திப்போம்.)

லூர்து செல்வம்.

Thursday, April 24, 2025

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.(தொடர்ச்சி). 12வயதில் இயேசு.

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.
(தொடர்ச்சி)
12வயதில் இயேசு.

கீழ்த்திசை ஞானிகள் குழந்தை இயேசுவை ஆராதித்து விட்டுப் போனபின்,

குழந்தை இயேசுவை ஏரோது மன்னனின் கையிலிருந்து காப்பாற்றுவதற்காக

கபிரியேல் தூதரின் சொல்லுக்கு இணங்க எகிப்துக்குச் சென்ற திருக்குடும்பம் 

ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் அங்கு வாழ்ந்து விட்டு ஏரோது மன்னன் இறந்தபின் நாசரேத்துக்குத் திரும்பினார்கள்.

அது முதல் பொது வாழ்வுக்குச் செல்லும் வரை இயேசு நாசரேத்தில்தான் வாழ்ந்தார்.

பன்னிரண்டு வயதில் இயேசுவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அன்னை மரியாளுடன் பயணிப்போம்.

ஒவ்வொரு ஆண்டும் செல்வது போல அந்த ஆண்டும் பாஸ்கா விழாவில் கலந்து கொள்ள இயேசு தன் பேற்றோருடன் செருசலேம் சென்றார்.

விழா முடிந்து திரும்பும் போது பெற்றோருக்குத் தெரியாமல் இயேசு ஆலயத்தில் தங்கி விட்டார்.

இயேசு மூவுலகையும் படைத்த இறை மகன் என்று மரியாளுக்கும் தெரியும், யோசேப்புக்கும் தெரியும்.

அவரால் தொலைந்து போக முடியாது என்றும் அவர்களுக்குத் தெரியும்.

ஆனாலும் அவரைப் பிரிந்து அவர்களால் இருக்க முடியவில்லை.

அவர் ஆலயத்தில் தங்கியது தெரியாமல் மூன்று நாட்கள் எங்கும் தேடிவிட்டு

மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். 

விழா நாட்களில் சாதாரண மக்கள் கோவில் போதகர்களைச் சந்தித்து திருச்சட்டம், தீர்க்கத்தரிசிகளின் கூற்றுக்கள் போன்றவற்றுக்கு விளக்கம் கேட்டுத் தெரிந்து கொள்வது வழக்கம்.

அப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது 12 வயது சிறுவன் உட்புகுந்து கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்.

அவர்கள் கூறிய பதிலைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

மூன்று நாட்களும் இதைத்தான் செய்து கொண்டிருந்தார்.

அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். 

அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு அவர் செய்து கொண்டிருந்ததை கவனித்து ஆச்சரியப்பட்டார்கள்.

 அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, 

"மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே" என்றார். 

மாதாவின் வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்தால் மாதாவின் தாழ்ச்சியின் மேன்மையை அறியலாம்.

இயேசுவைப் பெற்றவள் மரியாள் மட்டுமே, யோசேப்புக்கு அதில் பங்கு இல்லை.

ஆனால் மரியாள் தன்னை முன்னிருத்தாமல்,

"உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே"

என்று யோசேப்புக்கு முக்கியத்துவம் கோடுக்கிறாள்.

இது அவளுடைய தாழ்ச்சியைக் காட்டுகிறது.

இயேசுவின் பதிலைக் கவனியுங்கள்.

அவர் அவர்களிடம் "நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்றார். 

தான் இறைமகன் என்ற மறை உண்மையை எல்லோர் முன்னிலையிலும் வெளிப்படுத்துகிறார்.

இது மரியாளுக்கும் யோசேப்புக்கும் தெரியும்.

அவர் வெளிப்படுத்தியது யூத மத போதகர்கள் முன்னிலையில்.

அவர்கள் சிந்திக்க ஆரம்பித்திருப்பார்கள்.

"அவர் சொன்னதை அவர்கள் (பெற்றோர்) புரிந்து கொள்ளவில்லை."

ஆனால் அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார். 

 21 ஆண்டுகளுகள் கழித்து புரிந்து விடும்.

மறைநூல் அறிஞர்கள் அவரிடம் வேண்டாத கேள்விகள் கேட்கும் போது புரிந்து விடும்.

12 வயதில் இயேசு  மனித குல மீட்பைப் பற்றி திருச்சட்டம் என்ன சொல்கிறது என்பது பற்றி கேட்ட அவசியமான கேள்விகளுக்கும்,

33 வயதில் அவரை மீட்பர் ஆக்குவதற்காக,

அதாவது, அவரைப் பலியிட அவர்கள்  கேட்கும் அவசியமற்ற கேள்விகளுக்கும் உள்ள வித்தியாசம் மாதாவுக்குப் புரியும்.

இயேசு தனது வாழ்நாளெல்லாம் தன் தந்தையின் அலுவலில்தான் ஈடுபட்டிருந்தார்.

தந்தையின் ஆலயத்தில் தந்தையின் அலுவலில் ஈடுபட்டிருந்த இயேசுவை அழைத்துக் கொண்டு மாதாவும், யோசேப்பும் வீடுதிரும்பினார்கள்.

அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்த இயேசு தன் பெற்றோருக்குப் பணிந்து நடந்தார். 

அவர்களுக்கு அவர் பணிந்து வாழ்ந்ததும் தந்தை அவருக்கு அளித்த அலுவல்தான்.

கடவுள் அவரால் படைக்கப்பட்ட மனிதர்களுக்குப் பணிந்து நடந்தார்.

அவரே கொடுத்த நான்காவது கட்டளையை நமக்கு முன் மாதிரிகையாக அவரே அனுசரித்தார்.

நாமும் நமது பிள்ளைகளுக்கு முன் மாதிரிகையாக வாழ வேண்டும்.

லூர்து செல்வம்

Wednesday, April 23, 2025

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.(தொடர்ச்சி)4 இயேசு காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப் பட்டது.

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.
(தொடர்ச்சி)
4இயேசு காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப் பட்டது.


திருக்குடும்பம் ஆயர் குடியில் தங்கியிருந்த காலக் கட்டத்தில் நான்கு நிகழ்வுகள் நடந்தன.

1.எட்டாம் நாள் இயேசு என்னும் பெயர் சூட்டினார்கள். 


2. நாற்பதாம் நாள் குழந்தை இயேசுவை ஆலயத்துக்கு அழைத்துச் சென்று தந்தை இறைவனுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தார்கள்.

3. கீழ்த்திசை ஞானிகள் குழந்தை இயேசுவைப் பார்க்க வந்தார்கள்.

4. அவர்கள் சென்றபின் திருக்குடும்பம் எகிப்துக்குப் பயணித்து.

இவற்றில் செபமாலைத் தியானத்திற்காக எடுத்துக் கொள்வது

நாற்பதாம் நாள் குழந்தை இயேசுவை ஆலயத்துக்கு அழைத்துச் சென்று தந்தை இறைவனுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தது பற்றி.

மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். 

பெத்லகேமிலிருந்து செருசலேம் ஆலயத்துக்கு சுமார் 8.கி.மீ. தூரம்.
போய் வர 16 கி.மீ.

இயேசு கடவுள்.  தந்தை அவருள் இருக்கிறார், அவர் தந்தையுள் இருக்கிறார்.

அவர் இருக்கும் இடம்தான் ஆலயம்.

அவரை அவருக்கே (கடவுளுக்கே) ஒப்புக் கொடுக்க எருசலேம் போக வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் அவர் ஒரு யூதர். யூத மதச் சட்டத்தை மதிக்கிறார்.

ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்" என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. 

ஆகவே கீழ்ப்படிதலுடன் யோசேப்பும் மரியாளும் குழந்தையுடன் ஆலயத்துக்குச் செல்கிறார்கள்.


அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு ஒருசோடி மாடப்புறாக்களை  அவர்கள் பலியாகக் கொடுத்தார்கள். 

மெசியாவின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்த
சிமியோன் ஆலயத்துக்கு வந்தார்.

குழந்தை இயேசுதான் மெசியா என்பதை அவரைப் பார்த்தவுடன் உணர்ந்து கொண்டார்.

அவர்  குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி, 

"ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். 

ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு, 

நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. 

இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவெ உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை" என்று செபிக்கிறார். 

குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர். 

சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, 

"இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். 

இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும்.

 உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" என்கிறார். 

அன்னை மரியாள் அனுபவிக்கப் போகும் வியாகுலங்களை முன்‌னறிவிக்கிறார்.

கோவிலில் பணிபுரிந்து கொண்டிருந்த அன்னா என்னும் இறைவாக்கினர்  அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசுகறார். 

குழந்தை இயேசுவைத் தந்தை இறைவனுக்கு ஒப்புக் கொடுத்தது பற்றி தியானிக்கும் போது நாம் நம்மையே இறைப் பணிக்கு ஒப்புக் கொடுப்போம்.

லூர்து செல்வம்.

Tuesday, April 22, 2025

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.(தொடர்ச்சி)3. இயேசுவின் பிறப்பு.

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.
(தொடர்ச்சி)
3. இயேசுவின் பிறப்பு.

யோசேப்பு கலிலேயாவில் உள்ள நாசரேத்தில் வாழ்ந்து வந்தாலும் அவருடைய பூர்வீகம் யூதேயாவிலுள்ள பெத்லகேம்.

ரோமைப் பேரரசர் அகஸ்தஸ் சீசரின் கட்டளைக்கு இணங்க தனது பெயரைப் பதிவு செய்ய அவருடைய மூதாதையர் வாழ்ந்த பெத்லகேமுக்கு நிறைமாத கர்ப்பிணியான மரியாளையும் அழைத்துக் கொண்டு யோசேப்பு செல்கிறார்.

அங்கு தங்க வீடும் கிடைக்கவில்லை, சத்திரத்தில் இடமும் கிடைக்கவில்லை.

ஒரு மாட்டுத் தொழுவம்தான் கிடைக்கிறது.

யோசேப்பு அதைச் சுத்தம் செய்கிறார்.

அந்தத் தொழுவத்தில்தான் இயேசு பிறக்கிறார்.

மரியாள் குழந்தையைத் தீவனத் தொட்டியில் படுக்க வைக்கிறார்.

அவர் பிறந்த செய்தி வானதூதர் மூலம் வயல் வெளியில் சாமக் காவல் காத்துக் கொண்டிருந்த ஆட்டு இடையர்களுக்குத் தெரிவிக்கப் படுகின்றது.

வானதூதர் அவர்களிடம், "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். 

இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். 

குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்" என்கிறார். 

உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, "உன்னதத்தில் கடவுளுக்கு மகிமை உரித்தாகுக! 
உலகில் நல்மனதோர்க்கு சமாதானம் உண்டாகுக!" என்று கடவுளைப் புகழ்ந்தது. 

உடனே இடையர்கள் சென்று  இயேசு பாலனை ஆராதித்தார்கள்.

இடையர்களைப் போலவே அவர்கள் வீட்டுப் பெண்மணிகளும், சிறுவர் சிறுமியரும் வந்து ஆராதித்தார்கள்.

தேய்வக் குழந்தையை மாட்டுத் தொழுவத்தில் விட்டு விட்டுப் போக மனது வருமா?

திருக்குடும்பத்தை இடையர் குடிக்கு அழைத்துச் சென்று ஒரு வீட்டில் தங்க வைத்தார்கள்.

அங்கிருந்து தான் திருக்குடும்பம் இயேசுவைக் காணிக்கையாக ஒப்புக் கொடுக்க நாற்பதாவது நாள் செருசலேம் ஆலயத்துக்குச் சென்றார்கள்.

கீழ்த்திசை ஞானிகளும் இயேசுவை ஆராதிக்க அங்குதான் வந்தார்கள்.

அங்கிருந்து தான் திருக்குடும்பம் எகிப்துக்குப் பயணித்தது.

லூர்து செல்வம்.

Monday, April 21, 2025

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.(தொடர்ச்சி). 2.மரியாளும், எலிசபெத்தும்.

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.
(தொடர்ச்சி)
2. மரியாளும், எலிசபெத்தும்.


அன்னை மரியாளின் வயிற்றில் இயேசு உற்பவித்த வினாடியே தனது நற்செய்தி அறிவிப்புப் பணியை ஆரம்பித்து விட்டார்.

"இதோ, ஆண்டவருடைய அடிமை" ‌என்று தன் வயிற்றில் உற்பவித்திருக்கும் மகனுக்கே தன் வாழ்வை அர்ப்பணித்த அவருடைய தாய் தான் அவருடைய முதல் சீடத்தி.

இயேசு தனது முதல் நற்செய்திப் பயணத்தைக் கலிலேயாவிலுள்ள நசரேத்திலிருந்து 

 யூதேயா மலைநாட்டில் செக்கரியா வாழ்ந்த ஊருக்குப் பயணிக்கிறார், தன் அன்னையுடன்.

மரியாள் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்துகிறார். 

மரியாளின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளுகிறது.

 எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்படுகிறார். 

மரியாளுக்கு கபிரியேல் தூதர் காட்சி கொடுத்தது எலிசபெத்துக்குத் தெரியாது.

தூய ஆவியானவரின் வல்லமையால் அதை அவள் அறிந்திருக்க வேண்டும்.

எலிசபெத் மரியாளைப் பார்த்து, "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! 

என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? 

உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. 

ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என்று வாழ்த்துகிறார். 

மரியாளும், எலிசபெத்தும் சந்தித்ததை விட,

குழந்தை இயேசுவும், குழந்தை அருளப்பரும் சந்தித்தது தான் முக்கியத்துவம் வாய்ந்தது.

இயேசு தான் உலகுக்கு வந்த பணியை அங்கேயே ஆரம்பித்து விடுகிறார்.

அவர் உலகுக்கு வந்தது மக்களின் பாவங்களை மன்னிக்க.

அருளப்பர் இயேசுவைச் சந்தித்தவுடன் தூய ஆவியால் அவரது சென்மப் பாவம் மன்னிக்கப் படுகிறது.

அவரும் மகிழ்ச்சியால் துள்ளுகிறார்.

மரியாளும் மகிழ்ச்சி பொங்க,

"ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. 

ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். 

ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். 

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். 

அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். 

பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். 

மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; 

தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார் ". 

என்று பாடுகிறார்.

எலிசபெத்தின் வீட்டில் மூன்று மாதங்கள் தங்கி அவளுக்கு உதவி செய்கிறாள்.

அதன்பின் இல்லம் திரும்புகிறாள்.

லூர்து செல்வம்

Sunday, April 20, 2025

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.

1. கபிரியேல் தூதர் கொண்டு வந்த இறைச் செய்தி.


ஜோக்கிமும் அன்னம்மாளும் முதிர்ந்த வயதில் பெற்ற தங்கள் மகள் மரியாளை இறைப் பணிக்கு அர்ப்பணிக்கிறார்கள்.

மூன்று வயது முதல் மரியாள் கோவிலில் இறை பக்தியில் வளர்கிறாள்.

பன்னிரண்டு வயது வரை கோவிலில் வளர்கிறாள்.

சிறு வயதிலேயே தனது கற்பை இறைவனுக்கு அர்ப்பணித்து விடுகிறாள்.

பன்னிரண்டு வயது ஆன பெண்களைத் திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்பது கோவில் விதி.

மரியாள் தனது கற்பை இறைவனுக்கு அர்ப்பணித்து விட்ட படியால் 

அதற்குப் பங்கம்‌ ஏற்படுத்தாத மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டும் என்பதற்காக

கோவில் குரு தூய ஆவியின் ஏவுதலால் 

மனைவியை இழந்த விதவர்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் கோவிலுக்கு வர அழைப்பு விடுக்கிறார்.

மற்றவர்களோடு விதவரான யோசேப்பும் கோவிலுக்கு வருகிறார்.

ஒவ்வொருவர் கையிலும் ஒரு கோல் கொடுக்கப் படுகிறது.

யோசேப்பின் கோல் பூத்ததுமன்றி, அதிலிருந்து ஒரு புறா வெளியேறி அவர் தலையில் அமர்கிறது.

தூய ஆவியானவர் யோசேப்பைக் கன்னிமரியின் கணவராகத் தேர்ந்தெடுத்து விட்டார்.

மரியாளின் கற்புக்குப் பாதுகாவலாக இருப்பதாக யோசேப்பு கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் 

இருவரும் திருமண ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள்.

யோசேப்பு வேலை விடயமாக வெளியூர் சென்றிருந்த போது 

மரியாள் வீட்டில் செபித்துக் கொண்டிருந்த போது கபிரியேல் தூதர் அவருக்குக் காட்சி கொடுக்கிறார்.

"அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்கிறார்.

இத்தகைய வாழ்த்தை எதிர்பாராத மரியாளுக்கு ஒன்றும் புரியவில்லை.

இறைத் தூதர் உன்னத கடவுளின் மகன் அவள் வயிற்றில் மனித உரு எடுப்பார் என்ற இறைச் செய்தியை அவளுக்கு அறிவிக்கிறார்.

 மரியாள் வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" என்கிறார். 

வானதூதர் அவரிடம்,

"கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை. 

பரிசுத்த ஆவியின் வல்லமையால் இறைமகனை மனுமகனாக  நீர் கருத்தரிப்பீர்.

கருவுற இயலாதவர் என்று கருதப்பட்ட எலிசபெத் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார்.

அவருக்கு இது ஆறாம் மாதம்."
என்கிறார்.

இறைப்பணிக்காகத் தன்னைச் சிறு வயது முதலே அர்ப்பணித்து விட்ட மரியாள் 

அவள் கருத்தரிக்கவிருப்பது இறைவனின் சித்தம் என்று அறிந்தவுடன்,

 "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்கிறார்.

அவள் ஏற்றுக் கொண்ட வினாடியில் இறைமகன் மனுமகனாக உரு எடுக்கிறார்.

 நாம் அன்னை மரியாளை நமது தாயாக ஏற்று வாழ்பவர்கள்.

நாமும் இறைச் பணிக்கு நம்மையே அர்ப்பணித்து வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Saturday, April 19, 2025

இயேசு உயிர்த்த பின்னும் எதற்காகத் தவக் காலம்?

இயேசு உயிர்த்த பின்னும் எதற்காகத் தவக் காலம்?

"தாத்தா, ஒரு சந்தேகம்."

"'இயேசுவின் உயிர்ப்பின் மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நாளில் விடியுமுன்பே என்ன சந்தேகம்?"

"சந்தேகம் எப்போ வேண்டுமானாலும் வரும். இப்போ பதில் சொல்லுங்க."

"'கேட்டாத்தானே சொல்ல முடியும்!"

"தாத்தா, இயேசு இப்போது எங்கு இருக்கிறார்?"

"'மோட்சத்தில் இருக்கிறார்."

"எப்படி இருக்கிறார்?"

'"மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறார்."

"ஒரு திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசும் போது மகிழ்ச்சியான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமா?
அல்லது, அவர்கள் 
சிறுவர்களாக இருக்கும் போது பட்ட கட்டங்களைச் சொல்லி அழ வேண்டுமா?"

"'நேரடியாகச் சொல்ல வந்ததைச் சொல்லு."

"இயேசு மோட்சத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார். இனிமேல் அவரால் துன்பப்பட முடியாது.

அவருக்கு விழா எடுக்கும் நாம் நேரடியாக அவரது மகிழ்ச்சியில் பங்கேற்க வேண்டியது தானே, 

எதற்காக நாற்பது நாட்கள் அவர் 2025 ஆண்டுகளுக்கு முன்பு பட்ட பாடுகளை நினைத்து அழுதோம்?"

"'கடவுளைப் பற்றிய அடிப்படை உண்மைத் தெரியாததால் இந்த கேள்வியைக் கேட்கிறாய்."

"என்ன உண்மை?"

"'கடவுள் எப்படிப் பட்டவர்?"

"சகல நன்மைத்தனங்களையும் அளவில்லாத விதமாய்க் கொண்டவர்.

துவக்கமும் முடிவும் இல்லாதவர்.

அவருடைய பண்புகளில் அளவில்லாதவர்.

எப்போதும் அளவில்லாத மகிழ்ச்சியோடு வாழ்பவர்."

"' அவருடைய மகிழ்ச்சிக்கு யார் காரணம்?"

"அவர்தான் ஆதி காரணர். அவருக்கு யாரும் காரணமாய் இருக்க முடியாது. தன்னிலே மகிழ்ச்சியானவர்."

"'அவருடைய மகிழ்ச்சியைக் கூட்ட முடியுமா?"

"அளவில்லாததை எப்படி, தாத்தா, கூட்ட முடியும்?"

'"அவர் எதற்காக மனிதனைப் படைத்தார்?"

"அவரது அன்பைப் பகிர்ந்து கொள்வதற்காக."

"'அன்பைப் பகிர்ந்து கொள்ளும் போது அது குறையுமா?"

"எப்படி, தாத்தா, குறையும்? அளவில்லாததைக் கூட்டவும் முடியாது, குறைக்கவும் முடியாது."

'"அப்படியானால் அவரது மகிழ்ச்சிக்காக மனிதனைப் படைக்கவில்லை. மனிதன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவனைப் படைத்தார்."

"அதாவது மனிதனைப் படைத்ததால் அவருக்கு எந்த ஆதாயமும் இல்லை. சரியா?"

"'Super சரி. நீ ஒரு பொருளை உண்டாக்கினால் அது உனக்குப் பயன்படும். ஆனால் கடவுள் நம்மைப் படைத்ததால் அவருக்கு ஒரு பயனும் இல்லை."

"அதாவது நாம் இல்லாவிட்டாலும் கடவுள் வாழ்வார். 

ஆனால் அவர் உதவி இல்லாமல் நம்மால் வாழ முடியாது."

"'இறை மகன் ஏன் மனிதனாகப் பிறந்தார்?"

"நமக்காக. நம்மை மீட்பதற்காக. 
அவர் மனிதனாகப் பிறந்ததால் அவருக்கு எந்த ஆதாயமும் இல்லை."

"'மனிதன் பாவம் செய்ததால் கடவுளுக்கு என்ன நட்டம்?"

"அவருக்கு எந்த நட்டமும் இல்லை. பாவம் செய்தவனுக்குதான் நட்டம்."

"'இறை மகன் மனிதனாகப் பிறந்து, பாடுகள் பட்டு, சிலுவையில் அறையப்பட்டு மரித்ததால் யாருக்கு ஆதாயம்?"

"பாவம் செய்த நமக்குதான் ஆதாயம். கடவுளுக்கு எந்த ஆதாயமும் இல்லை.''

"'அதாவது?"

"இயேசுவின் அன்பு தன்னலம் அற்ற அன்பு. நம் மீது அவர் கொண்ட அன்பின் காரணமாகத்தான் அவர் பாடுகள் பட்டு மரித்தார்."

"' அம்மா சமைத்த உணவினால் பயனடைந்து யார்?"

"சாப்பிடும் பிள்ளைகள் தான்.
அதாவது, இயேசு பட்ட பாடுகளால் பயனடைவது அவருடைய பிள்ளைகளாகிய நாம் தான்."

"'இயேசுவின் பாடுகளைத் தியானிப்பதால் பயனடைவது?"

"நாம் தான்."

"'எப்படிப் பயனடைகிறோம்?"

"நமக்காக அவர் பட்ட பாடுகளைத் தியானிப்பதால் அவர் மீது நமது அன்பு வளரும். 

நமது பாவங்களுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்போம்.

 மன்னிப்புப் பெறுவதால் நமது ஆன்மா பரிசுத்தமாகும்.

ஆன்மீகத்தில் வளர்வோம்."

"'இப்போ சொல்லு, இயேசுவின் பாடுகளைப்பற்றி எப்போது தியானிக்கலாம்?"

"எப்போது வேண்டுமானாலும் தியானிக்கலாம். ஆண்டு முழுவதுமே தியானிக்கலாம்."

"'அப்படியானால் எதற்காகத் தபசு காலம்?"

"மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனாலும் பள்ளிக்கூடத்தில் அதற்கென்று நேரம் ஒதுக்குகிறார்கள். 

ஒதுக்கப்பட்ட நேரத்தில் வேறு வேலை செய்யாமல் படிக்க வேண்டும். 

ஆனால் அப்போது மட்டும் படிக்க வேண்டும் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்க வேண்டும்.

அதேபோல நாம் ஆண்டு முழுவதும் பாடுகளைப் பற்றித் தியானிக்கலாம்.

தபசு காலத்தில் கட்டாயம் தியானிக்க வேண்டும்." 

"'இப்போ சொல்லு. நாம் பாடுகளைத் தியானித்து, தவம் செய்வதால் பயன் அடைவது நாமா? கடவுளா?"

"தபசு காலத்தில் நாம் பாடுகளைத் தியானிக்காவிட்டால் கடவுளுக்கு எந்த நட்டமும் இல்லை. 

தவம் செய்தால் பயன்பெறுவதும் நாம் தான். செய்யாவிட்டால் இழப்பும் நமக்குதான்.

ஆன்மீகத்தில் வளர்வதற்காகவே தபசு காலம்.

ஆனாலும் வாழ்நாள் முழுவதும் ஆன்மீகத்தில் வளர வேண்டும்.

வளர்ந்தால் நிலை வாழ்வைப் பெறுவோம்."

"'சந்தேகம் தீர்ந்ததா?"

"தீர்ந்தது. தவக் காலத்தில் மட்டுமல்ல, ஆண்டு முழுவதுமே தவம் செய்ய வேண்டும்.

நமது தவத்தினால் பயன் பெறுவது நாம் தான்.

இயேசு நமக்காகத்தான் பிறந்தார், வாழ்ந்தார், மரித்தார், உயிர்த்தார்.

நாம் அவருக்காக வாழ்வதும் நமக்காகத்தான்.

நாம் நிலை வாழ்வு வாழ்வதற்காகத்தான்.''

"'ஆனாலும், பேரப்புள்ள, அன்னை மரியாள் வாழ்ந்தது அவளுடைய மகனுக்காக மட்டும்,

அடிமை தனக்காக வாழ முடியாது.

நாமும் அப்படியே வாழ்வோம்,
ஆண்டவருடைய அடிமைகளாக."

லூர்து செல்வம்

Friday, April 18, 2025

பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார்."(அரு. 20:8)


"பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார்."
(அரு. 20:8)

இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது வெள்ளிக்கிழமை மாலையில்.

ஞாயிற்றுக்கிழமை காலையில்
 மகதலா மரியாள், அன்னை மரியாளின் தங்கை மரியாள்,
அருளப்பரின் தாய் சலோமி மரியாள் ஆகியோர் கல்லறைக்கு வந்தார்கள்.

அதற்கு முன்பே உயிர்த்தெழுந்து விட்ட இயேசு அவர்களுக்கு காட்சியளித்தார்.

அவர்கள் புறப்பட்டுச் சென்று சீடர்களிடம் இதை அறிவித்தார்கள்.

இதைக் கேட்ட இராயப்பரும் அருளப்பரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். 

அருளப்பர்   இராயப்பரை  விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். 

அவர் குனிந்து கல்லறைக்குள் பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; 

ஆனால் உள்ளே நுழையவில்லை. 

அவருக்குப் பின்னால்  வந்த இராயப்பர் நேரே  கல்லறைக்குள் நுழைந்தார். 

அங்குத் துணிகளையும், 
இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். 

அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. 

அதன் பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த அருளப்பர்  உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார். 


இயேசு உயிர்த்தெழுந்தபின்பு  கல்லறைக்கு வந்ததாக மூன்று பெண்கள் குறிப்பிடப் பட்டிருக்கிறார்கள்.

ஆனால் இயேசுவின் தாய் கல்லறைக்கு வரவில்லை.

ஏன்?

இயேசு பாடுகள் படுவதற்கு முன்பே பலமுறை தனது பாடுகளைப் பற்றியும், சிலுவை மரணத்தைப் பற்றியும், உயிர்ப்பைப் பற்றியும் முன்னறிவித்திருந்தார்.

ஆனால் அன்னை மரியாளைத் தவிர வேறு யாரும் அதை நம்பவில்லை.

நம்பாதவர்கள் தான் கல்லறைக்கு வந்தார்கள்.

அவரது உடலில் நறுமணப் பொருட்களைப் பூசுவதற்காக வந்தார்கள்.

இயேசு உயிர்ப்பார் என்று உறுதியாக விசுவசித்த அன்னை மரியாள் இயேசுவின் வரவை எதிர்பார்த்துக் கொண்டு வீட்டிலேயே இருந்தாள்.

இயேசுவும் அதி காலையிலேயே உயிர்த்தெழுந்து தனது தாய்க்குக் காட்சி கொடுத்து விட்டு தான் மற்றவர்களுக்குக் காட்சி கொடுத்தார்.

அதைப் பற்றி நற்செய்தி நூல்களில் குறிப்பிடப் 
படவில்லை.

இயேசு சீடர்களுக்குக் காட்சி கொடுக்குமுன் மூன்று பெண்களுக்குக் காட்சி கொடுத்தார்.

ஏன்?

சீடர்கள் இயேசுவால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்.

மூன்று ஆண்டுகள் இயேசுவோடே இருந்து பயிற்சி பெற்றவர்கள்.

தன்னைப் பற்றி அவர்களிடம் தான் அதிகம் வெளிப்படுத்தி யிருந்தார்.

ஆனால் அவர்கள் பயந்து போய் வெளியே வராமல் அறைக்குள்ளே இருந்தார்கள்.

மகதலா மரியாள் மகதலா என்னும் கடற்கரை ஊரில் ஒரு மீன் பிடிக்கும் குடும்பத்தில் பிறந்தவர்.

அவரது தந்தை மீனவர்.  வசதி படைத்தவர்.

இயேசு அந்த ஊருக்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றிருந்த போது ஏழு பேய்கள் பிடித்திருந்த அவளைக் குணப்படுத்தினார்.

அவள் இயேசுவை இறைமகனாக ஏற்றுக் கொண்டாள்.

ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல இறைவன் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டாள்.

அவர் அவளைக் குணமாக்கியதற்கு நன்றிக் கடனாகத் தன் தந்தையின் பணத்தைக் கொண்டு 

இயேசுவின் நற்செய்திப் பணியின் போது, வேறு சில பெண்களுடன் அவருக்குப் பணிவிடை செய்தாள்.(லூக்கா 8:2,3)

அவளது தன்னலமற்ற பக்தியின் காரணமாகத்தான் இயேசு அவளுக்குக் காட்சி கொடுத்தார்.

அவள்தான் முதலில் சீடர்களுக்கு இயேசு உயிர்த்ததை அறிவித்தாள்.

"மகதலா மரியா சீடரிடம் சென்று, "நான் ஆண்டவரைக் கண்டேன்" என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்."
(அரு.20:18)

ஆகவே மறையியலாளர்கள் அவளை அப்போஸ்தலர்ளின் அப்போஸ்தலி என்று அழைக்கிறார்கள்.
(Apostle of the Apostles)

மற்ற இரு பெண்களில் ஒருவர் அன்னை மரியாளின் தங்கை.
இயேசுவுக்கு உறவினர்.

அடுத்தவர் நற்செய்தி அருளப்பரின் தாய்.

அவர்கள் கல்லறைக்கு வந்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

ஆனால் ஆன்மீக உறவு தவிர வேறு எந்த உறவும் இல்லாத மகதலா மரியாள் வந்ததுதான் அவளது அர்ப்பண உணர்வைக் காட்டுகிறது.

மகதலா மரியாளின் வாழ்விலிருந்து நாம் ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

இறைவனுக்கு சேவை செய்ய நம்மை அவர் தனிப்பட்ட முறையில் அழைக்க வேண்டிய அவசியம் இல்லை.

அவர் ஒவ்வொரு வினாடியும் நம்முடன் இருந்து நம்மைப் பராமரித்து வருகிறார்.

அது ஒன்றே போதும் நம்மை அவருக்கு அர்ப்பணிக்க.

நாம் ஒவ்வொருவரும் நம்மை கடவுளுக்கு அர்ப்பணித்து வாழ்வோம்.

இராயப்பரும் அருளப்பரும் ஓடிச் சென்று கல்லறையைப் பார்த்ததிலிருந்தும் நாம் ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

இருவரும் ஒருமித்து ஓட ஆரம்பித்ததார்கள்.

ஆனாலும் அருளப்பர் இராயப்பரை விட இளையவராகையால்.

 விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். 

கல்லறைக்குள் எட்டிப் பார்த்தார், ஆனால் உள்ளே இறங்கவில்லை.

இராயப்பர் வந்து உள்ளே இறங்கிய‌ பின்புதான் அவர் இறங்கினார்.

இது எதைக் காட்டுகிறது?

இயேசுவின் மேல் அவருக்கு இருந்த உண்மையான கீழ்ப்படிதலைக் காட்டுகிறது.

இயேசு இராயப்பர் மீது தன் திருச்சபையைக் கட்டுவேன் என்று கூறியபோதே இராயப்பர்தான் திருச்சபையின் தலைவர் என்பதைத் தீர்மானித்து விட்டார்.

தலைவர் இறங்குமுன் தான் உள்ளே இறங்கக் கூடாது என்று தீர்மானித்து, அவர் வருமட்டும் காத்திருந்து,

 வந்து அவர் இறங்கிய பின் இவர் உள்ளே  உள்ளே இறங்கினார்.

நாம் தலைமைக்கு மதிப்புக் கொடுக்க அருளப்பரிடமிருந்து கற்றுக் கொள்வோம்.

நமது பங்குத் தளத்தில் ஆன்மீகத்தில் நம்மை வழிநடத்தும் நமது பங்குக் குரு காட்டுகிற வழி நடப்போம்.

பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்வோம்.

அனைத்துக்கும் மேலாக ஆண்டவரின் சித்தத்துக்கு அடி பணிந்து நடப்போம்.

லூர்து செல்வம்.

பாதாளத்தில் இறங்கி.

பாதாளத்தில் இறங்கி.

நாம் பேசுவது ஆன்மீகம். ஆனால் அதைப் பற்றிப் பேச நாம் பயன்படுத்துவது லௌகீக மொழி.

ஆன்மீகம் விண்ணுலகைச் சார்ந்தது.

லௌகீகம் மண்ணுலகைச் சார்ந்தது.

உலகம் நேரத்துக்கும், இடத்துக்கும் உட்பட்டது.

ஆனால் விண்ணுலகில் நேரமும் இல்லை, இடமும் இல்லை.

லௌகீக மொழியால் ஆன்மீகத்தை உள்ளபடியே விபரிக்க முடியாது. புரிந்து கொள்ள வேண்டிய விதமாய்ப் புரிந்து கொள்ள வேண்டும்.

மண்ணுலகில் மனித வாழ்வுக்குத் துவக்கமும் உண்டு, முடிவும் உண்டு. வாழ இடமும் தேவை.

நேரத்துக்கும் இடத்துக்கும் உட்பட்டது மண்ணுலகம்.

இரண்டுக்கும் அப்பாற்பட்டது விண்ணுலகம்.

 மனித ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தபின் நித்தியமும் வாழும்.

உடல் சடப்பொருள், அது மண்ணிலிருந்து எடுக்கப் பட்டது, விண்ணில் அது வாழ இடம் இல்லை.

இயேசு முழுமையாகக் கடவுள், முழுமையாக மனிதன்.

மனிதனாகிய மட்டும் அவர் பிறந்தார், வாழ்ந்தபின் இறந்தார்.

தேவ சுபாவத்தில் துவக்கமும் முடிவும் இல்லாத இயேசுவுக்கு 

மனித சுபாவத்தில் துவக்கமும் முடிவும் இருந்தது.

பெத்லகேம் என்ற இடத்தில் பிறந்து, கல்வாரி மலை என்ற இடத்தில் இறந்தார்.

"போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.

 பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்."

என்று விசுவாச அறிக்கையில் கூறுகிறோம்.

பாதாளம் என்பது இயேசு மனுக் குலத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாக தன்னையே பலியாக ஒப்புக் கொடுக்கும் வரை

அதை எதிர்பார்த்து பழைய ஏற்பாட்டில் வாழ்ந்து மரித்த பரிசுத்தவான்கள் காத்துக் கொண்டிருந்த வாழ்க்கை நிலை.

நமது உலகைப் போன்ற ஒரு இடம் அல்ல.

இறங்கி, ஏறி ஆகியவை மனித மொழி வார்த்தைகள். ஆன்மீகத்தில் அவற்றுக்கு லௌகீக அர்த்தம் கொடுக்கக்கூடாது.

லௌகீகத்தில் ஒரு இடத்தில் தான் ஏறுவோம், இறங்குவோம்.

பாதாளம் ஒரு இடம் அல்ல, வாழ்க்கை நிலை.

இயேசு பாதாளத்தில் இறங்கினார் என்றால் அந்நிலையில் உள்ள ஆன்மாக்களைச் சந்தித்தார் என்பது பொருள்.

அவரது ஆன்மா உலகை விட்டுப் பிரிந்தவுடன் பாதாள நிலையில் இருந்த ஆன்மாக்களைச் சந்தித்து, மோட்ச வாசல் திறந்து விட்டது என்ற நற்செய்தியை அறிவித்தார்.

அவர்களும் இயேசுவோடு மோட்ச நிலையை அடைந்தார்கள்.

இதற்கு எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்?

நேரமே ஆகியிருக்காது, உலகில் மட்டும் தான் நேரம். அதற்கு அப்பால் நேரம் என்ற கருத்துக்கே இடமில்லை.

இயேசு மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தார்.

உலகில் உள்ளவர்களுக்கு மூன்றாம் நாள்.

இயேசு மரித்தது உலகில்.

உலகில் மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தார்.

வெள்ளிக்கிழமை மரித்தார்.

வெள்ளி, சனி, ஞாயிறு - 
 மூன்றாம் நாள் ஞாயிற்றுக் கிழமை காலைமில் உயிர்த்தார்.

உலகில் வாழும் போது சடப் பொருளாக இருந்த அவருடைய உடல் 

வெள்ளிக்கிழமை அதை விட்டு‌ பிரிந்த ஆன்மா அதோடு சேரும் போது ஆன்மீக உடலாக (Spiritual body)மாறியது.

"அவருடைய உடல் ஆவிக்குரியதாகவும் மகிமைப்படுத்தப் பட்டதாகவும் மாறியது"

His body became spiritualized and glorified.  

இயேசு மரிப்பதற்கு முன் ஒரு இடத்தில் வசித்தார், இடம் விட்டு இடம் நடந்து சென்றார்.

உயிர்த்த பின் அன்னை மரியாளுக்கும், அவரைப் பார்க்க கல்லறைக்கு வந்த பெண்களுக்கும், சீடர்களுக்கும் காட்சி கொடுத்தார். அவர்களோடு வசிக்கவில்லை. விண்ணக நிலையில் வாழ்ந்து கொண்டு மண்ணில் காட்சி கொடுத்தார்.

(அன்னை மரியாள் பாத்திமாவிலும், வேளாங்கண்ணியிலும் காட்சி கொடுத்தது போல)

எங்கும் நடக்க வேண்டிய அவசியம் இல்லை, எங்கே இருக்க வேண்டும் என்று எண்ணுகிறாரோ அங்கு இருந்தார், பூட்டிய அறைக்குள் கூட.

தனது காட்சிகள் மூலம் தான் உயிர்த்தெழுந்ததை உறுதிப்படுத்தினார்.

உலக கணக்குப்படி நாற்பது நாட்கள் பல முறைகள் கொடுத்து விட்டு,

அதன்பின் காட்சிகள் கொடுப்பதை நிறுத்தினார்.

ஆனால் திவ்ய நற்கருணை மூலம் தொடர்ந்து திருச்சபையில் வாழ்ந்து வருகிறார்.

திருச்சபையின் தொடக்கத்திலிருந்தே அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் தனது உடலையும், இரத்தத்தையும் உணவாகக் கொடுத்து வருகிறார்.

அன்னை மரியாள் மரித்த பின்னும் அவளுடைய உடல் இயேசுவின் உடலைப் போல ஆன்மீக உடலாக மாறி, விண்ணகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, அதாவது விண்ணக நிலையை அடைந்தது.

அன்னை மரியாளும் தன் மகனைப் போல ஆன்ம, சரீரத்தோடு விண்ணகத்தில் வாழ்கிறாள்.

உலக முடிவில் நாமும் அப்படியே உயிர் பெற்று, இயேசுவோடும், அன்னையோடும் ஆன்ம சரீரத்தோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்.




.

Thursday, April 17, 2025

"அந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு, "எல்லாம் நிறைவேறிற்று" என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்."(அரு.19:30)

"அந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு, "எல்லாம் நிறைவேறிற்று" என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்."
(அரு.19:30)

இயேசு மனிதனாக உலகில் வாழ்ந்தது 33 ஆண்டுகள்.

அதில் திருக் குடும்பத்தில் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தது 30 ஆண்டுகள்.

நற்செய்தியை அறிவித்தது மூன்று ஆண்டுகள்.

மூன்றாவது ஆண்டின் இறுதி நாள் புனித வெள்ளி.


பிற்பகல் மூன்று மணிக்கு 
இயேசு, "எல்லாம் நிறைவேறிற்று" என்று கூறித் தலை சாய்த்து ஆவியைத் தந்தையிடம் ஒப்படைத்தார்."

"எல்லாம் நிறைவேறிற்று" என்றால்?

எந்த நோக்கத்திற்காக உலகுக்கு வந்தாரோ அந்நோக்கம் முழுமையாக நிறைவேறிற்று.

மனுக் குலத்தின் பாவத்தின் காரணமாக மோட்ச வாசல் அடைக்கப் பட்டிருந்தது.

மனுக் குலத்தின் பாவங்களுக்குப் பரிகாரம் செய்து 
அதை மீட்டு 
மனிதர்களை மோட்ச வாழ்வுக்கு ஏற்றவர்களாக மாற்றுவதற்காக இறை மகன் மனுமகனாகப் பிறந்தார்.

 அதற்காக பாடுகள் பட்டு,
 சிலுவையில் தன்னைப் பலியாக ஒப்புக் கொடுத்தார்.

தன்னைப் பலியாக ஒப்புக் கொடுத்தோடு அவர் உலகுக்கு வந்ததன் நோக்கம் நிறைவேறிற்று.

இயேசுவின் சிலுவை மரணத்துக்கு முன் இறந்த பரிசுத்தவான்கள் 

 மோட்ச வாசல் அடைக்கப் பட்டிருந்ததால் 

வாசல் திறக்கும் நேரத்தை எதிர் பார்த்து பாதாளத்தில் காத்துக் கொண்டிருந்தனர்.

இயேசு தன் ஆவியைத் தந்தையிடம் ஒப்புக் கொடுத்த வினாடி மோட்ச வாசல் திறந்தது, அதாவது மனுக் குலம் மீட்கப்பட்டது.

இயேசுவின் ஆத்மா பாதாளங்களில் இறங்கி அங்கு காத்துக் கொண்டிருந்த அனைத்து ஆன்மாக்கள் மீட்கப்பட்டு விட்ட நற்செய்தியை அறிவித்தார்.

அவர்கள் பாதாள வாழ்வு நிலையிலிருந்து மோட்ச நிலைக்கு மாறினார்கள்.

ஆக, இயேசுவின் சிலுவை மரணத்துடன் அவர் எதற்காக உலகுக்கு வந்தாரோ அந்நோக்கம்  நிறைவேறிற்று.

நம்மிலும் அது நிறைவேற நாம் பாவப் பரிகார வாழ்வு வாழ்ந்து, புண்ணியத்தில் வளர வேண்டும்.

இயேசு நமது பாவங்களுக்கும்‌ பரிகாரம் செய்து, நமது பாவங்களுக்கான மன்னிப்பைத் தயார் நிலையில் வைத்திருக்கிறார்.

பாவம் செய்தவர்கள் நாம்.

ஆகவே நாமும் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.

இயேசு செய்த பரிகாரம் நமது பரிகாரத்துக்கு ஆன்மீக  சக்தியைக் கொடுக்கிறது.

திருமுழுக்கின்போது நமது சென்மப் பாவத்திலிருந்து விடுதலை பெற்று விட்டோம்.

அதற்குப் பிறகு நாம் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்புப் பெறுவதற்காகத்தான்‌ பாவ சங்கீர்த்தனம் என்னும் திரு அருட்சாதனத்தை இயேசு தந்திருக்கிறார்.

நமது பாவங்களுக்காக மனம் வருந்தி, பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்பு பெறுவோம்.

அதன்பின் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்வோம்.

நாம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு கட்டத்தையும் ஏற்று, அதை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஆண்டவருக்கு ஒப்புக் கோடுப்போம்.

துன்பங்கள் வரும்போது அவற்றை பாவப் பரிகாரச் சிலுவையாக ஏற்றுக் கொள்வோம்.

எவ்வளவுக்கு எவ்வளவு சிலுவைகளைச் சுமக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு பாவப் பரிகாரம் அதிகரிக்கும்.

நமது வாழ்வில் போதிய பாவப் பரிகாரம் செய்யாமல் இறக்க நேரிட்டால் 

உத்தரிக்கிற தலத்தில் முழுப் பரிகாரத்தையும் செய்த பின்பே மோட்சத்திற்குள் நுழைவோம்.

உத்தரிக்கிற தலக் கால அளவு குறைய வேண்டுமானால் வாழும் போதே நிறைய பரிகாரம் செய்ய வேண்டும்.

நாம் செய்யும் பரிகாரத்தை உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காகவும் ஒப்புக் கொடுக்கலாம்.

உறுதியாக நாமும் ஒருநாள் இயேசுவுடன் நித்திய பேரின்ப வாழ்வில் பங்கு பெறுவோம்.

லூர்து செல்வம்.

Wednesday, April 16, 2025

"ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப் பட்டிருக்கிறீர்கள்."(அரு.13:14)

"ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப் பட்டிருக்கிறீர்கள்."
(அரு.13:14)

புனித வியாழன்.

இயேசுவின் இவ்வுலக வாழ்வின் மிக முக்கியமான நாள்.

அவர் எதற்காக உலகுக்கு வந்தாரோ அது ஆரம்பமான நாள்.

மனுக் குலம் செய்த, செய்கின்ற, செய்யவிருக்கிற அனைத்துப் பாவங்களுக்கும் பரிகாரமாக தன்னையே சிலுவையில் பலியாக விண்ணகத் தந்தைக்கு ஒப்புக் கொடுக்கவே உலகுக்கு வந்தார்.

யூதர்களிடையே ஒரு வழக்கம் இருந்தது.

இறைவனுக்குப் பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்ட ஆட்டின் 
இறைச்சியை அவர்கள் சாப்பிடுவது அவர்கள் வழக்கம்.

 "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!"
என்று திருமுழுக்கு அருளப்பர் இயேசுவைக் குறிப்பிட்டார்.

 அதாவது  உலகின் பாவத்தைப் போக்குபவதற்காகப் பலியாகப் போகும் ஆட்டுக்குட்டி.

பலியிடப்பட்ட ஆட்டுக்குட்டியின் இறைச்சியை யாருடைய பாவங்களுக்காக அது பலியிடப் படுகிறதோ அவர்கள் உண்ண வேண்டும்.

இயேசுவாகிய ஆட்டுக் குட்டி நமது பாவங்களுக்காக வெள்ளிக் கிழமை பலியிடப்படப் போகிறது.

அவருடைய இறைச்சியை நாம் உண்பதற்காக வியாழக்கிழமை திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.

அதற்காக மாற்கின் இல்லத்தின் மேல் மாடியில் தனது பன்னிரு சீடர்களுக்கும் திவ்ய நற்கருணையாகிய தனது உடலையும் இரத்தத்தையும் உணவாகக் கொடுத்தார்.

அதாவது மறுநாள் பலியிடப்படப் போகும் தன் உடலையும் இரத்தத்தையும் உணவாகக் கொடுத்தார்.

அதே உடலையும் இரத்தத்தையும் நமக்கு உணவாகத் தருவதற்காக வியாழனன்றே குருத்துவம் என்னும் திரு அருட் சாதனத்தை நிறுவினார்.

அவரது சீடர்கள் தான் முதலில் குருப் பட்டம் பெற்றவர்கள்.

இயேசு வியாழனன்று நிறைவேற்றிய திருப்பலியை சீடர்கள் தினமும் நிறைவேற்றினார்கள்.

ஆதிக் கிறிஸ்தவர்கள் சீடர்களின் கரங்களிலிருந்து இயேசுவின் உடலையும், இரத்தத்தையும் பெற்று உண்டார்கள்.

இன்று நாம் அதே இயேசுவின் உடலையும், இரத்தத்தையும் சீடர்களின் வாரிசுகளாகிய நமது குருக்களின் கரங்களிலிருந்து பெற்று உண்கிறோம்.

அன்று சீடர்கள் உண்டதும், இன்று நாம் உண்பதும் அன்று வெள்ளிக்கிழமை கல்வாரி மலையில் பலியான அதே  இயேசுவின் உடலையும், இரத்தத்தையும்தான்.

நாம் திவ்ய நற்கருணை உண்ணும் போது இந்த உண்மை நமது உள்ளத்தில் இருக்க‌ வேண்டும்.

இன்று இரவு நாம் கொண்டாடயிருக்கும் இறுதி இரவு விருந்து (Last Supper) விழாவின்போது இது நமது ஞாபகத்தில் இருக்க வேண்டும்.

இயேசு அன்று தன்னைத் தனது சீடர்களுக்கு உணவாகக் கொடுக்கு முன் அவர்களின் பாதங்களைக் கழுவினார்.


அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு  அவர்களை நோக்கி 

"ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். 

நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்."

என்றார்.

ஆண்டவராகிய அவர் தனது சீடர்களின் பாதங்களை கழுவியதன் மூலம் தாழ்ச்சியின் அவசியத்தை செயல் மூலம் போதிக்கிறார்.

சீடர்கள் சேவை மனப்பான்மையுடன் தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும்.

ஆளும் அதிகாரம் உள்ளவர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளக் கூடாது.

அவர்களைப் படைத்த கடவுளே அவர்களது பாதங்களைக்‌ கழுவும் போது அவர்களும் அதேபோல் செயல்பட வேண்டும்.

ஆண்டவர் திவ்ய நற்கருணை கொடுக்குமுன் சீடர்களின் பாதங்களைக் கழுவியதிலிருந்து நாம் இன்னொரு பாடமும் கற்றுக் கொள்ள வேண்டும்.

திவ்ய நற்கருணை வாங்க வேண்டுமென்றால் நாம் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும்.

சாவான பாவ நிலையில் உள்ளவர்கள் பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்புப் பெறாமல் திவ்ய நற்கருணை வாங்கக் கூடாது.

சாவான‌ பாவத்தோடு நற்கருணை உண்டால் அதுவும் சாவான பாவமாகிவிடும்.

பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்புப் பெற்றபின்பு தான் திவ்ய நற்கருணை வாங்க வேண்டும்.

ஆண்டவர் பரிசுத்தர். அவர் வரும் இடமும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

பரிசுத்த உள்ளத்தோடு இயேசுவை உண்டு பரிசுத்தத் தனத்தில் வளர்வோம்.

லூர்து செல்வம்.

Tuesday, April 15, 2025

"இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?" (மத்தேயு நற்செய்தி 26:15)


"இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?" 
(மத்தேயு நற்செய்தி 26:15)

யூதர்களின் தலைமை குருவும், அவரைச் சேர்ந்தவர்களும் இயேசுவைக் கைது செய்ய சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பன்னிருவருள் ஒருவனாகிய யூதாஸ்  தலைமைக் குருவிடம் வந்து, 

"இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?" என்று கேட்டான்.

அவன் என்ன எதிர் பார்த்தான்?

பணம்.

அவன் எதிர் பார்த்தபடி 
அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணிக் கொடுத்தார்கள். 

இப்போது ஒரு உண்மையை நமது மனதில் வைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் இந்த வசனத்தை நாம் தியானிக்க வேண்டும்.

இயேசுதான் யூதாசைத் தன் சீடர்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுத்தார்.

இயேசுக்கு முக்காலமும் தெரியும்.

நமது முதல் பெற்றோரைப் படைப்பதற்கு முன்னாலேயே அவர்கள் பாவம் செய்வார்கள் என்று கடவுளுக்குத் தெரியும்.

ஆனாலும் அவரது அளவுகடந்த அன்பைப் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு அவர் அவர்களைப் படைத்தார்.

ஆனாலும் சாத்தானின் ஏவுதலால் அவர்கள் பாவம் செய்தார்கள்.

சாத்தான் விலக்கப்பட்ட கனியைத் தன் சோதனைக்குப் பயன்படுத்திக் கொண்டான்.

இயேசு தன் அன்பின்
காரணமாகத்தான் யூதாசைத் தன் 
சீடராகத் தேர்ந்தெடுத்தார். 

யூதாஸ் சீடராகச் சேரும் போது இயேசுவைக் எதிரிகளுக்குக் காட்டிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவனிடம் நிச்சயம் இருந்திருக்காது.

மீட்பரைக் கொன்று விட்டால் 
தான் பாவத்தில் விழத்தாட்டிய மனுக் குலத்தை மீட்புப் பெற விடாமல் தடுத்து விடலாம் என்ற எண்ணத்தால் தான் சாத்தான் யூதாசைத் சோதித்திருக்க வேண்டும்.

அதற்கு அவன் பயன்படுத்திக் கொண்டது யூதாசின் பண ஆசை.

யூதாஸ் இயேசுவை ஏற்றுக் கொண்டாலும் அவனிடம் பண ஆசை இருந்தது.

"எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது."
(மத்தேயு நற்செய்தி 6:24)

என்ற இறைவாக்கு யூதாஸ் விடயத்தில் உண்மையாகி விட்டது.

இயேசுவின் சீடராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் யூதாஸ் அவன் பண ஆசையை விட்டிருக்க வேண்டும். 

ஆனால் அவன் இயேசுவையும் ஏற்றுக்கொண்டு,
 பண ஆசையையும் தன்னுடன் வைத்துக் கொண்டான்.

விளைவு? 

பணம், இயேசு ஆகிய இருதலைவர்களுள் பணத்தின் மீது உள்ள பற்று காரணமாக இயேசுவை எதிரிகளுக்குக் காட்டிக் கொடுத்து விட்டான்.

சாத்தான் யூதாசின் பணப் பற்றைத் தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டான்.

ஆனாலும் இயேசு யூதாசுக்காகவும் சேர்த்து தான் சிலுவையில் மரித்தார்.


"தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" 
(லூக்கா நற்செய்தி 23:34) 

என்ற இயேசுவின் செபத்தில் 
"இவர்களில்" யூதாசும் இருக்கிறான்.

இயேசுவைக் கொல்ல உதவுவது அவன் காட்டிக் கொடுத்ததின் நோக்கமாக இருந்திருந்தால் அவருக்கு மரணத் தீர்ப்பு இடப்பட்ட போது அவன் மகிழ்ந்திருப்பான்.

ஆனால் அவன்  மகிழவில்லை.

"மாசில்லாத இரத்தத்தைக் காட்டிக் கொடுத்து விட்டேனே!"
என வருந்தி, வாங்கிய பணத்தை வீசி எறிந்து விட்டு, நாண்டு கொண்டு இறந்தான்.

செய்தது இன்னதென்று அறியாமல் செய்த செயல் அது.

அவன் ஒன்றை நினைத்துச் செய்தான், வேறொன்று நடந்து விட்டது.

"இதற்கு முன் நடந்தது போல எதிரிகள் அவரைப் பிடிக்க முயலும் போது அவர் அகப்படாமல் நடந்து போய் விடுவார், நமக்கும் பணம் கிடைக்கும்"

என்று எண்ணி காட்டிக் கொடுத்தான்.

நிச்சயமாக இயேசுவின் செபம் யூதாசின் பாவத்தை விடப் பெரியது.

நிச்சயமாக யூதாஸ் மரணத்தின் கடைசி வினாடியில் மனம் திரும்பியிருப்பான்.

மன்னிப்புக் கேட்டிருப்பான்.

மன்னிப்புக் கிடைத்திருக்கும்.

விண்ணக வீட்டுக்கும் போயிருப்பான்.

இப்போது யூதாசின் செயலிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடத்தைக் பற்றி மட்டும் தியானிப்போம்.

நாம் இரு தலைவர்களுக்கும் சேவை முயற்சிக்கிறோமா?

அல்லது,

இயேசுவுக்கு மட்டும் சேவை செய்கிறோமா?

எல்லோருடைய உள்ளத்திலும் இயேசு இருக்கிறார்.

எல்லோருடைய கையிலும் பணம் இருக்கும். பணம் சொந்தமாக இல்லா விட்டாலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமாவது உள்ளத்தில் இருக்கும்.

பணம் இல்லாவிட்டால் இவ்வுலக இன்பங்களை அனுபவித்து வாழ முடியாது.

இயேசுவின் அருள் இல்லாவிட்டால் நித்திய பேரின்ப வாழ்வுக்குள் நுழைய முடியாது.

பொருள் உள்ளோர் இவ்வுலகில் வாழலாம்.

அருள் உள்ளோர் விண்ணுலகில் வாழலாம்.

நமக்கு எந்த வாழ்வு முக்கியம்,
முடிவுள்ள இவ்வுலக வாழ்வா,
முடிவில்லாத விண்ணக வாழ்வா?

இரண்டில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

கடவுளுக்கு சேவை செய்வோர் தங்களிடம் உள்ள பணத்தை கடவுள் சேவைக்குப் பயன்படுத்த வேண்டும்.

கடவுளைப் பணம் சம்பாதிக்கப் பயன்படுத்தக் கூடாது.

உலகத்தை அனுபவித்து விட்டு மரண வேளையில் மனம் திரும்பலாம் என்று எண்ணக் கூடாது.

ஏனெனில் எதிர் பாராத நேரத்தில் மரணம் வரும்.

"என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு" எனச் சொல்வேன்" என்று தனக்குள் கூறிக்கொண்டான். 

ஆனால் கடவுள் அவனிடம், "அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?" என்று கேட்டார். 
(லூக்கா நற்செய்தி 12:19,20)

உலக இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது கூட மரணம் வரலாம்.

ஆகவே, உலக வாழ்வை இறைவனுக்காகப் பயன்படுத்துவோம்.

நம்முடைய உடல், பொருள், ஆவி  அனைத்தும் ஆண்டவருக்காக, ஆண்டவருக்காக மட்டும்.

"அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள்."
(மத்தேயு நற்செய்தி 6:33)

இறைவனை மட்டும் தேடுவோம். அதற்காகப் பணக்தைப் பயன்படுத்துவோம்.

லூர்து செல்வம்

Monday, April 14, 2025

நமது பாவங்களும்இயேசுவின் பாடுகளும்.(தொடர்ச்சி)

நமது பாவங்களும்
இயேசுவின் பாடுகளும்.
(தொடர்ச்சி)


கல்வாரி மலையை அடைந்தவுடன் அவரைச் சிலுவையில் அறையுமுன் வீரர்கள் அவரது ஆடைகளைக் களைந்தார்கள்.

கவர்ச்சிகரமான (Indecent) உடையணிந்து இறை வழிபாட்டுத் தலங்களுக்கு வந்து,  

தாங்கள் பாவம் செய்வது போதாதென்று, 

மற்றவர்களையும் பாவத்துக்குத் தூண்டுவதன் மூலம் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாக இதை ஆண்டவர் ஏற்றுக் கொண்டார்.

இதில் மற்றொரு மறை பொருளும் இருப்பது போல் என் மனதில் படுகிறது.

கடவுள் மனிதனை ஆடை இல்லாதவனாகத்தான் படைத்தார்.

ஆடை எப்போது நுழைந்தது?

நமது முதல் பெற்றோர் தாங்கள் பாவம் செய்ததைக் கடவுளிடமிருந்து மறைப்பதற்காக முதல் ஆடையைக் கண்டு பிடித்தார்கள்.

அப்படியானால் ஆடை பாவத்துக்கு அடையாளம்.

மனுக் குலத்தை பாவத்திலிருந்து மீட்பதற்காகவே சிலுவையில் அறையப்படப் போகிறார் என்பதற்கு அடையாளமாக 

பாவத்தின் அடையாளமான ஆடையைக் களைய அனுமதிக்கிறார்.

பரிசுத்தரான அவரது சிலுவை மரணம்தான் நம்மைப் பாவத்திலிருந்து மீட்டது.

அவரது ஆடை களையப்பட்டது போல நமது பாவமும் களையப்பட வேண்டும்.

இயேசுவின் சிலுவை மரணத்தின் நாளாகிய புனித வெள்ளிக்கு முன்பே நாம் பாவ சங்கீர்த்தனம் செய்து எல்லா பாவங்களுக்கும் மன்னிப்புப் பெற்று விட வேண்டும்.

அதற்குப் பிறகு நாம் பாவமே செய்யக் கூடாது.

இயேசுவின் மரணத்தோடு நமது பாவ வாழ்க்கையும் மரணித்து விட வேண்டும்.

அதாவது பரிசுத்த ஆன்மாவுடன் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும்.

இயேசு உயிர்த்தெழுந்தது போல நாம் பரிசுத்த வாழ்வுக்குள் உயிர்த்தெழ வேண்டும்.

பெற்ற உயிரைக் திரும்ப இழக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்,

அதாவது, பாவத்தில் விழாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

நாம் கைகளால் செய்த பாவங்களுக்காக கைகளில் ஆணிகளை ஏற்றுக் கொண்டார்.


நாம் கால்களால் செய்த பாவங்களுக்காக கால்களில் ஆணிகளை ஏற்றுக் கொண்டார்.

இதயம் இயங்கினால் மனிதன் இயங்குவான்.

இரத்தம் இருந்தால் இதயம் இயங்கும்.

ஆகவே தான் கடைசித் துளி இரத்தத்தையும் சிந்தி நமது அனைத்துப் பாவங்களுக்கும் பரிகாரம் செய்தார்.

நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து நமது பாவங்களுக்கான மன்னிப்பைக் தயார் நிலையில் வைத்திருக்கிறார்.

மன்னிப்பைக் கேட்டுப் பெற வேண்டியது நமது கடமை.

"கேளுங்கள், கொடுக்கப்படும்."  
இது இயேசுவின் வாக்கு.

கேட்போம், 
பெறுவோம், 
பாவ மன்னிப்பையும்,

அதன் பயனாய் நித்திய வாழ்வையும்.

லூர்து செல்வம்.



.


.

Sunday, April 13, 2025

நமது பாவங்களும் இயேசுவின் பாடுகளும்.

நமது பாவங்களும்
இயேசுவின் பாடுகளும்.

கடன் வாங்கியவன் வாங்கிய கடன் முழுவதையுமே பைசா பாக்கி இல்லாமல் திரும்பக் கொடுக்க வேண்டும்.

கொஞ்ச சில்லறையை அள்ளிக் கையில் போட்டு விட்டு,

''கடன் வாங்கினேன், தந்து விட்டேன்" என்று கூற முடியாது.

நமது முதல் பெற்றோர் ஒரு பாவம் செய்தவுடன் மனிதன் செய்கிற பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய இறைமகன் மனுமகனாகப் பிறப்பார் என்று தந்தை இறைவன் வாக்குக் கொடுத்து விட்டார்.

பாவப் பரிகாரம் ஆதாம், ஏவாள் செய்த பாவத்துக்கு மட்டுமல்ல,

அவர்கள் முதல் உலகம் முடியும் வரை வாழ்ந்த, வாழ்கின்ற, வாழப்போகும் கணக்கில் அடங்காத கோடானு மக்களும் செய்த, செய்கின்ற,செய்யப் போகின்ற அத்தனை பாவங்களுக்கும் அவர் பரிகாரம் செய்தார்.

கடவுள் அளவில்லாதவர். ஆகவே அவரது ஒவ்வொரு செயலுக்கும் அளவில்லாத பலன் உண்டு.

ஆகவே அவர் பட்ட அத்தனை பாடுகளையும் பட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு சிறிய செயலே அனைத்துப் பாவங்களுக்கும் பரிகாரமாக ஆகியிருக்கும்.

ஆனால் இயேசு நம்மீது கொண்டுள்ள அளவற்ற அன்பை நாம் உணர வேண்டும் என்பதற்காக நாம் செய்கின்ற ஒவ்வொரு பாவத்துக்கும் அளவில்லாத விதமாய்ப் பரிகாரம் செய்தார்.

பாவங்கள் இருவகை,
ஆன்மாவைச் சார்ந்தவை.
உடலைச் சார்ந்தவை.

பாவமோ, புண்ணியமோ செய்வது ஆன்மா தான்.

சம்பாவனையோ, சம்பாவனை இழப்போ ஆன்மாவுக்குத்தானே.

சிந்தனையால் மட்டும் செய்யப்படும் பாவம் ஆன்மாவைச் சார்ந்தது,

சொல்லாலும் செயலாலும் செய்யப்படும் பாவம் உடலைச் சார்ந்தது.

விசுவாசம்(Faith),
நம்பிக்கை (Hope)
அன்பு(Charity)
ஆகிய புண்ணியங்களும், அவற்றுக்கு எதிரான பாவங்களும் ஆன்மாவைச் சார்ந்தவை.

தலையில் உள்ள வாய், கண், காது, மூக்கு ஆகிய உறுப்புக்களும், உடலில் உள்ள மற்ற உறுப்புகளும் செய்யும் பாவங்கள் உடலைச் சார்ந்தவை.

இவற்றின் உதவியுடன் கோடிக்கணக்கானோர் செய்யும் ஒவ்வொரு பாவத்துக்கும் இயேசு தனது பாடுகளால் பரிகாரம் செய்தார்.

இயேசு கடவுள், அவரால் பாவம் செய்ய முடியாது.  அவரது விருப்பத்துக்கு எதிராக அவரால் செயல்பட முடியாது.

மனித பாவங்களுக்குக் காரணம் அவனுடைய பலகீனம்.

பலகீனம் பாவம் அல்ல.

இயேசு மனிதனாகப் பிறக்கும் போது பாவம் தவிர மற்ற அனைத்து மனித பலகீனங்களையும் ஏற்றுக் கொண்டார்.

மனிதனுடைய முக்கிய பலகீனம் பயம்.

நாம் கடவுளை நம்மைப் படைத்தவராக ஏற்றுக் கொண்டு அவரது விருப்பத்துக்குத் நம்மை அர்ப்பணித்து வாழ்வது விசுவாசம்.

இயேசுவுக்கு விசுவாசம் கிடையாது, ஏனெனில் விசுவசிக்கப்பட வேண்டிய கடவுளே அவர்தான்.

நாம் கண்ணால் பார்க்க முடியாத கடவுளை விசுவசிக்கிறோம்.

நாம் மோட்சத்திற்குச் சென்ற பின் நம்மிடம் விசுவாசமும் நம்பிக்கையும் இருக்காது, ஏனெனில் அவரை நேரில் பார்ப்போம்.

இறைமகன் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றவே மனிதனாகப் பிறந்தார்.

மகன் பாடுகள் பட்டு தனது சிலுவை மரணத்தால் உலiகை மீட்க வேண்டும் என்பதே தந்தையின் சித்தம்.

மனிதர்களாகிய நாம் கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றாமல் பாவம் செய்து விடுகிறோம்.

மனிதர்களுடைய அந்த பாவத்துக்கு பரிகாரம் செய்ய இயேசு கெத்சமனித் தோட்டத்தில் இரத்த வியர்வை‌ வியர்த்தார்.

பாடுகள் படுவதற்காகவே மனிதனாகப் பிறந்தவர் பாடுகள் நெருங்கி வரும்போது அவற்றை நினைத்தவுடன் பயப்பட ஆரம்பித்தார்.

பயம் அதற்கென்றே அவர் ஏற்றுக் கொண்ட மனித பலகீனம்.

அதனால் ஏற்படும் சோதனையும் பாவம் அல்ல.

பயத்தினால் இயேசு தந்தையைப் பார்த்து,

"தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும்."

என்று செபித்தார்.

அவரது உடல் எங்கும் இரத்த வியர்வை வியர்த்தது.

இது இறைவன் சித்தத்தை நிறைவேற்ற விரும்பாமல் நாம் செய்கிற பாவங்களுக்கு இயேசு செய்த பரிகாரம்.

இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நாம் செய்ய வேண்டிய செபத்தை அவரே நமக்கு முன் மாதிரியாக செபித்தார்.

 "ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்."  

நமது வாழ்வில் மிக அதிகமான துன்பங்கள் ஏற்படும் போது எங்கே கடவுள் நம்மைக் கைவிட்டு விட்டாரோ என்று பயப்படுகிறோம்.

இது நம்பிக்கை இன்மை என்னும் பாவம். இதற்கும் காரணம் பயம்தான்.

நமது இந்தப் பாவத்துக்குப் பரிகாரம் செய்ய,

சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த இயேசு 
 "என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்ற திருப்பாடல் 22ஐக் கூறி செபித்தார். 

நாம் பயத்தின் காரணமாக செய்கிற பாவத்திற்கு அவர் பரிகாரம் செய்தார்.

இயேசு கடவுள். ஆகவே அவரிடம் நம்பிக்கை இருக்காது.

அவரே அவரை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆகவே அவரால் நம்பிக்கை இன்மை என்னும் பாவத்தைச் செய்ய முடியாது.

ஆனாலும் நமது நம்பிக்கை இன்மை என்னும் நமது பாவத்துக்குப் பரிகாரமாக 

சிலுவையில் தொங்கும் போது அளவில்லாத வேதனையை நம்பிக்கை இன்மை என்னும் நமது பாவத்துக்குப் பரிகாரமாக ஏற்றுக் கொண்டு 

திருப்பாடல் 22ஐச் செபித்தார்.

இந்த திருப்பாடலை அவர் சொல்லும் அளவுக்கு அவரது வேதனை அதிகமாக இருந்தது.

ஆக பாடுகளின் ஆரம்பத்திலும் முடிவிலும் நாம் செய்யும் ஆன்மாவைச் சார்ந்த இரண்டு முக்கிய பாவங்களுக்குப் பரிகாரம் செய்தார்.

உடல் சார்ந்த பாவங்களுக்கு?

கல் தூணில் கட்டப்பட்டு அடிபட்டபோது கழுத்துக்குக் கீழ் எல்லா உறுப்புகளும் அவை செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக அடி வாங்கின.

இயேசு முள் முடி சூட்டப்பட்டு அடிபட்ட போது முட்கள் தலையிலுள்ள கண்கள், காதுகள், மூக்கு, வாய் வரைக்கும் இறங்கி, 

அவ்வுறுப்புகளால் நாம் செய்த அத்தனை பாவங்களுக்கும் இயேசு பரிகாரம் செய்தார்.

ஆக கற்றூணில் கட்டப்பட்டு அடிபட்ட போதும், முள் முடி சூட்டப்பட்டு அடிபட்ட‌ போதும் 

உச்சந்தலை தொடங்கி உள்ளங்கால் வரை அனைத்து உறுப்புகளும் அடிவாங்கி, 

உள் உறுப்புகளும் அடிவாங்கியதற்குச் சான்றாக இரத்தத்தைக் கக்கியதால் ஏற்பட்ட 

அளவிட முடியாத வேதனையைத் தாங்கிக் கொண்டு 

இயேசு உலகில் தோன்றிய, தோன்றுகிற, தோன்றப் போகின்ற அனைத்து மனிதர்களின் அத்தனை பாவங்களுக்கும் பரிகாரம் செய்தார்.

அவர் பட்ட அடிகளில் உடல் பாதுகாப்புக்காக பிறக்கும் போதே உடன் பிறந்த தோலின் பெரும் பகுதி பிய்ந்து விழுந்து விட்டது.

அதனால் பாதுகாக்கப்பட்ட இரத்தத்தின் பெரும் பகுதி வெளியே கொட்டி விட்டது.

நரம்புகள் ஆங்காங்கே அறுந்து போயிருக்கும்.

இந்நிலையில் பாரமான சிலுவையைத் தூக்கிக் கொண்டு கல்வாரி மலைக்கு இயேசு நடந்தார்.

கலிலேயாவிலிருந்தும், யூதேயாவிலிருந்தும் மட்டுமல்ல உலகில் மற்ற பகுதிகளிலிருந்தும் இஸ்ரயேலர்கள் பாஸ்கா விழா கொண்டாட்டத்திற்காக செருசலேமில் கூடியிருந்த நேரம்.

அவர்கள் மத்தி வழியேதான் இயேசு சிலுவையைச் சுமந்து கொண்டு கல்வாரி மலைக்கு நடக்க முடியாமல் நடந்தார்.

உண்மையான கடவுளை வழிபடாமல் பிற கற்பனைத் தெய்வங்களை வழிபடுபவர்கள் கொண்டாடுகின்ற கொண்டாட்டங்களுக்குப் பரிகாரமாக இயேசு சிலுவையுடன் அடி உதைகளைப் பட்டுக் கொண்டே ஊர்வலமாக நடந்து சென்றார்.

நவ நாகரீக மக்கள் ஒழுக்கமில்லாத உடை அணிந்து பொது இடங்களில் நடமாடும் பாவங்களுக்குப் பரிகாரமாக 

 அவர் அணிந்திருந்த அங்கியையும் பொத்துக் கொண்டு வெளியேறி தெருவில் ஆறு போல் ஓடிய அவரது இரத்த வெள்ளத்தின் ஊடே நடந்து சென்றார் இயேசு.

நாம் அடிக்கடி பாவத்தில் விழுகிறோமே அதற்குப் பரிகாரமாக இயேசு பல முறை விழுந்து எழுந்து நடந்தார்.

அவரது இருபுறமும், முன்னும், பின்னும் அவர்மேல் உள்ள பொறாமை காரணமாகக் கொலைக் களத்திற்கு அழைத்துச் சென்ற யூத சமய‌ப் பெரியவர்கள் மட்டுமல்ல 

அவரால் நோய்கள் குணமான நல்ல சாதாரண மக்களும் நடந்து சென்றார்கள்.

அவர்கள் அனைவரின் பாவங்களுக்கும், நமது பாவங்களுக்கும் பரிகாரமாக தனது பாடுகளை ஒப்புக் கொடுத்துக் கொண்டே இயேசு நடந்தார்.

தன் மகன் மனுக்குலத்தின் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யவே தன்னிடம் பிறந்தார் என்று அன்னை மரியாளுக்குத் தெரியும்.

'உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" என்று கூறிய சிமியோனின் கூற்றுப்படி 

உள்ளத்தை ஊடுருவியிருந்த வியாகுல வாளுடன்

தனது மகனின் பாடுகளை மனுக் குலத்தின் பாவத்துக்குப் பரிகாரமாக பரம தந்தைக்கு ஒப்புக் கொடுத்துக் கொண்டே அன்னை மரியாள் மகனைப் பின் பற்றி நடந்தாள்.
(தொடரும்)

லூர்து செல்வம்.

Saturday, April 12, 2025

"அதுவரை ஒருவருக்கு ஒருவர் பகைவராய் இருந்த ஏரோதும் பிலாத்தும் அன்று நண்பர்களாயினர்."(லூக்கா நற்செய்தி 23:12)


"அதுவரை ஒருவருக்கு ஒருவர் பகைவராய் இருந்த ஏரோதும் பிலாத்தும் அன்று நண்பர்களாயினர்."
(லூக்கா நற்செய்தி 23:12)

இயேசு பிறந்தது யூதேயாவிலுள்ள பெத்லகேமில்.

வளர்ந்தது கலிலேயாவிலுள்ள நசரேத்தில்.

கலிலேயா, யூதேயா, சமாரியா ஆகிய நாடுகளில் நற்செய்தியை அறிவித்தார்.

பாடுகள் பட்டு, சிலுவையில் மரித்தது யூதேயாவிலுள்ள செருசலேத்தில்.

அங்கு தான் யூதர்களுக்கான தேவாலயம் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் யூதர்கள் தாங்கள் எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து மீண்ட நாளின் ஞாபகமாக பாஸ்கா விழாவைக் கொண்டாடுவதற்காக செருசலேம் ஆலயத்தில் கூடுவது வழக்கம்.

அதே காலக்கட்டத்தில் தான் பாவத்தின் அடிமைத் தனத்திலிருந்து நம்மை மீட்க தான் பலியாக வேண்டும் என்பது
இயேசுவின் திட்டம்.

பலியாக மரித்து மூன்றாம் நாள் உயிர்த்து 

அந்நாளைப் புதிய பாஸ்காவாக ,

அதாவது, பாவத்தின் அடிமைத் தனத்திலிருந்து மீண்டதன் ஞாபகமாக 

நாம் கொண்டாட வேண்டும் என்பது அவருடைய திட்டம்.

யூதர்கள் தாங்கள் விடுதலை பெற்ற அன்று ஒரு ஆட்டைக் கொன்று ஆண்டவருக்குப் பலியாக ஒப்புக் கொடுத்து விட்டு அதன் இறைச்சியை உண்டார்கள்.

வெள்ளிக்கிழமை பலியிடப்படப் போகின்ற இறைவனின் ஆட்டுக்குட்டியாகிய தன்‌னைத்
தன் சீடர்களுக்கு பாஸ்கா உணவாகக் கொடுக்க

வியாழக்கிழமை மாலை ஜான் மாற்கின் இல்லத்தின் மாடியறைக்கு‌ இயேசு அவர்களை அழைத்துச் செல்கிறார்.
 

திவ்ய நற்கருணையை ஏற்படுத்தி அதன் மூலம் தனது உடலையும், இரத்தத்தையும் அவர்களுக்கு பாஸ்கா உணவாகக் கொடுக்கிறார்.

தனது சீடர்களுக்குக் குருப்பட்டம் கொடுக்கிறார்.

பாஸ்கா விருந்துடன் இயேசுவின் பாடுகள் ஆரம்பித்து விட்டன.

ஒலிவ மலைப்பகுதியில்தான் அவர் கைது செய்யப்பட வேண்டும், 

தொடர்ந்து தலைமை குருவாலும், பிலாத்துவாலும், ஏரோதுவாலும், திரும்பவும் பிலாத்துவாலும் விசாரிக்கப் பட்டு மரணத்தீர்ப்பிடப்பட வேண்டும்,

வெள்ளிக்கிழமை சிலுவையில் பலியாக வேண்டும்,

கல்லறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும்,

மூன்றாம் நாள் ஞாயிற்றுக் கிழமை உயிர்த்தெழ வேண்டும் 

இதுதான் இறைவனின் நித்திய காலத் திட்டம்.

இயேசு ஜான் மாற்கின் வீட்டிலிருந்து புறப்பட்டுத் தம் வழக்கப்படி ஒலிவ மலைக்குச்  சீடர்களுடன்  சென்றார்.

இயேசுவைக் கைது செய்தது, விசாரித்தது, சிலுவையை அவர் மேல் ஏற்றியது, அவரைச் சிலுவையில் அறைந்தது எல்லாம் மற்றவர்களாக இருக்கலாம்.

ஆனால் இயேசுதான் தன்னைத் தானே நமது பாவங்களுக்குப் பரிகாரமாகத் தன்  தந்தைக்குப் பலியாக ஒப்புக் கொடுத்தார்.

அன்னை மரியாளும் தன் மகனை நமது பாவங்களுக்குப் பரிகாரமாகத் தந்தை இறைவனுக்குப் பலியாக ஒப்புக் கொடுத்தாள்.

முப்பத்து மூன்று ஆண்டுகள் உலகில் வாழ்ந்த இயேசு 
தான் போதித்த அத்தனை போதனைகளையும் பாடுகள் பட்ட ஒரே நாளில் வாழ்ந்து காண்பித்தார்.

போதனைகள்:

1. ஏழைகள் பாக்கியவான்கள்.
2. சமாதானம் செய்வோர் பாக்கியவான்கள்.
3.பகைவர்களை நேசியுங்கள், தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
4.தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. 
5.மன்னியுங்கள்.

1.பிரபஞ்சத்தையே படைத்த இறைமகன் ஒன்றுமில்லாத ஏழையான மனுமகனாகப் பிறந்தார்.

பாடுகளின் போது அணிந்திருந்த அங்கியைத் தவிர வேறு எதுவும் இல்லாத ஏழையாகத்தான் எதிரிகளைச் சந்தித்தார்.

அவர்கள் அதையும் அவரிடமிருந்து களைந்து விட்டு நிர்வாணமாகத்தான் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்.

உலகைப் படைத்து காத்து வரும் அரசருக்கு சிம்மாசனம் ஒரு மரச் சிலுவை.

"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே."

என்று கூறியிருந்த இயேசு நம்மை  இறையாட்சிக்கு ஏற்றவர்களாக மாற்றுவதற்காக அவர் ஏழையாக பிறந்து, ஏழையாக வாழ்ந்து,  ஏழையாக மரித்தார்.

மாட்டுத் தொழுவத்தில் பிறக்கும் போது அவர் படுக்கத் தீவனத் தொட்டியாவது கிடைத்தது.

கல்வாரி மலையில் இறக்கும் போது அதுவும் கிடைக்கவில்லை.

  
குற்றவாளிகளுக்காகச் செய்யப்பட்ட மரச் சிலுவையில் அவர் படுக்கவில்லை, படுக்க வைக்கப் பட்டார்.

அங்காவது அன்னை மரியாள் அவரைத் துணியால் போர்த்தியிருந்தாள்.

இங்கே அதுவும் இல்லை.

பிறந்த கோலத்திலேயே இறந்தார்.

ஏழ்மையை இதை விட செயல் திறனோடு போதிக்க முடியுமா?

2.சமாதானம்  செய்வோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். 

இது அவர் போதனை.

நமது முதல் பெற்றோர் படைக்கப்பட்ட போது கடவுளுக்கும் அவர்களுக்கும் இடையில் சமாதான உறவு நிலவியது.

பாவத்தினால் மனிதன் சமாதான உறவை இழந்தான்.

இயேசு சிலுவையில் தன் உயிரைப் பலியாக்கி மனிதன் இழந்த சமாதானத்தை மீட்டுக் கொடுத்திருக்கிறார்.

மூன்று ஆண்டுகள் போதித்ததை சிலுவையில் மரித்துச் சாதித்தார்.

3.பகைவர்களை நேசியுங்கள், தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யுங்கள். 

 இது அவர் போதனை.

யூத மதப் பெரியவர்கள் இயேசுவைக் கொல்வதற்காக அவரைக் கைது செய்ய வந்தபோது 

இராயப்பர் வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார். 

காது துண்டிக்கப்பட்டவர் அவரைக் கைது செய்ய வந்தவர்.

இயேசு இராயப்பரைக் கண்டித்து விட்டு வெட்டப்பட்ட காதை ஒட்ட வைத்தார்.

பகைவருக்கு நன்மை செய்து விட்டுதான் பகைவர்கள் கையால் சாகப் போகிறார்!

இயேசு கலிலேயாவைச் சேர்ந்தவர் என்று அறிந்தவுடன் பிலாத்து அப்போது செருசலேமுக்கு வந்திருந்த ஏரோதுவிடம் அவரை அனுப்புகிறார், விசாரிக்கப் பட.

ஏரோது கேட்ட கேள்விகளுக்கு இயேசு பதில் எதுவும் கூறவில்லை.

ஏரோது அவரைத் திரும்ப பிலாத்துவிடம் அனுப்பி விட்டான்.

இயேசு அனுப்பப்பட்டது விசாரணைக்கு.

ஆனால் அவர் சென்றுவந்தது சமாதானத் தூதுவராக!

"அதுவரை ஒருவருக்கு ஒருவர் பகைவராய் இருந்த ஏரோதும் பிலாத்தும் அன்று நண்பர்களாயினர்."
(லூக்கா நற்செய்தி 23:12)

தன்னைப் பகைத்த இருவரை இயேசு நண்பர்களாக்கி விட்டார்!

பகைவர்களுக்கு நன்மை செய்தார், சாகப் போகும் போதும்! 

4.தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. 

இது அவர் போதனை.

நாம் பாவத்தால் கடவுளைப் பகைத்தாலும் இயேசு நம்மை நண்பர்களாகத்தான் கருதுகிறார்.

நம்மிடம் இருக்கும் பாவப் பகைமையிலிருந்து நம்மை விடுவிக்க அவர் தன்னையே சிலுவையில் பலியாக்குகிறார்.

இதை விட பெரிய அன்பு யாரிடம் இருக்கிறது!

5.மன்னியுங்கள்.

இது அவருடைய போதனை.

நமக்கு எதிராக யாராவது தவறு செய்தால் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இயேசுவின் மிக முக்கியமான போதனை.

இறை மகனாகிய அவர் மனிதனாகப் பிறந்ததே நமது பாவங்களை மன்னிப்பதற்காகத்தான்.

 "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை"
(லூக்கா நற்செய்தி 23:34)

தனது சிலுவை மரணத்துக்குக் காரணமானவர்களை மன்னிக்கும்படி இயேசு தந்தையிடம் வேண்டுகிறார்.

மன்னிக்கப் பிறந்தவர் மன்னித்து விட்டுதான் இறந்தார்.

நமக்குத் துன்பங்கள் வரும்போது இயேசுவின் போதனைகளையும் சாதனைகளையும் நினைவில் கொள்வோம்.

நாமும் அவற்றைச் செயல்படுத்துவோம்.

லூர்து செல்வம்.

Friday, April 11, 2025

"இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை" என்று சொன்னார்." (அரு. 11:50)

"இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை" என்று சொன்னார்." (அரு. 11:50)


தலைமைக் குருக்களும் பரிசேயரும் தலைமைச் சங்கத்தைக் கூட்டி, இயேசுவை  என்ன செய்யலாம் என்று ஆலோசித்துக்‌ கொண்டிருந்த போது அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்த கயபா என்பவர் 

"இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை" என்று சொன்னார்.

அவர் என்ன பொருளில் சொன்னாலும்,

அவர் சொன்னது 
"தம் இனத்திற்காக மட்டுமின்றி, சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்க்கும் நோக்குடன் அவர்களுக்காகவும் இறக்கப்போகிறார்" என்ற இறைவாக்காகஅமைந்து விட்டது.

தலைமைக் குருவின் பணி மோசேயின் சட்டப்படி மக்களை வழி நடத்துவது.

அவர் வாயிலிருந்து வந்த வார்த்தைகள்,

அவரது சொந்த நோக்கத்துக்கு மாறாக,

இறை வாக்காய் அமைந்து விட்டன.

மனித இனத்தை வாழ வைப்பதற்காக 
தான் இறக்கவே இறைமகன் மனுமகனாய்ப் பிறந்தார்.

ஒரு வகையில் இறைவனின் திட்டம் நிறைவேற யூத மத குருக்கள் உதவியிருக்கிறார்கள்.

இறை நம்பிக்கைக்கு சம்பந்தமே இல்லாத சில உலக நிகழ்வுகள் இறைவன் திட்டம் நிறைவேற உதவிய அனுபவங்கள் நமது வாழ்க்கையிலும் இருந்திருக்கும்.

என்னுடைய தாத்தா இராமசாமி இராயப்பனாக மாறிய நிகழ்வு இப்படித்தான் நிகழ்தது.

அவர் எங்கள் ஊர் இந்துக் கோயில் ஒன்றின் தர்ம கர்த்தா.

அவரது குடும்ப திருமண நிகழ்வு ஒன்றில் அவருக்கும் சக இந்துக்களுக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் இந்து சமயத்தை விட்டு விட்டு கிறிஸ்தவராக மாறினார்.

இராமசாமி இராயப்பனாக மாறினார்.

அவரை மனிதர்கள் யாரும் மாற்றவில்லை.

அவர் மனம் மாறியதற்கும், விசுவாசத்துக்கும் சம்பந்தமே இல்லை.

அவரை மாற்றியது ஊருக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சினை.

ஆனால் இதில் இறைவனின் திட்டம் இருக்கிறது. அவரின்றி அணுவும் அசையாது.

 அவரது மனமாற்றத்தை இறைவன் பயன்படுத்திக் கொண்டார்.

அவரது மகன் இலச்சுமணன் ஞானமணியாக (எனது தந்தை) மாறினார்.

அவரது குடும்பத்திலிருந்து தான் இறைவன் ஒரு சேசு சபைக்குருவையும்
 (சங். சுவாமி. ஞா. மிக்கேல் பெர்க்மான்ஸ் சே.ச)
ஒரு அருட்சகோதரியையும் 
(அருட்சகோதரி அன்னைத் தெரசா) உருவாக்கியிருக்கிறார்.

அவரது பேரன் L.G.M. Prakasam, served as L.R.D.E  Outstanding Scientist.
After retirement he has been serving as Senior Vice president at Astra Microwave Products Ltd , Bengaluru.

இறைவனது வழிகள் வித்தியாசமானவை, அற்புதமானவை.

எந்த நிகழ்விலிருந்தும் அவரால் நன்மையை வரவழைக்க முடியும்.

"ஈசாயின் மகன் தாவீது அரசர்; தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன்."
(மத்தேயு நற்செய்தி 1:6)

இயேசு பாவிகளைத் தேடியே உலகுக்கு வந்தார்.

பாவத்தை வெறுக்கும் அவர் பாவியை நேசிக்கிறார்.

தான்  பாவிகளைத் தேடியே உலகுக்கு வந்ததன் முன் அடையாளமாக 

தாவீது என்னும் மனம் திரும்பிய பாவியை, அதிலும் அவரோடு பாவம் செய்த உரியாவின் மனைவியை தனது மூதாதையர் பட்டியலில் சேர்த்துக் கொண்டார்.

நாமும் பாவிகள் தான். நம்மைத் தேடித்தான் இயேசு உலகுக்கு வந்தார்.

ஆகவே நாம் பாவிகளை நேசிக்க இயேசுவிடமிருந்து கற்றுக் கொள்வோம்.

இன்று நமது ஒன்றிய அரசியல் தலைவர்கள் கிறிஸ்தவத்திற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருப்பது நமக்குத் தெரியும்.

ஆனால் அவர்களின் செயல்களை  கடவுள் தனது திட்டம் நிறைவேற பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

தங்களுடைய செயல்களால் எண்ணற்ற பேர்களை நித்திய பேரின்ப வாழ்வுக்குள் அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களைத் தண்டிப்பதாக நினைத்துக் கொண்டு அவர்களுக்கு உலகத் துன்பங்களிலிருந்து விடுதலை கொடுத்து நித்திய பேரின்ப வாழ்வுக்குள் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் இறைவனிடம் இந்தியா மனம் திரும்ப வேண்டிக் கொண்டிருக்கிறாராகள்.

எதிரிகள் விதைக்கும் ஒவ்வொரு தீமை விதையிலிருந்தும் ஒரு நன்மை முளைத்து வளர்ந்து கொண்டிருக்கும்.

அவர்களுடைய எதிர்மறைச் செயல்களை தன் அன்பர்களின் நன்மைக்கு இறைவன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

மலை வாழ் பழங்குடியினர் நல் வாழ்வுக்காக உழைத்த அருட்தந்தை ஸ்டேன் சுவாமி அவர்களை மறை சாட்சியாக விண்ணகத்துக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர் நமது தலைவர்கள்.

அவர் விண்ணகத்தில் இந்தியத் திரு நாட்டின் மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக மாற எல்லாம் வல்ல இறைவனிடம் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

காற்று அடைக்கப்பட்ட பந்தை எந்த வேகத்தில் கீழ் நோக்கி அடிக்கிறோமோ அதே வேகத்தில் அது மேல் நோக்கி எழும்பும்.

ஆனால் கிறிஸ்தவம் அடிக்கப்பட்ட வேகத்தை விட அதிகமான வேகத்தில் பரவும்.

ரோமை வீரர்கள் தான் இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றார்கள்.

அதற்குத் தலைமை வகித்த ரோமைப் படைத்தளபதி நூற்றுவர் தலைவர் மனம் திரும்பி 

யாரைச் சிலுவையில் அறைந்து கொன்றாரோ அவர்தான் உலக மீட்பர் என்று போதிக்க ஆரம்பித்து விட்டார்.

இயேசுவுக்காகத் தன் உயிரையே தியாகம் செய்து, வேத சாட்சியாக மரித்தார்.

புனித லோன்ஜினுஸ் என்னும் அவருடைய திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16ம் நாள் கொண்டாடுகிறோம்.

(Longinus is  the "Centurion of the Crucifixion" and is venerated as a saint in the Catholic Church. His feast day is celebrated on October 16th.)

ரோமை மன்னர்கள் கிறிஸ்தவத்தை அடியோடு அழிக்க முயன்றனர்.

ஆனால் இன்று அதே ரோமையில் தான் கிறிஸ்தவத்தின் தலைவர் பாப்பரசர் வசித்து நம்மை அரசாள்கிறார்.

கிறிஸ்தவத்துக்கு மாறிய முதல் ரோமை மன்னன் கான்ஸ்டன்டைன்.

கிறிஸ்தவத்தின் எதிரிகளையும் மனம் திருப்பும் வல்லமை கடவுளுக்கு உண்டு.

முதலில் கிறிஸ்தவளாக மாறியவள் கான்ஸ்டன்டைன் மன்னனின் தாய் புனித ஹெலெனா. ( St. Helena)

அவளது மகன் மனம் திரும்புமுன்பே அவள் இரகசியமாக கிறிஸ்தவளாக மாறி விட்டாள். 

 இன்றைய நமது அரசியல் தலைவர்களை விட மோசமான முறையில் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியவர்கள் ரோமை மன்னர்கள்.

ரோமை மன்னனையே மனம் மாறச் செய்த கடவுளால் நம்மவர்களை மனம் மாற்ற முடியாதா?

முடியும்.

அவர்களுக்காக வேண்டிக் கொள்வோம்.

நமது வாழ்வில் என்ன துன்பங்கள் நேர்ந்தாலும்,  நோய் நொடிகள் வந்தாலும், தோல்விகள் ஏற்பட்டாலும் அவையெல்லாம் நமது ஆன்மீக நன்மைக்கே என்று இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

இறைவனிடம் கேட்பது கிடைத்தாலும் நன்றி கூறுவோம்,
கிடைக்காவிட்டாலும் நன்றி கூறுவோம்.

நோய் குணமானாலும் நன்றி கூறுவோம், குணமாகாவிட்டாலும்
நன்றி கூறுவோம்.

என்ன நேர்ந்தாலும் அதை அவரது மகிமைக்காக ஒப்புக் கொடுப்போம்.

லூர்து செல்வம்.