Friday, August 1, 2025

அவரன்றி அணுவும் அசையாது.



அவரன்றி அணுவும் அசையாது.


Do your best and leave the rest to God என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு.

உன்னால் இயன்றதைச் செய், மீதியைக் கடவுளிடம் விட்டு விடு என்பது இதன் பொருள்.

இது மனிதனுடைய கூற்று.

ஆனால் இறைவன் என்ன சொல்கிறார்?

உன் செயல்களை ஆண்டவரிடம் ஒப்படை; அவற்றை வெற்றியுடன் நிறைவேற்றுவாய். 
(பழமொழி ஆகமம்.16:3)

உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார். 
(1 பேதுரு. 5:7)

மனிதன் "உன்னால் இயன்றதைச் செய், மீதியை இறைவனிடம் விட்டு விடு என்கிறான்.

ஆனால் கடவுள் "உனது எல்லாக் கவலைகளையும் என்னிடம் விட்டு விடு.

நான் உன்னை வாழ வைப்பேன்" என்கிறார்.

நாம் நமது முயற்சியால் உலகுக்கு வந்தோமா?

கடவுளால் வந்தோமா?

 நாம்  வரும் முன் Zero முயற்சி என்று கூட சிந்திக்கக்  நாம் இல்லை.

We were absolutely nothing before our coming into this world.

நாம் உலகுக்குள் வருவதற்கு முழு முதற் காரணம் கடவுள் மட்டுமே.

இப்போதும் சுயமாக நம்மால் எதுவுமே இயலாது, மூச்சு விடக்கூட முடியாது.

நமது உடல் இலட்சக்கணக்கான அணுக்களின் கணம்.

Our body is nothing but a set of countless atoms.

கடவுளின் உதவியின்றி நம் உடலால் அசையக்கூட முடியாது, உள்ளத்தால் சிந்திக்கவும் முடியாது.

அவரன்றி அணுவும் அசையாது.

நம்மால் ஒன்று செய்ய முடியும், நம்மால் நம்மை முழுவதும் கடவுளிடம் ஒப்படைத்து விட முடியும்.

"ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு; அவர் உனக்கு ஆதரவளிப்பார்; அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார்."
(திருப்பாடல்கள்.55:22)

"இதோ ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின்படி எனக்கு ஆகட்டும்'' 

என்ற அன்னை மரியாளின் வார்த்தைகளுக்கு ஆழமான பொருள் இதுதான்.

அடிமையால் சுயமாக
 ஒன்றும் செய்ய முடியாது, முதலாளியின் கட்டளைப்படி நடப்பது மட்டும் தான் அவன் வேலை.

அதுதான் அவன் வாழ்வின் இலட்சியம்.

மரியாள் தனது சுயத்தை முழுவதும் கடவுளிடம் ஒப்படைத்து விட்டாள்.

அவளது ஒவ்வொரு அசைவும் கடவுள் விருப்பப்படி தான் நடந்தது.

எந்த தாயாவது சுயமாகத் தன் மகனைச் சிலுவையில் அறைந்து கொல்ல விடுவாளா?

மரியாள் விட்டாள், ஏனெனில் அது இறைவனின் சித்தம்.

நாம் நம்மை மரியாள் பக்தர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம்.

உண்மையான பக்தன் மாதாவின் அத்தனை குணங்களையும் தான் கொண்டிருக்க வேண்டும்.

நாம் உண்மையான ஆன்மீக வாழ்வு வாழ நம்மை முழுவதும் அடிமையாக இறைவனிடம் ஒப்படைத்து விட்டு அவர் சொற்படி மட்டும் வாழ வேண்டும்.

இயேசு நமக்கு முன் மாதிரிகை காட்டினார்.

தனது தந்தையின் சித்தப்படி நமது பாவங்களுக்குப் பரிகாரமாகத் தன்னையே சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுத்தார்.

அவருடைய சீடர்கள் அவருடைய முன்மாதிரிகைப் படி அவருக்காக தங்கள் உயிரைக் கொடுத்து வேத சாட்சிகளாக மரித்தார்கள்.

நாமும் நம்மை முழுவதும் கடவுளிடம் ஒப்படைத்து விட்டால் ஒவ்வொரு வினாடியும் அவருடைய விருப்பப்படி நடப்போம், அவர் நம்மை நடத்துவார்.

அவருடைய விருப்பம் எதுவாக இருந்தாலும் அதுதான் நமது வாழ்க்கை.

மரணமாக இருந்தால்?

இவ்வுலகில் மரணம் தான் மறு உலகில் நித்திய வாழ்வு.

தனது மரணத்தால் நமது மரணத்தை வென்றவர் இயேசு.  

ஆன்மீக வாழ்வு வாழ 
அவருடைய உதவியால் முயற்சி செய்வோம்,

அவருடைய உதவியால் முயற்சியில் வெற்றி பெறுவோம்.

"வாழ்வது நாம் அல்ல, நம்மில் அவர் வாழ்வார்.''

நாம் எப்படிப்பட்ட உலகில் வாழ்கிறோம்?

சோதனைகள் நிறைந்த உலகில்.

வேதனைகள் நிறைந்த உலகில்.

ஆன்மீகத்துக்கு எதிரான கவர்ச்சிகள் நிறைந்த உலகில்.

யாரை விழுங்கலாம் என்று சாத்தான் சுற்றிக் கொண்டிருக்கும் உலகில்.

யாரைக் கெடுக்கலாம் என்று சாத்தானின் சீடர்கள் அலைந்து கொண்டிருக்கும் உலகில்.

இவர்களுக்கு இடையில் நாம் தனியாக நடந்தால் அவர்கள் விரிக்கும் வலையில் நாம் வீழ்ந்து விட வாய்ப்பு உண்டு. 

ஆனால் சர்வ வல்லப கடவுளின் கையை இறுகப் பற்றிக்கொண்டு நடந்தால்  நமக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது.

தாயின் மடியில் அமர்ந்திருக்கும் குழந்தை எதற்கும் அஞ்சத் தேவையில்லை.

கடவுளின் கரங்களைப் பற்றி நடப்பவர்கள் எந்த சோதனையிலும் விழ மாட்டார்கள்.

எப்போதும் கடவுளுடைய பிரசன்னத்தில் வாழ்பவர்கள் நூறு சதவீதம் ஆன்மீக வாழ்வில் வெற்றி பெறுவார்கள்.

எப்போதும் கடவுளையே நினைத்து வாழ்பவர்களால் அவருக்கு எதிராக எதையும் நினைக்க முடியாது.

கடவுளால் நிறைந்த மனதில் கடவுளைப் பற்றிய சிந்தனைகள் தான் நிறைந்திருக்கும்.

 சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் பரிசுத்தர்களாக வாழ்வார்கள்.

இறைவன் அருளால் நமக்கு எல்லாம் முடியும்.

இறைவனை இறுக்கமாகப் பற்றிக் கொள்வோம்.

அவர் தான் நமக்கு நிலை வாழ்வு.

லூர்து செல்வம்.

Thursday, July 31, 2025

" அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.'(மத்தேயு நற்செய்தி 13:58)



"அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.'
(மத்தேயு நற்செய்தி 13:58)

இயேசு 30 ஆண்டுகள் நசரேத்தில் தன் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தது உலகிலிருந்து மறைந்த‌ வாழ்க்கை.

அவர் இறைமகன் என்று அன்னை மரியாளுக்கும் யோசேப்புக்கும் மட்டும் தான் தெரியும்.

நசரேத் மக்கள் அவரை யோசேப்பின் மகன் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

அதனால் தான் இயேசு பொது வாழ்க்கையின் போது நசரேத்துக்கு வந்த சமயத்தில் அங்கிருந்த மக்கள்

"இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோப்பு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?" (மத்.13:55) என்றார்கள்.

யாக்கோப்பு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் அன்னை மரியாளின் தங்கை மரியாளின் மக்கள், அதாவது, அல்பேயுவின் மக்கள்.

அல்பேயுவுக்கு இன்னொரு பெயர் கிளேயோப்பா.

அதனால்தான் மரியாளின் தங்கையை கிளேயோப்பா மரியாள் என்றும் அழைக்கிறோம்.

கிளேயோப்பா இயேசு உயிர்த்த பின் எம்மாவுக்குச் சென்ற இருவரில் ஒருவர்.

இவர்களில் யாக்கோபும், யூதாவும் இயேசுவின் சீடர்கள்.

இவர்கள் நசரேத்தில் வாழ்ந்தபோது இயேசுவோடு பெரியம்மா மகன் என்ற முறையில் தான் பழகியிருந்திருக்க வேண்டும்.  

பொது வாழ்வுக்கு வந்த பின்பு இயேசு தான் யாரென்று வெளியிட்ட  பின் அவரோடு இறைமகன் என்ற முறையில் பழகினார்கள்.

பொது வாழ்வின் போது இயேசு நசரேத்துக்கு வந்த மக்கள் இயேசுவோடு இவர்களையும் பார்த்திருப்பார்கள்.

இயேசுவின் போதனையைக் கேட்டு வியப்பு அடைந்தாலும் மக்கள் அவரைத் தச்சனின் மகனாகத்தான் பார்த்தார்கள்.

அதாவது இயேசு இறைமகன் என்ற விசுவாசம் அவர்களுக்கு இல்லை.

இயேசு விசுவாசம்  உள்ளவர்களுக்கு மட்டும் புதுமைகள் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

தான் சிறுவயது முதல் வளர்ந்த ஊராக இருந்தாலும் அங்கு வாழ்ந்த மக்களின் விசுவாசமின்மை காரணமாக இயேசு அதிக புதுமைகள் செய்யவில்லை.

இயேசு தனது இந்த செயல் மூலமாக நமக்கு ஒரு பாடம் கற்பிக்கிறார்.

இறைவனிடம் எதைக் கேட்டாலும் விசுவாசத்தோடு கேட்க வேண்டும்.

விசுவாசத்தோடு என்றால்?

 நம்மைப் படைத்த இறைவன் சர்வ வல்லவர் என்பதையும்,

அவர்தான் நம்மை அன்புடன் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதையும்,

நமது உடல், உயிர் உட்பட நாம் சொந்தம் கொண்டாடும் அனைத்தும் அவருடையவை என்பதையும்,

நமது நல வாழ்வில் நம்மை விட கடவுளுக்கு அதிக அக்கறை இருக்கிறது என்பதையும்,

அவர் நமது தந்தை என்பதால் நாம் என்ன கேட்டாலும் நமக்கு நலன் பயப்பதாக இருந்தால் கட்டாயம் தருவார், கேடு விளைவிப்பதாக இருந்தால் தரமாட்டார், அதற்குப் பதில் நமக்குப் பயன்படுவதைத் தருவார் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கடவுள் மீது உறுதியான விசுவாசம் இருந்தால் நமக்கு வேண்டியதைக் கேட்டு விட்டு,

 தரும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துவிட்டு 

நமது கடமைகளை ஒழுங்காகச் செய்து கொண்டிருப்போம்.

கடவுள் என்ன செய்தாலும் நமது நன்மைக்குதான் செய்வார் என நாம் உறுதியாக நம்பினால், 

கடவுள் நாம் கேட்டதை தந்தாலும் அவருக்கு நன்றி கூறுவோம், 

தராவிட்டாலும் நன்றி கூறுவோம்,

கேளாததைத் தந்தாலும் நன்றி கூறுவோம்.

நம்மிடம் கடவுள் மீது உறுதியான விசுவாசம் இருந்தால் நமது ஆன்மீக வாழ்வுக்குக் கேடு விளைவிக்கும் எதையும் கேட்க மாட்டோம்.

கடவுளும் கேட்டதை தருவார்.

முதலில் விசுவசிப்போம்.
விசுவாசத்தோடு கேட்போம்.

கேட்டது கிடைக்கும் 

லூர்து செல்வம்

Wednesday, July 30, 2025

இறைவன் நம்மோடு பேசும் வழிகள்.



இறைவன் நம்மோடு பேசும் வழிகள்.

உலகினராகிய நாம் இருக்கிற பொருட்களைப்
 பயன்படுத்தி புதிய பொருட்களை உருவாக்குகிறோம்.

ஆனால் நித்திய காலமும் சுயமாக வாழும் சர்வ வல்லப கடவுள் ஒன்றுமில்லாமையில் இருந்து நாம் வாழும் பிரபஞ்சத்தைப் படைத்தார்.

மனிதனைப் படைத்த கடவுள் அவன் எப்படி வாழ வேண்டும் என்று வழி காட்ட அவனுள் மனசாட்சியை ஏற்படுத்தினார்.

மனசாட்சி மூலம் மனிதன் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக் கூடாது என்பதற்கான வழியைக் காட்டினார்.

முதலில் மனிதனுடைய மனசாட்சி மூலம்

அதாவது உள்ளுணர்வு மூலம் பேசினார்.

தனக்கு அளிக்கப்பட்ட சுதந்திரத்தைப் பயன்படுத்தி செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியதைச் செய்ததால் மனிதன் பாவம் செய்தான்.

அவனைப் பாவத்திலிருந்து மீட்கவும் அவனோடு நேரடியாகப் பேசவும் அசரீரியான கடவுள் மனிதனாகப் பிறந்தார்.

அன்னை மரியாளின் மூலமாக மனிதனாகப் பிறந்த இறைமகன் இயேசு 

தனது முன்மாதிரிகையான வாழ்க்கை மூலமும், நற்செய்தியை வாய் மொழியில் அறிவித்ததன் மூலமும் மனிதன் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக் கூடாது என்பதற்கான வழியைக் காட்டினார்.

அதோடு மனிதனுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

தனது சிலுவை மரணத்தின் மூலம் மனிதனைப் பாவத்திலிருந்து மீட்டார்.

மனிதன் மீட்பின் பயனை அடைய, அதாவது, பாவமன்னிப்புப் பெற ஏக, பரிசுத்த, அப்போஸ்தலிக்கக் கத்தோலிக்க திருச்சபையை நிறுவினார்.

உலகமெங்கும் நற்செய்தியை அறிவிப்பதும், மனிதர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களை விண்ணகப் பாதையில் வழி நடத்துவதும் திருச்சபையின் பணிகள்.

இப்போது கத்தோலிக்கத் திருச்சபையின் மூலமும்,

கத்தோலிக்கத் திருச்சபையால் தரப்பட்ட பைபிளின் மூலமும்,

 ஆரம்பம் முதல் செய்தது போல மனசாட்சியின் மூலமும்

 இறைவன் நம்மோடு பேசுகிறார்.

தனது மரணத்துக்குப் பின் அவர் உயிர்த்து விண் எய்தி விட்டாலும் தூய ஆவியின் மூலம் திருச்சபையை வழி நடத்துவதோடு, திவ்ய நற்கருணை மூலம் நம்மோடு தொடர்ந்து வாழ்கிறார்.

கத்தோலிக்கத் திருச்சபை இயேசு இறைவனின் நற்செய்தியை உலகெங்கும் அறிவித்துக் கொண்டிருக்கிறது.

இயேசு தான் நிறுவிய திருச்சபை மூலம் உலகம் முழுவதும் தனது  நற் செய்தியை அறிவித்துக் கொண்டிருக்கிறார்.

நாம் கத்தோலிக்கத் திருச்சபைக்குச் செவி கொடுப்பதின் மூலமும்,

பைபிளை வாசிப்பதன் மூலமும் இறைவன் பேசுவதைக் கேட்கிறோம்.

எப்படி காந்தி என்றவுடன் மகாத்மா காந்தி என்று புரிந்து கொள்கிறோமோ 

அதேபோல

திருச்சபை என்றவுடன் கத்தோலிக்கத் திருச்சபை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இராயப்பர் தலைமையில் நிறுவப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபை மட்டுமே இயேசுவால் நிறுவப் பட்டது.

''நீ இராயாய் இருக்கிறாய், இந்த இராயின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்."

விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்றார். 
(மத்தேயு நற்செய்தி 16:28,19)

"என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்,
என் ஆடுகளை மேய்,
என் ஆடுகளைப் பேணி வளர்."
(அரு.21:15,16,17)

என்று ஆண்டவர் சீமோனைப் பார்த்துக் கூறிய வார்த்தைகளே இதற்குச் சான்று.

பாப்பரசர், ஆயர்கள், குருக்கள் ஆகியோர் மூலம் இயேசு பேசுகிறார்.

திருப்பலியின் போது நமது குருக்கள் வைக்கும் பிரசங்கங்கள், 

நமக்குத் தியானம் கொடுக்கும்போது அவர் ஆற்றும் மறை உரைகள், 

பாவ சங்கீர்த்தனத்தின் போது அவர்கள் கொடுக்கும் அறிவுரைகள், 

வீடுகளைச் சந்திக்கும் போது அவர்கள் கூறும் ஆலோசனைகள்,

ஆன்மீக வழிகாட்டுதலின் போது (Spiritual Direction) அவர்கள் கூறும் வார்த்தைகள்

அனைத்தும் இயேசுவின் வார்த்தைகளே.

இயேசு திவ்ய நற்கருணைப் பேழையில் இருந்து கொண்டு தனது குருக்கள் மூலமாக நம்மோடு பேசுகிறார்.

நமது ஆன்மீக வாழ்வில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் நாம் ஆலோசனை கேட்க வேண்டியது இயேசுவின் பிரதிநிதிகளான நமது குருக்களிடம்தான்.

அவர்கள் தரும் ஆலோசனை இயேசு தரும் ஆலோசனை.

இயேசுவின் ஆலோசனைப்படி நடந்தால் நமக்கு விண்ணக வாழ்வு உறுதி.

பரிசேயர்கள் இயேசுவின் வார்த்தைகளில் குறை காண்பதற்காகவே அவரிடம் பேச்சுக் கொடுப்பார்கள்.

நாம் அவர்களைப் போல நடக்கக்கூடாது.

நமது குருக்களில் நாம் இயேசுவைப் பார்க்க வேண்டும்.

பைபிள் வழியாக இயேசு நம்மோடு பேசுகிறார்.

 கத்தோலிக்கத் திருச்சபை தொகுத்துத் தந்த 73 புத்தகங்கள் கொண்ட இறை வாக்குதான் பைபிள்.

நம்மை விட்டு பிரிந்து சென்றவர்கள் பைபிள் என்ற பெயரில் வைத்திருக்கும் புத்தகம் பைபிள் அல்ல.

46 புத்தகங்கள் கொண்ட பழைய ஏற்பாடும், 27 புத்தகங்கள் கொண்ட புதிய ஏற்பாடும் சேர்ந்தது கத்தோலிக்க பைபிள்.

ஒரு ஆளை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் ஆளை முழுவதும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பைபிளுக்கு உரிய 73 புத்தகங்களில் 7 புத்தகங்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

அது Mr. So and so வேண்டும், அவருடைய கால் கைகள் இல்லாமல்
என்று சொல்வது போலிருக்கிறது.

அவர்களை விட்டு விடுவோம், நாம் நமது பைபிளை எப்படி வாசிக்க வேண்டும்?

பள்ளிக் கூடத்தில் பாடப் புத்தகங்களைத் தேர்வு எழுதுவதற்காகப் படிக்கிறோம்.

அதிலுள்ள விடயங்களைப் பற்றி கேட்கப்படும்
கேள்விகளுக்கு பதில் எழுதுவதற்காகப் படிக்கிறோம்.

கணித அறிவு பெற கணிதம் படிக்கிறோம்.

ஆனால் பைபிள் அறிவு பெற பைபிள் வாசிக்கவில்லை.

சாத்தானுக்கு நம்மை விட பைபிள் அறிவு அதிகம், ஆனால் அறிவினால் அவன் மீட்பு அடைய முடியாது.

நாம் பைபிளைக் Cover to cover நன்கு படித்து 

கேட்கப்படும் கேள்விகளுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் அளவுக்குப் பதில் கூற அறிவு இருந்தாலும் 

அந்த அறிவு மட்டும் மீட்பு அடைய உதவாது.

பைபிளை வாழ்வதற்காக வாசிக்க வேண்டும்,

பைபிளை வாழ வேண்டும்.

இயேசு மாட்டுத் தொழுவத்தில் ஏழையாகப் பிறந்து தீவனத் தொட்டியில் கிடத்தப் பட்டார் என்ற வாசிப்பு நாம் ஏழ்மையை நேசிக்கவும் ஏழையாக வாழவும் உதவ வேண்டும்.

நமக்குச் சொந்தமாக பைபிள் இருந்து பயனில்லை, 

நாம் பைபிளுக்குச் சொந்தமாக வேண்டும்.

பைபிள் நம்மை வாழ வைக்க வேண்டும்.

நாம் வாசிக்க வேண்டியது புத்தகத்தை அல்ல, இறை வாக்கை.

நமக்குச் சொந்தமான வாகனத்தை நாம் விரும்பும் இடத்துக்கு ஓட்டிச் செல்வது போல 

பைபிள் அது விருப்பப்படி நம்மை அழைத்துச் செல்ல வேண்டும்.

அவரவர் விருப்பப்படி அவரவர் பைபிளை அழைத்துச் செல்லக்கூடாது. 

அவரவர் விருப்பப்படி பைபிள் வசனங்களுக்குப் பொருள் கூறக்கூடாது.

பைபிளைத் தந்த கத்தோலிக்கத் திருச்சபைக்குதான் அதற்குப் பொருள் கூறும் அதிகாரம் உண்டு.

கத்தோலிக்கத் திருச்சபை கூறும் பொருள் தான் நமது ஆன்மீக வாழ்வின் உயிர்நாடி.

இயேசு தம் உள்ளத்தில் பேசுகிறார், கூர்ந்து கவனிப்போம்.

தான் நிறுவிய திருச்சபை மூலம் பேசுகிறார், அதன்படி வாழ்வோம்

பைபிள் மூலம் பேசுகிறார், இறைவாக்கை நமது வாழ்வாக்குவோம்.

"பற்றுக பற்றற்றான் பற்றினை
அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு "

உலகப் பற்றற்ற இயேசுவை இறுகப் பற்றிக் கொண்டு நாமும் உலகப் பற்றை விடுவோம்.

இயேசுவின் வார்த்தைகள் அதற்குத் துணை நிற்கும்.

லூர்து செல்வம்.

Tuesday, July 29, 2025

" ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும். (மத்தேயு நற்செய்தி 13:44)



"ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும். 
(மத்தேயு நற்செய்தி 13:44)

புகை வண்டியின் வருகையை எதிர்பார்த்து ப்ளாட்பாரத்தில் காத்துக் கொண்டிருக்கிறோம்.

வண்டி வந்தவுடன் ப்ளாட்பாரத்தை விட்டு விட்டு வண்டியில் ஏற வேண்டும்.

ப்ளாட்பாரத்தை விட 
மனமில்லாத வர்கள்  புகை வண்டியில் ஏற முடியாது.

ஹோட்டலில் சாப்பிட விரும்புகிறவர்கள் அதற்கு ஈடான தொகையை இழக்க வேண்டும்.

பணம் கொடுக்காமல்  சாப்பிட முடியாது.

நித்திய பேரின்ப வாழ்வை விரும்புகிறவர்கள் அநித்திய சிற்றின்ப வாழ்வை இழக்கக் தயாராக இருக்க வேண்டும்.

சிற்றின்ப விரும்பிகள் பேரின்பத்துக்கு ஆசைப்பட முடியாது.

நமது ஆண்டவர் கூறிய புதையல் உவமையில் 

நமக்குச் சொந்தமில்லாத ஒரு நிலத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கப் புதையல் இருப்பது நமக்குத் தெரிய வருகிறது.

நமக்குப் புதையல் மேல் ஆசை.

புதையலை எடுக்க வேண்டுமென்றால் நிலத்தைத் தோண்ட வேண்டும்.

அடுத்தவர் நிலத்தை நம்மால் தோண்ட முடியாது.

புதையலை எடுக்க வேண்டுமென்றால் முதலில் நிலத்தை என்ன விலை கொடுத்தாவது வாங்க வேண்டும்.

கையில் போதிய பணம் இல்லையென்றால் நம்மிடம் உள்ள மற்ற பொருட்களை விற்றாவது பணம் திரட்டி புதையல் உள்ள நிலத்தை வாங்க வேண்டும்.

நிலத்தை வாங்கிவிட்டால் புதையல் நமதாகிவிடும்.

இயேசு விண்ணரசை இந்த புதையலுக்கு ஒப்பிடுகிறார்.

நிலத்தை எதற்கு ஒப்பிடலாம்?

நாம் வாழும் உலகம் விண்ணகம் பயணத்துக்கான தளம்.

ஆனால் லௌகீக வாழ்க்கை மூலம் விண்ணரசை அடைய முடியாது.

உலகில் நாம் வாழ வேண்டிய ஆன்மீக வாழ்வு தான் விண்ணரசுக்கான வழி.

லௌகீக வாழ்வு முடிவுள்ளது.

ஆன்மீக வாழ்வு முடிவில்லாதது, உலகில் ஆரம்பித்து மோட்சத்திலும் தொடரும்.

ஆன்மீக வாழ்வையும் விண்ணரசையும் பிரிக்க முடியாது.

ஆனால் இயேசுவின் வழி நடக்கும் ஆன்மீக வாழ்வுதான் விண்ணரசு இருக்கும் நிலம்.
(லௌகீக நிலமல்ல, ஆன்மீக நிலம்.)

இந்த ஆன்மீக நிலத்தை, அதாவது, ஆன்மீக வாழ்வைப் பெற வேண்டுமென்றால் லௌகீக இன்பங்களைத் தியாகம் செய்ய வேண்டும்.

 உலகப் பற்று, 
சிற்றின்ப ஆசைகள்,
பண ஆசை,
ஆடம்பரம்,
உணவு, 
உடை போன்ற உடல் சார்ந்த இன்பங்களில் மீது அளவுகடந்த ஆசை,
பெண்ணாசை,
மண்ணாசை,
பொன்னாசை

போன்ற லௌகீக ஆசைகளைத் தியாகம் செய்து,

ஆன்மீக வாழ்வாகிய நிலத்தை தியாகம் என்ற செல்வத்தைக் கொடுத்து வாங்கி,

சிலுவை என்ற ஆயுதத்தால் தோண்டினால் விண்ணரசு என்ற புதையலை எடுத்து அனுபவிக்கலாம்.

மண்ணரசை விட என்ன வகைகளில் விண்ணரசு சிறந்தது?

மண்ணரசு இடம், காலம் ஆகியவற்றுக்கு உட்பட்டது, ஆகவே தற்காலிகமானது.

விண்ணரசு இடம், காலம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது, ஆகவே நிரந்தரமானது.

மண்ணரசில் வாழ்வோர் அனுபவிப்பது சிற்றின்பம்
விண்ணரசில் வாழ்வோர் அனுபவிப்பது பேன்பம்.

மண்ணரசினர் படைக்கப்பட்ட பொருட்களோடு இணைந்திருப்பர்.
விண்ணரசினர் அனைத்தையும் படைத்த கடவுளோடு ஒன்றித்து வாழ்வர்.

நாம் கடவுளின் அரசை பெறுவதற்கு நம் வாழ்வில் உலகைச் சார்ந்த எல்லாவற்றையும் தியாகம் செய்வோம் 

நமது வாழ்வை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணிப்போம்.

 நாம் எதையாவது விற்கிறோம் என்றால், அதைவிட மதிப்புமிக்க ஒன்றை வாங்கப் போகிறோம் என்று அர்த்தம். 

 உலகச் செல்வங்கள் அனைத்தையும் விட விண்ணரசு  மிக மிக மதிப்புமிக்கது.

 இந்த உலகச் செல்வங்கள், ஆசைகள், கவலைகள் போன்றவை  கடவுளுடனான நமது உறவுக்குத் தடையாக இருப்பதால் அவற்றைத் தியாகம் செய்து விட்டு 

 கடவுளை முழுமையாகச் சார்ந்து வாழ்வதற்காக அவருடைய சித்தத்திற்கு நம்மையே ஒப்புக் கொடுப்போம்.

விணாணரசின் மகிழ்ச்சி நிலையானது. ஆகவே அதை அடைவதற்காக நிலையில்லாதவற்றைத் தியாகம் செய்வோம்.

அழியக்கூடிய பொருட்களைத் தியாக விலையாகக் கொடுத்து அழியாத பேரின்ப அரசை உரிமையாக்கிக் கொள்வோம்.

லூர்து செல்வம்.

Monday, July 28, 2025

நாள் முழுவதும் இடை விடாமல் பராக்கின்றி செபிப்பது எப்படி?



நாள் முழுவதும் இடை விடாமல் பராக்கின்றி செபிப்பது எப்படி?

மனிதனுக்கும், மிருகத்துக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் 

மனிதனுக்கு புத்தி இருக்கிறது, மிருகத்துக்குப் புத்தி இல்லை.

புத்திதான் சிந்திக்கிறது.

சிந்தனையிலிருந்து வார்த்தையும் செயலும் பிறக்கின்றன

இவை இறைவனின் பண்புகள், அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட பண்புகள்.

நாம் இறைவனோடு பேசும் போது நமது சிந்தனை, வார்த்தை, செயல் மூன்றுமே செயல்படுகின்றன.

உதாரணத்திற்கு திவ்ய நற்கருணை நாதரோடு பேச கோவிலுக்குச் செல்கிறோம்.

நமது புத்தி திவ்ய நற்கருணையை இறைமகன் இயேசு என்று ஏற்றுக் கொள்கிறது.

சிந்தனையில் வார்த்தைகளோடு முழங்கால் படியிடுகிறோம்.

நாட்டின் முதல்வரைப் பார்க்கும் போது முழங்கால் படியிடுவதில்லை.

ஏனெனில் நமது புத்தி சொல்கிறது அவர் நம்மைப் போன்ற மனிதன் என்று.

திவ்ய நற்கருணை முன் முழங்கால் படியிடுகிறோம்,

ஏனெனில் நமது புத்தி சொல்கிறது அவர் நம்மைப் படைத்த கடவுள் என்று.

திவ்ய நற்கருணை முன் முழங்கால் படியிடாவிட்டால் நாம் இறைவனுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கவில்லை என்று அர்த்தம்.

இது நின்று கொண்டு நன்மை வாங்குவோர் கவனத்துக்கு.

ஒருவரோடு நேருக்கு நேர் பேசும் போது நமது கவனம் நாம் யாரோடு பேசுகிறோமோ அவர் மேல் இருக்கும்.

வீட்டில் இறைவனிடம் செபிக்கும் போது இறைவனை நமது ஊனக் கண்ணால் பார்க்க முடியாது.

நமது ஆன்மீகக் கண்ணால் மட்டும் பார்க்க முடியும்.

செபிக்கும் போது இறைவனை மனதில் நினைத்துக் கொண்டு அவரோடு பேச வேண்டும்.

கர்த்தர் கற்பித்த செபத்தைச் சொல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

வாயைத் திறந்து, "விண்ணகத்தில் இருக்கும் எங்கள் தந்தையே"  என்று சொல்லும் போது மனதில் விண்ணகத் தந்தை இருக்க வேண்டும்.

அதாவது செபத்தின் போது சிந்தனையும் சொல்லும் இணைய வேண்டும்.

வேறு எதையாவது நினைத்துக் கொண்டு தந்தையை அழைத்தால் அது செபம் அல்ல.

ஆனால் நமது மனம் குரங்கு போன்றது.

நிமிடத்திற்கு நிமிடம் இடம் விட்டு இடம் தாவிக் கொண்டேயிருக்கும்.

காலை உணவை நினைத்துக் கொண்டு, "விண்ணகத்தில் இருக்கும் எங்கள் தந்தையே" என்று சொன்னால் நாம் உணவைத் தந்தையாக ஏற்றுக் கொள்கிறோம் என்று அர்த்தம்.

செபத்தின் போது சிந்தனையும் சொல்லும் இணைந்திருக்க பயிற்சி ஒன்று இருக்கிறது.

நீண்ட செபத்தை ஒரே நேரத்தில் சொன்னால்தான் பராக்கு ஏற்படும்.

செபத்தை வாக்கியம் வாக்கியமாகப் பிரித்து, வாக்கியத்தை வார்த்தை வார்த்தையாக நிறுத்தி மெதுவாக, அமைதியாக மனதில் நினைத்து, தியான முறையில் செபித்தால் வேறு எண்ணங்கள் மனதில் நுழையாது, பராக்கும் ஏற்படாது.

"விண்ணகத்தில்"என்ற வார்த்தையை நினைக்கும் போது மோட்சம் மட்டும் நினைவில் இருக்கும்.


"இருக்கிற" என்று நிறுத்தி சொல்லி, "எங்கள் தந்தையே 'என்று தியானித்தால் மோட்சத்தில் வாழும் தந்தை மட்டும் நினைவில் இருப்பார்.

இப்படி வார்த்தை வார்த்தையாக தியான உணர்வோடு செபித்தால் செபம் தவிர வேறு பராக்கு நுழைய வாய்ப்பே இல்லை.

செபிக்க நீண்ட நேரம் ஆகுமே. ஆனால் என்ன, தேவையில்லாத கற்பனைகளில் நேரத்தை வீணடிப்பதை விட இறைவனோடு இணைந்திருப்பது எவ்வளவோ மேல்.

ஒரு செபமாலை சொல்லும் நேரத்தில் பத்து மணிகள்தான் சொல்வோம்.

தேவையில்லாத பராக்குகளோடு ஒரு செபமாலை சொல்லும் போது கிடைக்கும் பலனை விட பத்து மணிகளில் அதிகப் பலன் கிடைக்கும்.

முறைப்படி செபம் செய்யாமல் சாதாரணமாக இருக்கும் நேரத்தில் கூட சிறு சிறு மனவல்லப செபங்களை மனதில் நினைத்துக் கொண்டிருந்தால் புனிதத்தில் வளர்ந்து கொண்டேயிருப்போம்.

இப்படி செபிக்க பெரிய செபப் புத்தகங்கள் தேவையில்லை.

ஏதாவது ஒரு பைபிள் வசனத்தை மனதுக்குள் நினைத்து அசை போட்டுக் கொண்டிருந்தாலே போதும்.

"உன்னை நீ நேசிப்பது போல உனது அயலானை நேசி."

சிறு வசனம்தான். மனதுக்குள்ளே அசை போட்டுக் கொண்டேயிருந்தால் நம்மை அறியாமலேயே நமக்குள் பிறரன்பு வளரும்.

நமது மனமும் பராக்குகளுக்கு இடம் கொடாமலிருக்க பயிற்சி.

எவ்வளவு செபிக்கிறோம் என்பது முக்கியம் அல்ல, எப்படிச் செபிக்கிறோம் என்பது தான் முக்கியம்.

வார்த்தைகளை விட இறைவனை நினைத்துக் கொண்டிருப்பது தான் இறைவனோடு ஒன்றித்திருக்கத் தேவை.

சிந்தனையில் இறைவன் இருந்தால் சொல்லிலும் செயலிலும் கட்டாயம் இருப்பார்.

லூர்து செல்வம்.

Sunday, July 27, 2025

ஒவ்வொரு இரவும் முதல் இரவாகட்டும்.



ஒவ்வொரு இரவும் முதல் இரவாகட்டும்.

திருமணமான தம்பதியரின் முதல் இரவின் பரவச அனுபவம் (Thrilling experience) வாழ் நாளெல்லாம் தொடர வேண்டுமானால் ஒவ்வொரு இரவையும் முதல் இரவாகக் கருத வேண்டும்.

தங்கள் அறுபதாம் கல்யாண
(60th. Marriage anniversary) இரவைக் கூட முதல் இரவாக அணுகும் தம்பதியர், வயது ரீதியாக அல்ல, உற்சாகம், மகிழ்ச்சி, இன்பம் ஆகியவற்றின் ரீதியாக இளமைக்குத் திரும்புவார்கள்.

எனது பள்ளிக்கூட நாட்களில் ஆண்டுக்கு ஒரு முறை மூன்று நாட்கள் தியானம் இருக்கும்.

மூன்று நாட்களும் தியானப் பிரசங்கங்களில் கூறப்படுபவற்றைத் தியானிக்க வேண்டும்.

மாணவர்கள் ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது.
 
மூன்றாம் நாள் பாவ சங்கீர்த்தனம் முடிந்தவுடன் எங்களுக்கு பரலோக வாழ்வே ஆரம்பித்து விட்டதாக உணர்வு ஏற்படும்.

தியானத்தின் மூன்றாவது நாள் எங்களுக்கு ஆன்மீக வாழ்வின் முதல் நாளாகத் தோன்றும்.

இந்த உணர்வு ஆண்டு முழுவதும் நீடிக்க வேண்டுமானால் ஆண்டின் ஒவ்வொரு நாளையும் முதல் நாளாக எண்ணி வாழ வேண்டும்.

அப்படி வாழ்ந்தால் மூன்று நாள் தியானம் ஆண்டு முழுவதும் நம்மை வழி நடத்தும்.

ஆனால் அனுபவத்தில் தியானம் முடிந்து ஓரிரு வாரங்களில் ஆரம்ப உற்சாகம் குறைய ஆரம்பிக்கும்.

அப்படி குறையவிடாமல் தியான நாட்களில் ஏற்பட்ட ஆன்மீக உணர்வை ஆண்டு முழுவதும் அனுபவிப்பவர்கள் பாக்கியசாலிகள்.

வாழ்வின் ஒவ்வொரு நாளையும் முதல் நாளாக எண்ணி வாழ்பவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆன்மீகத்தில் வளர்ந்து கொண்டிருப்பார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு இவ்வுலக வாழ்வின் இறுதி நாள் விண்ணுலக வாழ்வின் ஆரம்ப நாளாக இருக்கும்.

வாழ்வின் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு வினாடியையும் இப்போதுதான் நமது வாழ்வு ஆரம்பித்திருக்கிறது என்று எண்ணி வாழ வேண்டும்.

ஒவ்வொரு வினாடியிலும் நமது  முழு ஆன்மீகமும் அடங்கியிருக்கிறது.

இந்த வினாடி தான் நமது வாழ்க்கை என்று நினைத்து வாழ்ந்தால் ,

ஒவ்வொரு வினாடியையும்  அப்படியே நினைத்து வாழ்ந்தால் 

ஆரம்ப உற்சாக வாழ்வு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.

நாம் திரு முழுக்குப் பெறுவதுதான் நமது ஆன்மீக வாழ்வின் ஆரம்பம்.

திரு முழுக்குப் பெற்ற பின் நமது ஆன்மா பாவ மாசின்றி பரிசுத்தமாக இருக்கும்.

அந்நிலையை வாழ்நாள் முழுவதும் காப்பாற்ற வேண்டும்.

நாம் திரு முழுக்குப் பெறும் போது சிறு குழந்தைகளாக இருந்திருப்போம்.

அப்போது விபரம் புரியாது.

வளர்ந்து பையனாகும்போது புது நன்மைக்கு நம்மைத் தயாரிப்போம்.

அப்போது பாவ சங்கீர்த்தனம் செய்யும்போது ஆன்மா பரிசுத்தமாகும்.

இந்த ஆரம்ப நிலையை வாழ்வின் ஒவ்வொரு நாளும் காப்பாற்ற வேண்டும்.

பாவ சங்கீர்த்தனம் செய்த பின்
"இப்போது இறந்தால் நமக்கு மோட்சம்" என்ற நம்பிக்கை வரும்.

ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாதவே நினைத்து வாழ்வோம்.

ஒவ்வொரு ஆரம்ப வினாடியையும் இறுதி வினாடியாக நினைத்து வாழ்ந்தால் நம்மால் பாவம் செய்யவே முடியாது.

இறுதி என்று கூறுவது இவ்வுலக வாழ்வின் இறுதி.

ஆன்மீக வாழ்வுக்கு இறுதி கிடையாது.

"கடவுள் இருக்கின்றவராக இருக்கிறவர்."

அவருக்கு இறந்த காலமும் இல்லை, எதிர் காலமும் இல்லை.

எப்போதும் நிகழ் காலத்தில் வாழ்பவர்.

நாமும் கடவுளைப் போல வாழ வேண்டுமென்றால் முடிவு இல்லாத ஆன்மீக வாழ்வில் நமது கவனத்தை முழுவதும் செலுத்த வேண்டும்.

நமது ஆன்மா முடிவு இல்லாதது.

லௌகீக மரணத்துக்குப் பின்னும் ஆன்மா உயிர் வாழும், அதாவது நாம் உயிர் வாழ்வோம்.

ஒரு வகையில் நமக்கு மரணம் கிடையாது.

நித்திய காலமும் எப்படி இறைவனோடு ஒன்றித்து வாழ்வோமோ,

 அப்படியே இப்போதும் செபம் மூலம் இறைவனோடு ஒன்றித்து வாழ்ந்தால் நாம் விண்ணக வாழ்வை பூமியிலேயே ஆரம்பித்து விட்டோம் என்று தான் அர்த்தம்.

நாமும் நிகழ் காலத்திலேயே  இறைவனோடு ஒன்றித்து வாழ்ந்தால் லௌகீக மரணம் நம்மை எந்த விதத்திலும் பாதிக்காத ஒரு சாதாரண நிகழ்ச்சி ஆகிவிடும்.

இறைவன் எப்போதும் நம்மோடு இருக்கிறவர்.

(இருக்கிறவர் நாமே.)

"இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார். 

அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது; முன்பு இருந்தவையெல்லாம் மறைந்து விட்டன" 
(திருவெளிப்பாடு 21:3,4)

கடவுள் ஆரம்பமும் முடிவும் இல்லாதவர்.

ஆனாலும் நமது ஆன்மீக வாழ்வுக்கு ஆரம்பமும் நோக்கமும் அவரே.

ஒவ்வொரு வினாடியும் அவர்  நிகழ் காலத்திலேயே வாழ்பவர்.

நாமும் அவரோடு நமது வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் நிகழ் காலத்திலேயே வாழ்வோம். 

மண்ணுலகில் ஆரம்பித்த ஆன்மீக வாழ்வு   விண்ணுலகிலும் தொடரும். 

கடவுள் மணவாளன், நமது ஆன்மா அவரது மனவாட்டி. 

ஒவ்வொரு நாளும் நமக்கு முதல் நாளே.

ஒவ்வொரு இரவும் நமக்கு முதலிரவே.

லூர்து செல்வம்

Saturday, July 26, 2025

"இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார்."(லூக்கா நற்செய்தி 10:37)



"இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார்."
(லூக்கா நற்செய்தி 10:37)

திருச்சட்ட அறிஞர் ஒருவர் "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்று கேட்டபோது இயேசு நல்ல சமாரியன் உவமையைக் கூறி

 "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார்."

பயணத்தின்போது கள்வர்களால் அடிபட்டு குற்றுயிராக விடப்பட்ட யூதர் ஒருவருக்கு அவரது இனத்தைச் சேர்ந்த குருவும், லேவியரும் உதவி செய்யாமல் போய்விடுகிறார்கள்.

ஆனால் கலப்பின மக்களாக யூதர்களால் ஒதுக்கப்பட்ட சமாரியர் ஒருவர் உதவி செய்கிறார்.

உவமையைக் கூறி விட்டு இயேசு திருச்சட்ட அறிஞரிடம்

"கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?" என்று இயேசு கேட்டார். 

அதற்கு திருச்சட்ட அறிஞர், "
 "அவருக்கு இரக்கம் காட்டியவரே" என்றார். 

இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார். 

இயேசு கேட்ட கேள்வியை அவரது கோணத்திலிருந்து தியானிப்போம்.


"நீ உன்னை நேசிப்பது போல உன் அயலானையும் நேசி."

இது இயேசு நமக்குக் கொடுத்திருக்கும் கட்டளை.

இயேசு போதகர் மட்டுமல்ல சாதகரும் கூட.

தனது போதனையைத் தானே சாதித்து மற்றவர்களுக்குப் போதித்தவர்.

"நீ உன்னை நேசிப்பது போல உன் அயலானையும் நேசி."

இது அவருடைய போதனை.

இதை எவ்வாறு சாதித்தார்?

இயேசுவுக்கு அயலான் யார்?

அவரால் படைக்கப்பட்ட மனிதன் தான் அவருக்கு அயலான்.

இயேசு கடவுள். கடவுள் என்றாலே அன்பு.

கடவுள் தன்னைத் தானே நித்திய காலமும் அளவில்லாத விதமாய் அன்பு செய்கிறார்.

அவர் அவரையே அன்பு செய்வது போல 
அவரது அயலானாகிய நம்மை அளவில்லாத விதமாய் அன்பு செய்கிறார்.

தன் அயலானுக்காக தன் உயிரைத் தியாகம் செய்வதை விட மேலான அன்பு இருக்க முடியாது.

தன்னையே தனது சிலுவை மரணத்தின் மூலம் நம் மட்டில் அவருக்கு இருந்த அளவு கடந்த அன்பை வெளிக்காட்டினார்.

திருச்சட்ட அறிஞர் இயேசுவிடம் கேட்ட கேள்வி என்ன?

  "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" 
(லூக்கா நற்செய்தி 10:29)

அதாவது என் அயலான் யார்?

திருச்சட்ட அறிஞர் ஒரு யூதர்.

அவரது கேள்விக்குப் பதிலாகத்தான் இயேசு நல்ல சமாரியன் உவமையைக் கூறுகிறார்.

உவமையில் அடிபட்டுக் கிடப்பவர் யூதர்.

உதவி செய்தவர் சமாரியர்.

இயேசு என்ன கேள்வி கேட்டார்?

"கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?" என்று இயேசு கேட்டார். 
(லூக்கா நற்செய்தி 10:36)

அடிபட்டுக் கிடந்தவருக்கு அயலான் யார்?

கேள்வியைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

இயேசுவின் கட்டளை,

உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக" 
(லூக்கா.10:27)

உவமையில் தன் அயலானை அன்பு செய்தவர் சமாரியர்.

அப்படியானால் சமாரியரின் அயலான் யூதர்.

உதவி செய்தவருக்கு அயலான் யார் என்று இயேசு கேட்கவில்லை.

உதவி செய்யப் பட்டவருக்கு அயலான் யார், உதவி செய்தவரா,  செய்யாமல் போனவரா என்று கேட்கிறார்.

கேள்வியிலிருந்து என்ன புரிகிறது?

மற்றவர்களை அன்பு செய்பவர் அயலானா, அன்பு செய்ய மறுப்பவர் அயலானா என்று இயேசு கேட்கிறார்.

அன்பு செய்து, அதன் விளைவாக உதவி செய்தவர் தான் அயலான்.

அதாவது உதவி தேவைப் படுபவர் தன் இனத்தவரா, உறவினரா என்று கவலைப் படாமல் உதவுபவர் தான் அயலான்.

இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று சொல்கிறார்.

அதாவது குலம் கோத்திரம் பார்க்காமல் அன்புக்காகவே அன்பு செய்யும்.

‌Love for the sake of love, not for the sake of relationship. 

அப்படி அன்பு செய்பவன் தான் உண்மையான அயலான்.

இருவர் இருந்தால் இருவரும் ஒருவருக்கொருவர் அயலான் தான்.

இருவரிடமும் அயலானுக்கு உரிய பண்பு இருக்க வேண்டும்.

"நீரும் போய் அப்படியே செய்யும்" 

நீரும் குலம் கோத்திரம் பார்க்காமல் அன்புக்காகவே அன்பு செய்யும்.

இயேசுவின் வார்த்தைகளில் ஒரு ஆழமான மறையியல் உண்மை பொதிந்திருக்கிறது.

அடிபட்டுக் கிடந்தவர் யூதர்.
உதவி செய்தவர் அவருக்கு இரக்கம் காட்டிய சமாரியர்.

கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இரக்கம் காட்டிய சமாரியர் தான் அயலான் என்று அறிஞர் கூறுகிறார்.

நீரும் போய் அப்படியே செய்யும்" என்றால் எப்படிச் செய்ய வேண்டும்?

சமாரியர் (யூதர் அல்லாதவர்) செய்தது போல திருச்சட்ட அறிஞர்
(யூதர்) செய்ய வேண்டும்.

யூதர்கள் தங்கள் இனத்தைச் சேர்ந்தவன் தான் தங்களுக்கு அயலான் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

அதனால் தான் சமாரியர்களை ஒதுக்கி வைத்திருந்தார்கள்.

ஒதுக்கி வைக்கப்பட்ட சமாரியர் செய்தது போல யூதராகிய திருச்சட்ட அறிஞர் செய்ய வேண்டும்.

வார்த்தைகளில் அடங்கியுள்ள மறையியல் உண்மை எது?

யூதருக்கு அயலான் சமாரியன்.

சமாரியர் யோசேப்பின் வழித் தோன்றல்கள், அதாவது இஸ்ரேல் மக்கள். ஆனால் கலப்பினமாக மாறிய இஸ்ரேலர்கள்.

யாக்கோபின் பன்னிரு புதல்வர்களில் பதினொருவருக்கும் பஞ்ச காலத்தில் உதவி செய்தவர் யோசேப்பு.

அவரது வழித்தோன்றல்களில் அசிரியர் படையெடுப்பின் போது அசிரியக் கலப்பு ஏற்பட்டு விட்டது.

ஆனாலும் அவர்களும் அபிரகாமின் பிள்ளைகள் தான்.

நாம் கடைக்குச் சென்று விலை கொடுத்து பன்னிரண்டு மாம்பழங்கள் வாங்கி வருகிறோம்.

அவற்றில் ஒன்று நாம் வரும் வழியில் கீழே விழுந்து அடிபட்டு விட்டது‌.

அதற்காக அதைக் குப்பைத் தொட்டியில் போட்டு விடுவோமா?

நாம் காசு கொடுத்து வாங்கியது.

இயேசு உலகிலுள்ள அத்தனை மக்களுக்காகவும் தான் பாடுகள் பட்டு இரத்தம் சிந்தி மரித்தார்.

அனைத்துப் பாவிகளுக்காகவும் தனது விலைமதிப்பில்லாத இரத்தத்தை விலையாகக் கொடுத்திருக்கிறார்.

அனைவரும், இன் வேறுபாடின்றி,
இயேசுவில் நமது சகோதரர்கள்.

அவர்களிலும் உதவும் குணமுள்ள நல்ல சமாரியர்கள் இருக்கிறார்கள்.

நல்ல சமாரியன் உதவினான்.

அவனும் அயலான் தான்.

"நீரும் போய் அப்படியே செய்யும்" என்று இயேசு கூறியதற்கு "உதவி செய்தவனைப் போல நீரும் உதவி செய்யும்"

அதாவது "இன வேறுபாடின்றி தேவையில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் உதவி செய்யும்." என்றார்.

இதில் தான் இன வேறுபாடின்றி உலகோர் அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்ற மறை உண்மை அடங்கியிருக்கிறது.

உவமையில் வரும் குரு, லேவியரைப் போல் நாம் செயல்படக் கூடாது.

அவர்கள் அவர்களுடைய இனத்தவருக்கே உதவி செய்யவில்லை.

பிறரன்பு இல்லாதவர்கள் என்று அர்த்தம்.

அனைவரும் இறைவனின் பிள்ளைகளே என்று ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும், பிறரன்பும் உள்ளவர்கள் தான் இயேசுவின் சகோதரர்கள் என்ற பெயருக்கு அருகதை உள்ளவர்கள்.

இஸ்ரேலுக்கும் , ஈராக்குக்கும் போர் நடந்து கொண்டிருக்கிறது.

இஸ்ரேலர்களும், இஸ்லாமியர்களும் ஆபிரகாமின் பிள்ளைகள்தான்.

போருக்குக் காரணம் சகோதர பாசமின்மை.

ஆபிரகாமின் கடவுளும், ஈசாக்கின் கடவுளும், யாக்கோபின் கடவுளும் ஒருவர் தான்.

அப்படியானால் இஸ்ரேலர்களும், இஸ்லாமியரும் ஒரே கடவுளைத்தான் வழிபடுகிறார்கள்.

இல்லை, வழிபடுவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.

உண்மையில் அவர்களிடம் இறையன்பும் இல்லை, பிறரன்பும் இல்லை.

அவர்கள் ஒருவரையொருவர் அயலானாக ஏற்றுக் கொள்ளவில்லை.

ஏற்றுக் கொள்ளும் வரை, போருக்குத் தீர்வு கிடையாது.

நாம் இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனையும் நமது அயலானாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு உதவி செய்வோம்.

லூர்து செல்வம்.