Thursday, June 19, 2025

"மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்.". (மத்தேயு நற்செய்தி 6:19)



"மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்."
(மத்தேயு நற்செய்தி 6:19)

செல்வம் இருவகை, அருட்செல்வம், பொருட்செல்வம்.

அருளின் ஊற்று இறைவன்.
இறைவனோடு ஒன்றித்து வாழ்பவர்கள் ஆன்மாவில் அருள் மிகுந்திருக்கும்.

இறைவனில், இறைவனோடு ஒன்றித்து வாழ்பவர்களின் ஒவ்வொரு செயலும் இறையருளைப் பெற்றுத் தரும்.

நற்செயல்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் பெறும் அருளின் அளவும் அதிகரிக்கும்.

அருளின் அளவு
 அதிகரிக்க அதிகரிக்க விண்ணகத்தில் அவர்கள் அனுபவிக்கயிருக்கும் பேரின்பத்தின் அளவும் அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.

அவர்கள் செய்யும் பிறரன்புச் செயல்கள் தான் நற்செயல்கள்.

இறையன்பினால் தூண்டப்பட்டு இறைவனின் மகிமைக்காக நமது அயலானுக்கு நாம் செய்யும் உதவிச் செயல்கள்தான் நற்செயல்கள்.

ஒரு செயல் தற்செயலாக வேண்டுமென்றால் முதலில் நாம் சாவான பாவமின்றி, இறை உறவில் இருக்க வேண்டும்.

அடுத்து நாம் செய்யும் பிறருதவி தற்பெருமைக்காக இல்லாமல் இறைவனது மகிமைக்காகச் செய்யப்பட வேண்டும்.

வலதுகை செய்வது இடது கைக்குத் தெரியாமல் செய்ய வேண்டும்.

நற்செயல்கள் செய்பவர்கள் இறை அருளில் வளர்ந்து கொண்டிருப்பார்கள்.

பொருட்செல்வர்கள் இறை அருளைப் பற்றிக் கவலைப் படாமல் இவ்வுலகப் பொருளை ஈட்டுவதில் மட்டும் குறியாக இருப்பார்கள்.

உணவு, உடை, இருப்பிடம், பணம், பட்டம், பதவி போன்றவை பொருட்செல்வங்கள்.

கடவுளைத் தேடாமல் இவற்றை மட்டும் இவற்றுக்காக அனுபவிப்பவர்கள் பொருட் செல்வர்கள்.

அருட் செல்வம் நித்திய காலமும் நம்மோடு சேர்ந்து இருக்கும்.

"இயேசுவே இரட்சியும்."

ஒரு முறை செபிக்க ஒரு வினாடி ஆகும்.

ஆனால் அதற்குச் சன்மானமாக நாம் பெறும் இறை அருள் ‌நித்திய காலமாக நம்மோடு இருக்கும்.

பொருட் செல்வம் வெள்ளம் வந்தால் போய்விடும்.

வெந்தணல் பட்டால் எரிந்து விடும்.

ஆனால் உலகமே அழிந்தாலும் அருட் செல்வம் அழியாது.

இறைவனோடு நித்திய பேரின்பத்தில் வாழ வேண்டுமென்றால் நாம் உலகில் அருட்செல்வர்களாக வாழ வேண்டும்.

எது எளிது?  அருட் செல்வத்தை ஈட்டுவதா? பொருட்செல்வத்தை ஈட்டுவதா?

அருட்செல்வத்தை ஈட்டுவதுதான் எளிது.

பொருட்செல்வத்தை ஈட்டுபவர்கள் அது இருக்கும் இடத்தைத் தேடி நாயாய் அலைய வேண்டும்.

இரவு பகல் பார்க்காமல் உழைக்க வேண்டும்.

சிறிது அசந்தால் இலாபமெல்லாம் நட்டமாய் மாறிவிடும்.

சுகமில்லாமல் படுத்து விட்டால் உழைப்பும் போய்விடும், ஈட்டியதும் போய்விடும்.

கோடிக்கணக்காய் ஈட்டி வைத்திருந்தாலும் மரணம் வந்து விட்டால் ஈட்டியவனால் அதை அனுபவிக்க முடியாது.

இருப்பவர்கள் அனுபவிப்பார்கள்.

ஆனால் அருட்செல்வத்தை ஈட்டுவது மிக எளிது, ஏனெனில் நமக்குத் துணையாய் வருபவர் சர்வ வல்லப கடவுள்.

அவர் உதவியுடன் நற்செயல்களைச் செய்து  செய்ததை அவருக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.

தூங்கும் போதும் அருட்செல்வத்தை ஈட்டலாம், நமது தூக்கத்தை
 இறைவனுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.

தூக்கத்தை மட்டுமல்ல, சுவாசிப்பது முதல் எதைச் செய்தாலும் நம்முடன் இருக்கும் இறைவனுக்கு ஒப்புக் கொடுத்தால் போதும்.

நாம் சுகமில்லாமல் படுத்த படுக்கையாய் இருந்தாலும் அதை இறைவனுக்கு ஒப்புக் கொடுத்துவிட்டால் நமது நோயும் அருளை ஈட்டித்தரும்.

பொருட்செல்வர்கள் எதைச் செய்தாலும் தங்களுக்காகச் செய்வார்கள்.

ஆனாலும் செல்வம் ஒரு நாள்
"செல்கிறேன்" என்று டாட்டா காட்டி விட்டுப் போய் விடும்.

ஆனால் அருட்செல்வம் நாம் இறந்தால் நம்மை விண்ணகத்துக்கு அழைத்துச் செல்லும்.

ஆகவே அருட்செல்வத்தை ஈட்டி விண்ணகத்தில் சேர்த்து வைப்போம்.

நித்திய காலமும் அதை அனுபவிப்போம்.

லூர்து செல்வம்.

Wednesday, June 18, 2025

ஐந்து அப்பங்களும் ஐயாயிரம் பேரும்.



ஐந்து அப்பங்களும் ஐயாயிரம் பேரும்.

இயேசு ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் (+ பெண்கள் + சிறுவர்கள்)  பேருக்கு உணவளித்த புதுமை பற்றி தியானிப்போம்.

மக்களுக்கு உணவு கொடுக்க இயேசு பயன்படுத்தியது ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும்.

உணவு உண்டது ஆண்கள் மட்டும் ஐயாயிரம். வழக்கமாக ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக நற்செய்திக் கூட்டங்களுக்கு வருவார்கள்.

அவர்களோடு சிறுவர்களையும் சேர்த்தால் உணவு உண்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தையும் தாண்டும்.

நற் செய்தியை அறிவித்துக் கொண்டிருந்த இயேசு ஏன் வந்தவர்களுக்கு உணவளித்தார்?

நற் செய்தி ஆன்மீக உணவு. அப்பங்கள் உடலுக்கான உணவு.

ஆன்மாவைப் படைத்தவரும், உடலைப் படைத்தவரும் ஒரே கடவுள் தானே.

"இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார்."

மக்கள் கூட்டம் கூட்டமாக இயேசுவைப் பார்க்கச் சென்றது அவரது நற் செய்தியைக் கேட்கவும், உடல்நலம் பெறவும்.

மக்களைப் பார்த்தவுடன் இயேசுவில் உண்டாகும் முதல் உணர்வு பரிவு, அதாவது, இரக்கம்.

இறைமகன் மனிதனாகப் பிறந்ததே மனிதர்கள் மீது அவர் கொண்டிருந்த இரக்கத்தின் காரணமாகத்தான்.

அவரது இரக்கம் ஆன்மீகம் சார்ந்தது தான்.

பாவத்தின் வீழ்ந்த மனிதன் மீது இரக்கம் கொண்டார், 

ஆன்மாவும் சரீரமும் கொண்டவன் மனிதன்.

ஆன்மாவுடனும், சரீரத்தோடும் 

இயேசுவையும், அன்னை மரியாளையும் போல,

மோட்சத்தில் வாழ வேண்டியவன் மனிதன்.

நமது ஆன்மீக வாழ்வில் நாம் முன்னேறிச் செல்ல வேண்டுமென்றால் நமது உடல் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.

அதற்காகவே ஆண்டவர் உடல் நலம் இல்லாதவர்கள் மீது இரங்கி அவர்களுக்கு உடல் நலம் கொடுத்தார்.

ஆன்மாவுக்கு உதவியாக உடல் வாழ உணவு உண்பதும் அவசியம்.

ஆகவே தான் பசியாக இருந்த மக்கள் மீது இரங்கி அவர்களுக்கு உணவு கொடுத்தார்.

ஆக இப்புதுமை நமது ஆண்டவருடைய பரிவை முன் உதாரணமாகக் காட்டுகிறது.

நாமும் நமது அயலான் விடயத்தில் பசியாக இருப்பவர்களுக்கு உணவு கொடுத்து உதவ வேண்டும்.

ஒன்றும் இல்லாமையிலிருந்து உலகைப் படைத்த இறைமகன் மக்களுக்கு உணவு கொடுக்க ஒன்றும் இல்லாமையிலிருந்து அப்பங்களை வரவழைக்கவில்லை.

நற் செய்தியை கேட்க வந்திருந்த ஒரு சிறுவனிடமிருந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் பலுகச் செய்கிறார்.

அந்த சிறுவன் அவனிடம் உள்ளதை மற்றவர்களுக்காகத் தியாகம் செய்கிறான்.

இயேசு இப் புதுமையைச் செய்தது இறைச் சமூகத்தில் உள்ள நமக்கு பாடம் கற்றுக் கொடுக்கவே.

நாம் ஒவ்வொருவரும் சமூக நலனுக்காக நம்மிடம் உள்ளதை, அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், தியாகம் செய்தால் பெரிய மக்கள் நிலத் திட்டங்களை நிறைவேற்றலாம்.

இதை நமக்குப் போதிக்கவே இயேசு சிறுவனிடமிருந்ததை வாங்கி பலுகச் செய்து அனைவருக்கும் உணவளித்தார்.

"இயேசு அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்." (மத்.14:19)

அனைவருக்கும் உணவளித்தவர் அவர்தான். ஆனால் நேரடியாக அவரே அளிக்காமல் தன் சீடர்கள் மூலமாக அளித்தார்.

இன்றும் அப்படித்தான். நாம் அவருடைய சீடர்கள். நம் மூலமாகத்தான் அவருடைய மற்ற மக்களுக்கு உதவ விரும்புகிறார்.

நம்மிடம் உள்ளதெல்லாம் இறைவனுக்கு உரியவை.

அதை என்ன செய்ய வேண்டும் என்று இறைவன் விரும்புகிறாறோ அதைத்தான் நாம் செய்ய வேண்டும்.

நம்மிடம் உள்ளதைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று விரும்புகிறார்.

நம்மை அவரது கரங்களாகப் பயன்படுத்த விரும்புகிறார்.

பயன்படுவோம்.

அவர்கள் வயிறார உண்டபின், "ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்" என்று தம் சீடரிடம் கூறினார். 

மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். (அரு.6:12,13)

உணவை வீணாக்கக் கூடாது என்ற பாடத்தை நமக்குக் கற்பிக்க இயேசு எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வைக்கச் சொன்னார்.

அதையும் மக்களுக்காகத்தான் இயேசு பயன்படுத்தியிருப்பார்.

இந்தப் புதுமையைச் செய்த மறுநாள் அவரைத் தேடி வந்த மக்களிடம்,

 இயேசு, "நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 

அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.

 அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்" .(அரு. 6:26,27)
என்று கூறிவிட்டு,

 "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது." (அரு. 6:35)

என்ற வார்த்தைகள் மூலம் திவ்ய நற்கருணையைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். " (அரு. 6:51)
என்று கூறினார்.

இது அவர் திவ்ய நற்கருணையை ஏற்படுத்தயிருப்பதற்கு முன்னறிவிப்பு.

அப்பங்களைப் பலுகச் செய்தது அதற்கு முன்னுரை.

அப்பங்களைப் பலுகச் செய்ததன் மூலம் அப்பத்தைத் தன் சரீரமாக மாற்றவும் முடியும் என்ற தனது வல்லமையை நமக்கு அறிவிக்கவே இந்தப் புதுமை.

கானாவூர்த் திருமணத்தில் தண்ணீரை இரசமாக மாற்றியதும் இந்த நோக்கத்தோடுதான்.

இயேசுவால் எல்லாம் முடியும்.

எல்லாம் வல்லவர் நம்மோடு இருக்கும் போது நாம் எதற்கு அஞ்ச வேண்டும்?

லூர்து செல்வம்

Tuesday, June 17, 2025

மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது. (மத்தேயு நற்செய்தி 6:1)



''மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது."
(மத்தேயு நற்செய்தி 6:1)


"நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது."

என்று சொன்ன இயேசு  ஏன் "மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள்."
என்று சொல்கிறார்?

ஒரு செயலின் தன்மை அதன் நோக்கத்தில் இருக்கிறது.

தேர்தல் சமயத்தில் அரசியல் வாதிகள் மக்களுக்குப் பணம் கொடுக்கிறார்கள்.

அதற்குப் பெயர் ஈகையா?

இல்லை. இலஞ்சம்.

ஏழைகள் வாழ்வதற்கு உதவியாக பணம் கொடுத்தால் அது ஈகை, தர்மம்.

ஓட்டு வாங்கப் பணம் கொடுத்தால் அது இலஞ்சம்.

செயலின் நோக்கம்தான் அது நல்ல செயலா, கெட்ட செயலா என்பதைத் தீர்மானிக்கிறது.

இயேசுவின் மகிமைக்காக, மக்கள் நம்மில் இயேசுவைக் காண வேண்டும் என்பதற்காகத் தர்மம் கொடுத்தால் அது நற்செய்தி வாழ்க்கை.


சுய விளம்பரத்திற்காக தர்மம் கொடுத்தால் தற்பெருமை. ஒரு வகையில் வியாபாரம்.

மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யக்கூடாது.

இறைவனின் மகிமைக்காக நாம் அறச் செயல்களைச் செய்ய வேண்டும். அதைப் பார்க்கும் மக்கள் நம்மில் இயேசுவைப் பார்ப்பார்கள்.

மீட்புப் பெற வேண்டுமானால் விசுவாசம் மட்டும் போதாது, நற்செயல்களும் அவசியம்.

நமது அயலானுக்கு அவனும் இறைவனின் பிள்ளை என்ற உண்மையின் அடிப்படையில் இறைவனின் அதிமிக மகிமைக்காக செய்யும் உதவியே நற்செயல்.

நற்செயல்களின் நோக்கம் இறைவனை மகிமைப் படுத்துவதற்காக மட்டும் இருக்க வேண்டும்.

சுய திருப்தியோ, சுய விளம்பரமோ நமது நோக்கமாக இருக்கக்கூடாது.

ஆகவேதான் ஆண்டவர்
"நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள்.

 வெளிவேடக்காரர், மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர்.

 அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."
(மத்தேயு நற்செய்தி 6:2)

இறைவனின் மகிமைக்காக நற்செயல் பரிவோருக்கு நித்திய பேரின்ப வாழ்வு சன்மானமாகக் கிடைக்கும்.

சுய விளம்பரத்துக்காகச் செய்வோருக்கு விளம்பரத்தினால் கிடைக்கும் மகிழ்ச்சி மட்டுமே சன்மானம்.

இறைவனிடமிருந்து எதுவும் கிடைக்காது.

பொது மேடைகளில் பொன்னாடை போர்த்தப்பட வேண்டும், நமது சேவைக்காகப் புகழப்பட வேண்டும் என்ற ஆசை நம்மிடம் இருக்கக் கூடாது.

இறைவனுக்கு ஒப்புக் கொடுக்கப்படும் திருப்பலி தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் ஆரம்பித்து தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் நிறைவடையும்.

ஆரம்ப செபத்துக்கும், இறுதி செபத்துக்கும் இடையில் திருப்பலி சார்ந்த நிகழ்வுகள் மட்டுமே இடம் பெற வேண்டும்.

திருப்பலியைச் சாராத எந்த நிகழ்வும் இடம்பெறக் கூடாது.

திருப்பலி பீடம் பொதுக்கூட்ட மேடை அல்ல.

நமக்காகச் சிலுவையைச் சுமந்து சென்றபோது சிலுவையின் பாரம் தாங்காமல் இயேசு மூன்று முறை கீழே விழுந்தார்.

அவர் விழும்போது முட்டு அடிபட்டிருக்கும்.

நமக்காக முட்டில் அடிவாங்கிய இயேசுவின் முன் முழங்காலில் இருந்து, திவ்ய  நற்கருணை வாங்க நமக்கு மனதில்லை.

நட்டமாய் நின்று கையில் வாங்குகிறோம்.

திவ்ய நற்கருணையில் இருப்பவர் கடவுள் என்ற விசுவாசம் நம்மிடம் இருந்தால் அப்படிச் செய்வோமா?

ஆண்டவரையே தங்கள் இட்டப்படி வாங்குபவர்கள் எப்படி இறைவன் இட்டப்படி வாழ்வார்கள்?

கோவிலுக்கு வருவது பிறர் நம்மைப் பார்க்க வேண்டும் என்பதற்காக அல்ல.

பிறர் நம்மைப் பார்க்க வேண்டும் என்பதற்காக நாம் எதையும் செய்யக் கூடாது.

கடவுள் நம்மைப் பார்க்கிறார் என்பதை மனதில் கொண்டு செயல்படுவோம்.

"எல்லாம் உமக்காக, இயேசுவே, எல்லாம் உமக்காக."

லூர்து செல்வம்.

சூன் 25 "கடவுள் நம் வாழ்வில், நம் வாழ்வின் மூலம், மற்றும் நம் வழியாக மற்றவர்களைச் சென்றடைய முடியும்,"

சூன் 25

 "கடவுள் நம் வாழ்வில், நம் வாழ்வின் மூலம், மற்றும் நம் வழியாக மற்றவர்களைச் சென்றடைய முடியும்,"

 இவை பாப்பரசர் 14ஆம் லியோ அவரைச் சந்தித்த மக்களிடம் கூறிய வார்த்தைகள்.

"God can work in our lives, through our lives, and through us reach out to other people," the pope told the assembled crowd.

(https://www.facebook.com/share/p/1ENT4Xm3Ek/?mibextid=xfxF2i)

கடவுள் நம்மைத் தனது சாயலில் படைத்தார்.

தனது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டதன் மூலம் தனது சாயலை நமக்குத் தந்தார்.

கடவுள் அன்பு மயமானவர். நித்திய காலமாக அவர் செய்து கொண்டிருக்கும் ஒரே வேலை அன்பு செய்வது மட்டும் தான்.

தனது அன்பை நம்மோடு பகிர்ந்து கொண்டதன் மூலம் நம்மையும் அன்பு செய்பவர்களாகப் படைத்தார்.

பாவம் உலகிற்குள் நுழையுமுன் மனிதர்கள், 

அதாவது நமது முதல் பெற்றோர்,

 இறைவனை அன்பு செய்தார்கள்,  தாங்களும் ஒருவரை ஒருவர் அன்பு செய்தார்கள்.

 கடவுளை விட விலக்கப்பட்ட கனியை அதிகமாக அன்பு செய்த வினாடி பாவம் நுழைந்தது.

அன்பு இருந்தது, ஆனால் திசை மாறிவிட்டது.

பாவத்திற்கு முன் கடவுளோடு நடந்தவர்கள் பாவத்திற்குப் பின் அவரைப் பார்த்தவுடன் ஒழிந்து கொள்ள ஆரம்பித்தார்கள்.

மனிதனிடமிருந்த இறைவனின் சாயல் என்ன ஆயிற்று?

பழுதடைந்து விட்டது.


காலையில் கண்ணாடி முன் நின்று பவுடர் போட்டு அழகு படுத்தப்பட்ட முகம் 

தெருவுக்கு வந்தவுடன் தெரு மண்ணை அள்ளி வரும் காற்று பவுடர் போட்ட முகத்தில் மண்ணை அப்பிய பின் முகம் எப்படி இருக்கும்,

 அப்படி ஆகிவிட்டது மனித ஆன்மா.

பழுதடைந்த சாயலை மீட்டுத் தர,  

அதாவது, ஆன்மா இழந்த இறை அன்பை மீண்டும் கொடுத்து 

இறைவனோடு நமக்கு இருந்த உறவைப் புதிப்பிக்க இறைமகன் மனுமகனாகப் பிறந்தார்.

திரு முழுக்கு பெற்றவுடன் நாம் பாவத்தால் பழுது படுத்திய இறைச் சாயலை மீண்டும் முழுமையாகப் பெற்றோம்.

"உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்"

"வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை." இவை‌ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகள்.

ஆகவேதான் "நானே உலகின் ஒளி" என்று கூறிய ஆண்டவர்,

"நீங்கள் உலகின் ஒளி" என்றும் கூறினார்.

ஆனால் 

''நானே வழி" என்று கூறிய ஆண்டவர் 

"நீங்களே வழி" என்று கூறவில்லை.

தந்தையிடம் செல்ல அவர் மட்டும்தான் வழி, ஏனெனில் அவர்தான் உலக மீட்பர்.

ஆனாலும் வேறொரு பொருளில் நாம் ஒவ்வொருவரும் 

"நான் வழி" என்று கூறலாம்.

என்ன பொருளில்,

"கடவுள் நம் வாழ்வில், நம் வாழ்வின் மூலம், மற்றும் நம் வழியாக மற்றவர்களைச் சென்றடைய முடியும்,"

 என்று பாப்பரசர் 14ஆம் லியோ கூறுகிறார்.


"கடவுள் நம் வழியாக மற்றவர்களைச் சென்றடைய முடியும்,"

இயேசு உலகெங்கும் நற் செய்தியை அறிவிக்க அவரது சீடர்களைத்தான் அனுப்பினார்.

சீடர்களின் வழியாகத்தான் இயேசு உலகெங்கும் சென்றார்.

சீடர்கள் தங்கள் வாய் மொழிப் போதனை மூலமும், தங்கள் நற்செய்தி வாழ்க்கை மூலமும் இயேசுவை மக்களுக்கு அளித்தார்கள்.

இன்று நாம் இயேசுவின் சீடர்கள்.

நமது முன்மாதிரியான வாழ்வின் மூலம், 

அதாவது நம் வழியாக கடவுள் மற்றவர்களைச் சென்றடைகிறார். 

இயேசுவை அறியாதவர்கள் நம் வழியாக அறிய வேண்டும்.

நாம் சொல்வதைக் கேட்டும், நாம் வாழ்வதைப் பார்த்தும் மற்றவர்கள் இயேசுவை அறிய வேண்டும்.

"இவன் கிறிஸ்தவன், கிறிஸ்துவைப் போல் வாழ்கிறான்.

நாமும் கிறிஸ்துவைப் போல் வாழ வேண்டுமென்றால் இவனைப் போல் வாழ வேண்டும்." என்று மற்றவர்கள் நினைக்க வேண்டும்.

குடிகாரன் வாயிலிருந்து வரும் நாற்றத்தை வைத்து அவன் குடிகாரன் என்பதைக் கண்டு கொள்ளலாம்.

நாம் வாங்கிக் கொடுத்த பௌடரின் வாசத்தை வைத்து மனைவி வருவதை அறிந்து கொள்ளலாம்.

ஒரு கையில் புத்தமும் இன்னொரு கையில் பிரம்பும் இருப்பதைப் பார்த்து இவர் ஒரு ஆசிரியர் என்பதை   அறிந்து கொள்ளலாம்.

ஒருவரது இரக்க குணத்தையும், உதவி செய்யும் மனப்பாங்கையும் வைத்து இவர் கிறித்தவர் என்பதை அறிந்து கொள்ளலாம்.

பகைவரை நேசித்தல்,
 தீமைக்கு நன்மை செய்தல், குற்றம் செய்பவர்களை மன்னித்தல், 
துன்ப நேரத்திலும் முக மலர்ச்சியாக இருத்தல்

போன்ற குணங்கள் நம்மிடம் இருந்தால் நாம் சொல்லாமலே நாம் கிறிஸ்தவர்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள்.

இவ்வாறு நமது வாழ்வின் வழியாக நாம் இயேசுவை மற்றவர்களுக்கு அளிக்கலாம்.

நம்மிடம் யார் வழியாக இயேசு வருகிறார்?

நம்முடைய பங்குக் குருவானவர் வழியாக.

திருப்பலியில் போது குருவானவர் "இது என் சரீரம்" என்று சொல்லும் போது அப்பம் இயேசுவின் உடலாக மாறுகிறது.

"இது என் இரத்தம்" என்று சொல்லும் போது திராட்சை இரசம் இயேசுவின் இரத்தமாக மாறுகிறது.

குருவானவர் கையிலிருந்து தான் இயேசு நமது ஆன்மீக உணவாக வருகிறார்.

குருவானவர் மூலமாகத்தான் இயேசு நமது பாவங்களை‌ மன்னிக்கிறார்.

காலையில் திருப்பலியில் இயேசுவைப் பெற்ற நாம் நாள் முழுவதும் அவரை வாழ வேண்டும்.

நமது வாழ்க்கை மூலமாகத்தான் 
இயேசுவின் சாயலை நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மிடம் பார்ப்பார்கள்.

 பார்த்து அவரைத் தேடி வருவார்கள்.

வருகிறவர்களுக்கு நாம் இயேசுவைக் கொடுக்க வேண்டும்.

இயேசு மக்களிடம் வர  வழியாக நாம் வாழ்வோம்.


லூர்து செல்வம்.

Monday, June 16, 2025

"நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்." (2 கொரிந்தியர் 8:9)

"நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்."
(2 கொரிந்தியர் 8:9)

புனித சின்னப்பர் தான் நற்செய்தியை அறிவித்து மனம் திருப்பிய கொரிந்து நகர மக்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகள்.

இயேசுவின் எந்த பண்புகளை அவர்களும் கொண்டிருக்க வேண்டும் என்பதை இவ்வார்த்தைகள் வலியுறுத்துகின்றன.

அவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் கூறப்பட்ட வார்த்தைகள்.

இறைமகன் இயேசு இயல்பிலேயே செல்வந்தர்.

கோடிக்கணக்கான விண்மின்களையும், கோள்களையும் கொண்ட மாபெரும் பிரபஞ்சம் அவரால் படைக்கப்பட்டது, அவருக்கு மட்டுமே உரியது.

ஆனால் பிரபஞ்சத்தை அவர் அனுபவிப்பதற்காகப் படைக்கவில்லை.

நமக்காகப் படைத்தார்.

இந்த உலகம் முழுவதும் அவருக்கு உரியதாக இருந்தும் அவர் மனிதனாகப் பிறக்க ஒருமாட்டுத் தொழுவையே தேர்ந்தெடுத்தார்.

செல்வந்தர் ஏன் ஏழையாகப் பிறந்தார்?

நம்மைச் செல்வந்தர்களாக மாற்ற.

இறைவன் வாழ்வது ஆன்மீக வாழ்க்கை.

நாமும் ஆன்மீக வாழ்க்கை வாழவே இறைவன் நம்மைப் படைத்திருக்கிறார்.

ஆன்மீக வாழ்க்கை என்றால்?

இறைவனது மகிமைக்காக வாழும் வாழ்க்கை.

இறைவன் படைத்த பிரபஞ்சம் ஒரு லௌகீகப் பொருள்.

லௌகீகப் பொருளாகிய உலகில் நாம் வாழ்ந்தாலும் இறைவனுக்காக வாழ்வது ஆன்மீக வாழ்க்கை.

இறைவனுக்காக வாழாமல் உலகம் சார்ந்த இன்பத்துக்காக மட்டும் வாழ்வது லௌகீக வாழ்க்கை.

நாம் உலகில் உலகுக்காக வாழாமல் இறைவனுக்காக வாழ வேண்டும்.

இறைவனுக்காக வாழ உலகப் பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நண்பர் ஒருவருக்கு ஏதாவது காரணத்தை முன்னிட்டு வாழ்த்துக் கூற வேண்டுமென்றால் நமது வாழ்த்துக்கு அடையாளமாக ஏதாவது ஒரு பரிசுப் பொருள் வாங்கிக் கொடுக்கிறோம்.

இங்கே முக்கியத்துவம் பெறுவது பரிசுப் பொருள் அல்ல.
நமது வாழ்த்துதான்.

அவ்வாறே கடவுள் நம்மை ஒவ்வொரு வினாடியும் பராமரித்து வருவதற்கு நன்றியாக இவ்வுலகப் பொருள் ஒன்றைக் காணிக்கையாகச் செலுத்துகிறோம்.

காணிக்கையாகச் செலுத்தப்படுவது ஒரு லௌகீகப் பொருளாக இருந்தாலும் அது இறைவனுக்கு காணிக்கையாகச் செலுத்தப்படுவதால் ஆன்மீகப் பொருளாக மாறிவிடுகிறது.

நாம் உண்ணும் உணவு எந்தப் பொருளாக இருந்தாலும் அது உணவாக நமது உடலிலுக்குள் சென்றபின் நமது தசையும் இரத்தமுமாக மாறிவிடுகிறதோ

அவ்வாறே உலகைச் சார்ந்த லௌகீகப் பொருள் ஆண்டவருக்குக் காணிக்கையாக செலுத்தப்படும்போது ஆன்மீகப் பொருளாக மாறிவிடுகிறது.

இங்கே முக்கியத்துவம் பெறுவது காணிக்கை, பொருள் அல்ல.

ஆக இறைவன் லௌகீகப் பொருளாகிய உலகைப் படைத்தது ஆன்மீக நோக்கத்துக்காக.

அதன் ஆன்மீக நோக்கம் இரண்டு விதமாக நிறைவேறும்.

அதைக் கோவிலில் காணிக்கையாகச் செலுத்தும்போதும்,

இறைவனால் படைக்கப்பட்ட நமது அயலானுக்கு உதவியாகக் கொடுக்கும்போதும்.

நாம் நம்மைப் படைத்துப் பராமரித்து வரும் கடவுளை முழு மனதோடு நேசிக்க வேண்டும்.

நம்மை நாம் நேசிப்பதுபோல நமது அயலானையும் நேசிக்க வேண்டும்.

நம்மிடம் இறைவனின் சாயல் இருக்கிறது,  ஆகவே நம்மை நாம் நேசிக்க வேண்டும்.

நமது அயலானிலும் இறைவனின் சாயல் இருக்கிறது. ஆகவே நமது அயலானை நாம் நேசிக்க வேண்டும்.

நம்மிலும், நமது அயலானிலும் இறைவனின் சாயல் இருக்கிறது.

ஆகவே நமது அன்பிலும் இறைவனின் சாயல் இருக்கிறது.

அதாவது இறைவனின் மகிமைக்காக நம்மையும், அயலானையும் நேசிக்கும் போது அது ஆன்மீகம்.

இறைவனுக்காக அல்லாமல் நமது சுய திருப்திக்காக நேசித்தால் அது லௌகீகம்.

நாம் இறைவனை  இறைவன் என்பதற்காக அல்லாமல் நமக்கு வேண்டிய உதவிகளுக்காக மட்டும் நேசித்தால் அதற்குள் லௌகீகம் புகுந்து விடுகிறது.

நல்ல சுகம் வேண்டும், 
நல்ல வேலை கிடைக்க வேண்டும், 
நல்ல வருமானம் கிடைக்க வேண்டும்
போன்ற உலகைச் சார்ந்த வசதிகளுக்காக மட்டும் இறைவனிடம் வேண்டுபவர்கள் லௌகீகவாதிள்.

ஏனெனில் அவர்கள் இறைவனைத் தங்கள் உலக வாழ்க்கைக்காகப் பயன்படுத்துகிறார்கள்.

அதாவது தங்களை இறைப்பணிக்காகப் பயன்படுத்தாமல் இறைவனை தங்கள் சொந்த நலனுக்காகப் பயன்படுத்த முயல்கிறார்கள்.

நமது வாழ்க்கை இறைவனை மையமாகக் கொண்டிருக்க வேண்டும், நம்மையே மையமாகக் கொண்டிருக்கக் கூடாது.

இறைவனது விருப்பம் நம்மில் நிறைவேற வேண்டும்.

இறை விருப்பம் நிறைவேற நமது விருப்பத்தைத் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

புனித அல்போன்சா வாழ்நாளில் பெரும் பகுதி சுகமில்லாதிருந்தாள்.

அதுவே இறைவன் சித்தம் என்பதை உணர்ந்து தனது சுகமின்மையை இறைவனுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தாள், புனிதையானாள்.

உலகியலில் ஏழையாகவும், ஆன்மீகத்தில் செல்வியாகவும் வாழ்ந்தாள்.

இயேசு ஏழையாகப் பிறந்ததன் நோக்கம் நம்மை ஆன்மீகத்தில் செல்வந்தர்களாக மாற்ற.

அன்னை மரியாள் அருட் செல்வத்தால் நிறைந்தவள்.

நாமும் நமது அன்னையைப் போல் அருட் செல்வர்களாக வாழ்வோம்.

நம்மிடம் உள்ள பொருளைப் பயன்படுத்தி அருளை ஈட்டுவோம்.

லூர்து செல்வம்.

Sunday, June 15, 2025

"ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்." (மத்தேயு நற்செய்தி 5:39)



"ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்."
(மத்தேயு நற்செய்தி 5:39)

அன்பு செய்கின்றவர்களை அன்பு செய்வது பெரிய சாதனை அல்ல.

நம்மை வெறுப்பவர்களை அன்பு செய்வதுதான் கிறித்தவப் பண்பு.

வெறுப்பவர்களை அன்பு செய்பவன் தான் இயேசுவின் சாயலைப் பெற்றிருக்கிறான்.

பாவம் இறைவனுக்கு எதிரானது.
பாவம் செய்பவன் பாவி.
அதாவது 
இறைவனுக்கு எதிராகச் செயல்படுபவன் பாவி.

"நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்" என்கிறார் இயேசு.


பாவிகள் மனம் திரும்பி நித்திய பேரின்ப வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கி வந்ததன் மூலம் அவரது போதனையை வாழ்ந்து காண்பித்தார்.

ஆன்மீகத்துக்கும், லௌகீகத்துக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு இந்த வசனத்தில் தான் அடங்கியிருக்கிறது.

ஆன்மீகம் எல்லா சூழ்நிலைகளிலும் நன்மையையே செய்யும்,

நன்மையை மட்டுமே செய்யும்.

லௌகீகம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும்.

ஆன்மீகவாதிகள் தங்களுக்கு நன்மை செய்தவர்களுக்கு மட்டுமல்ல, தீங்கு செய்பவர்களுக்கும் நன்மை செய்வார்கள்.

உதவி செய்பவர்களுக்கும் பதில் உதவி செய்வார்கள்,

தீங்கு செய்பவர்களுக்கும் பதில் உதவி செய்வார்கள்.

வாழ்த்துபவர்களையும் வாழ்த்துவார்கள்,

வைகின்றவர்களையும் வாழ்த்துவார்கள்.

ஆனால் லௌகீகவாதிகள் வாழ்த்துபவர்களை வாழ்த்துவார்கள்,

வைபவர்களை பதிலுக்கு வைவார்கள்.

இயேசு தன்னைக் கைது செய்ய வந்தவர்களிடம் தன்னைக் கையளித்தார்.

அவர்கள் தன்னைக் கைது செய்ய கெத்சமனித் தோட்டத்திற்கு வருவார்கள் என்று இயேசுவுக்குத் தெரியும்.

தெரிந்து தான் போனார்.

மூன்று ஆண்டுகள் பொது வாழ்வின் போது தந்தை குறித்த நேரம் வராததால் எதிரிகள் பிடிக்க முயன்ற போது அவர்கள் கையில் அகப்பட்டவில்லை.

ஆனால் நேரம் வந்தவுடன் அவர்கள் கைது செய்ய வந்தபோது தடுக்கவில்லை.

விசாரணை மன்றத்தில் தனக்காக அவர் வாதாடவில்லை.

அவர்கள் அடிக்கும் போது மறுக்காமல் அடிகளை வாங்கிக் கொண்டார்.

மிதிக்கும் போது மிதிகளைத் தடுக்கவில்லை.

மரணத் தீர்ப்பிடும்போது தீர்ப்பை ஏற்றுக் கொண்டார்.

சிலுவையை ஏற்றிய போது மறுக்கவில்லை.

விழுந்தாலும் எழுந்து நடந்தார்.

சிலுவையில் அறைந்தபோது ஏற்றுக் கொண்டார்.

இவ்வளவு தீங்குகளையும் ஏற்றுக் கொண்டு இறுதியில் , யூதாஸ் உட்பட, தனக்கு தீங்கு இழைத்த அனைவரையும் மன்னித்து விட்டார்.

'நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்."

என்ற அவருடைய போதனையை வாழ்ந்து காண்பித்தார்.

அவருடைய போதனைகளை அப்படியே பின்பற்றுபவர்கள் தான் அவருடைய சீடர்கள்.

ரோமைப் பேரரசு நற் செய்தியை அறிவித்ததற்காக அவருடைய சீடர்களைக் கொடுமைப் படுத்தியபோது, அவர்கள் கொடுமையை மறுக்காமல் ஏற்றுக் கொண்டார்கள்.

ஆட்சிக்கு வரும்போது முக்கிய பதவி வேண்டும் என்று இயேசுவிடம் கேட்ட பெரிய யாக்கோபு நற் செய்தியை அறிவித்த போது இயேசுவுக்காக ரோமை அரசிடம் தன் தலையைக் கொடுத்து சீடர்களில் முதல் வேத சாட்சி என்ற பதவியைப் பெற்றார்.

விசாரணை மன்றத்தில் மூன்று முறை இயேசுவை மறுதலித்த இராயப்பர் தலை கீழாக சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

சீடர்களுக்கு ஏற்பட்ட நிலைமை இந்தியாவில் நமக்கும் வரலாம்.

வந்தால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு நாமும் இயேசுவின் சீடர்கள் என்பதை நிருபிப்போம்.

லூர்து செல்வம்

Saturday, June 14, 2025

புதைகுழியும் இரண்டாம் உலகப் போரும்.

புதைகுழியும் இரண்டாம் உலகப் போரும்.


ஒரு கோடிஸ்வரனின் 10 வயது மகன் திறந்த வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அருகில் ஒரு புதைகுழி இருந்தது அவனுக்குத் தெரியாது.

ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தவன் தவறி புதைகுழிக்குள் விழுந்து விட்டான்.

தன்னைக் காப்பாற்றும் படி கத்தினான்.

கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிக் கொண்டிருந்தான்.

அவன் கத்தியது ஒரு ஏழைக் கூலியின் காதில் விழுந்தது.

அவன் தாமதிக்காமல் ஓடிவந்து பையனின் ஆபத்தான நிலையில் தன் உயிரைப் பற்றிக் கவலைப் படாமல் கட்டப்பட்டு அவனைக் காப்பாற்றினான்.

பையன் நன்றி கூறிவிட்டு தன் இல்லம் சென்றான்.

கொஞ்சம் பொறுத்து காப்பாற்றப்பட்ட பையனின் பணக்கார அப்பா மகனைக் காப்பாற்றிய ஏழைக் கூலியின் குடிசைக்கு வந்து,

"எனது மகனின் உயிரைக் காப்பாற்றிய உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.

எவ்வளவு பணம் வேண்டும், கேளுங்கள்.

எவ்வளவு கேட்டாலும் நன்றியுடன் தருவேன்." என்றான்.

ஆனால் ஏழைக் கூலி

"யாராவது உதவியை விற்பார்களா? நீங்கள் நன்றி சொன்னதே போதும். பணம் வேண்டாம்" என்று கூறிவிட்டான்.

பணக்காரன் ஏழைக் கூலியின் மகனைப் பார்த்தான்.

"பணம் வேண்டாம் என்றால் விட்டு விடுவோம். உங்கள் பையனின் படிப்புக்கான செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதற்கு அனுமதி கொடுங்கள்" என்றான்.

மகனின் நலன் கருதி ஏழை அதை ஏற்றுக் கொண்டான்.

பணக்காரனின் உதவியோடு ஏழை பையன் நன்கு படித்ததோடு

 மருத்துவக்கல்லூரியில்  படித்து, தலைசிறந்த டாக்டர் ஆனது மட்டுமல்ல,

பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ உதவிய புது மருந்து ஒன்றையும் கண்டுபிடித்தார்.

அவர்தான் பென்சிலின் மருந்தைக் கண்டு பிடித்த

சர் அலெக்சாண்டர் பிளெமிங் (Sir Alexander Fleming) 

புதை குழிக்குள் விழுந்து காப்பாற்றப் பட்ட பையன் வளர்ந்தபின் சுகமில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அநேக மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் 

சர் அலெக்சாண்டர் பிளெமிங் தான் கண்டுபிடித்த புது மருந்தின் உதவியுடன் அவரைக் காப்பாற்றினார்.

புதை குழியிலிருந்து
காப்பாற்றப்பட்டவர், இங்கிலாந்தின் பிரதமராக இருந்து, இரண்டாம் உலகப் போரில்,நேச நாடுகளின் வெற்றிக்குக் காரணமாக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில்!

அன்று பணக்காரப் பையன் புதைகுழிக்குள் விழாதிருந்திருந்தால் நமக்கு பென்சிலின் மருந்து கிடைத்திருக்காது.

விழுந்தவன் இறந்திருந்தால்
இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகள் தோற்றிருக்கும்.

இந்தியா செர்மனி கைக்கு மாறியிருக்கும்.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது.

ஒரு ஏழையின் பிறரன்பு முயற்சி உலகத்தையே காப்பாற்றியது.

உதவி நிச்சயம் பலன் தரும்.

லூர்து செல்வம்